துணிவே துணை - தமிழ்வாணன்
அன்பு
அறிவு
ஆண்டவன்
துணிவே துணை
இது என்னுடைய சிறுவயது முதற்கொண்டே என்னுடைய உயிர்க் கொள்கையாக இருந்து வருகிறது.
நீ துணிவு உடையவனாக இரு. உன்னைத் துணிவு உடையவனாக நீ ஆக்கிக் கொள். துணிந்து செயல்படு. அப்படிச் செயல்பட்டால், வாழ்க்கையில் நீ முன்னேறுவாய் என்று அந்தக் காலத்தில் எனக்கு எவரும் சொல்லித் தரவில்லை!
சிலருக்கு இயல்பாகவே காரச்சுவை அல்லது கசப்புச் சுவையில் வேட்கை இருப்பதுபோல என் உள்ளத்திற்கு இயல்பாகவே இந்தத் துணிவுச் சுவையில் ஓர் ஈடுபாடு இருந்தது. அந்த ஈடுபாடு, எவ்வளவு நன்மையையும் நலத்தையும் நயத்தையும் பயக்கக்கூடியது என்பது, பின்னால்
நான் பல ஆங்கில மனயியல் நூல்களைப் படிக்கும்போது தெளிவாக விளங்கியது. அந்த நூல்கள் என்னுடைய இயல்பான துணிவுச் சுவையை மேலும் மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதுணை செய்தன. இன்னமும் உறுதுணையாக இருந்து வருகின்றேன்.
அந்த நூல்களில் நான் படித்த கருத்துக்களே என்னுடைய அன்றாட வாழ்க்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவங்களாக இருந்து வந்திருக்கின்றன.
அனுபவங்கள்தாம் ஒரு மனிதனுடைய உயர்வுக்கு ஏணிப்படியாக அமைகின்றன. இது உறுதி; உறுதியிலும் உறுதி.
அன்பே துணை.
அறிவே துணை.
அண்ணாமலையார் துணை.
இந்த மாதிரி ஏதாவது ஒரு துணையைப்பற்றிக் கொள்ளாமல் நீங்கள் ஏன் துணிவையே துணையாகக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று பலர் என்னைக் கேட்டார்கள்! அன்பு, அறிவு, ஆண்டவன் இந்த மூன்றையும்விடத் துணிவில் அவ்வளவு பெரிய சிறப்பு என்ன இருக்கிறது என்பது அவர்களுடைய கருத்து!
———-
அன்பே துணை
அறிவே துணை
கடவுள் துணை
என்பதை விட…
அன்பைக் காட்டிலும் துணிவு பெரிது, அறிவைக் காட்டிலும் துணிவு பெரிது. ஆண்டவனைக் காட்டிலும் துணிவு பெரிது என்று நான் சொல்லவில்லை.
அன்பு என்பது, ஒரு மனிதனுடைய உயிரைப் போன்றது. அறிவு என்பது, ஒருவனுடைய கண்களைப் போன்றது. கண்ணைக்கொண்டு ஒரு மாமரத்தின் உச்சியிலுள பழுத்த மாம்பழத்தைப் பார்க்கத்தான் முடியுமே தவிர, அந்த மாம்பழத்தை எட்டிப் பறிக்க முடியாது. மரத்தில் ஏறிப் போய் அந்தக் கனியைப் பறிப்பதற்கு, வலுவான கைகளையும், கால்களையும் அவன் பெற்றிருக்க வேண்டும். துணிவு என்பது, அந்தக் கைகளைப் போன்றது.
ஒரு மனிதன் தன் கை கால்களால் உழைத்துச் சாப்பிடுகிறான். நான் உயிர் வாழ்வதற்கு வேறு எவர் துணையையும் நம்பி இருக்கவில்லை. என் கை கால்களையே நான் நம்பியிருக்கிறேன் என்று அவன் சொல்லுகிறான்.
அவனைப் பார்த்து, நீ ஏன் உன் கை கால்களை நம்ப வேண்டும்? உன்னுடைய உயிரை மட்டும் நம்பியிருந்தால் போதாதா? அல்லது உன் கண்களை மட்டும் நம்பியிருந்தால் போதாதா? அல்லது கடவுளை மட்டுமே நம்பியிருந்தால் போதாதா? உயிரையும் கண்ணையும்விட, கை கால்களுக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? என்று எவராவது கேட்பார்களா?
கேட்கமாட்டார்கள்.
காரணம் நாம் எல்லோருமே கை கால்களை முழு அளவுக்குப் பயன்படுத்தி வருபவர்கள். நமக்கு உயிர் இருந்தாலும், கண் இருந்தாலும், கை கால்கள் இல்லாவிட்டால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை நாம் அனுபவத்தில் அறிந்திருக்கிறோம்! தெளிவாக அறிந்திருக்கிறோம்.
ஆனால்,துணிவைப் பற்றி அத்தகைய அனுபவம் நம்மில் பெரும்பாலோருக்குக் கிடையாது. அதனால்தான் அவர்கள் அன்பை மட்டும் துணையாகக் கொண்டு ஒரு மனிதன் வாழ முடியாதா? அல்லது அறிவை மட்டுமே துணையாகக் கொண்டு ஒரு மனிதன் வாழ முடியாதா? அன்பே சிவம் அல்லவா? அறிவே இறைவன் அல்லவா? அன்புக்கும் அறிவுக்கும் இல்லாத சக்தி துணிவுக்கு இருக்கிறதா, என்றெல்லாம் கேட்கிறார்கள்!
துணிவு என்கிற சொல்லுக்கு நம்மிலே பலர் தவறான பொருள் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
துணிவு என்றால், எதற்கும் அஞ்சாத முரட்டுத் தனம் அல்லது கண்மூடித்தனமான அசட்டுத் தைரியம் என்று பொருள் அல்ல. அஞ்ச வேண்டுவதற்கு அஞ்ச வேண்டும்; அஞ்சக்கூடாதவற்றுக்குச் சிறிதும் அஞ்சக்கூடாது. இதுவே துணிவின் அடிப்படை இலக்கணம்.
இளங்கன்று பயம் அறியாது என்று சொல்கிறோம். ஒரு தவழும் குழந்தை ஊர்ந்து செல்கிற பாம்பைப் பிடித்து விடலாம். அப்படிப் பிடித்துவிட்டால், அது ஒரு துணிவுள்ள குழந்தை என்பது பொருள் அல்ல.
பாம்பைப் பிடித்தால், அது கடிக்கும்; பாம்பு கடித்தால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரியாது. தெரிந்தால் அது பாம்மைப் பிடிக்காது!
அதே போல், ஒரு காரியத்தில் ஈடுபடுவதனால் எத்தகைய ஆபத்துகள் நேரக்கூடும் என்பதை உணராமலே சிலர் ஈடுபட்டு விடுகிறார்கள் அல்லவா? அப்படி ஈடுபடுவது மூடத்தனத்தின் அடையாளம், துணிவின் அடையாளம் அல்ல!
நம்மில் பலர், துணிவு என்ற சொல்லுக்கு அத்தகைய மூடத்தனத்தையே பொருளாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே, துணிவைத் துணையாகக் கொள்ளாதே அறிவைத் துணையாகக் கொள் என்று அவர்கள் கூறுவது, ‘மூடத்தனத்தைத் துணையாகக் கொள்ளாதே - அறிவுடைமையைத் துணையாகக் கொள்’ என்ற கருத்திலேதான!
ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பு அதனால் விளையக்கூடிய நன்மை தீமைகளை நன்றாகச் சீர்தூக்கிக் பார்த்து, அதன் பிறகே அந்தக் காரியத்தில் இறங்க வேண்டும் என்றான் வள்ளுவன். அப்படிச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள கருவியே அறிவு. இந்த அறிவு, ஒருவனுக்கு எவ்வளவு கூர்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவன் தீர்க்கதரிசியாக விளங்குவான். அதாவது, பின்னால் நடக்கப் போவதை முன்னாலேயே ஊகித்து உணரக் கூடியவனாக இருப்பான்.
அமைச்சர்களாய் இருப்பவர்களுக்கு இந்த அறிவின் திறம் பெரும் அளவுக்கு அமைந்திருக்க வேண்டும் என்கிறான் அதிவீரராம பாண்டியன். அதேபோல், தானைத் தலைவர்கள் அதாவது, ஒரு பெரும் படைக்குத் தலைமை தாங்கி நடத்துகிற சேனாதிபதிகள் போர்க்களத்தில் மிகுந்த துணிவு உடையவர்களாக விளங்கவேண்டும் என்று அவன் சொல்கிறான்.
இன்றைய உலகில் நம்முடைய அன்றாட வாழக்கை ஒரு போர்க்களம் போல் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் ஆதரவுச் சக்திகளும் எதிர்ப்புச் சக்திகளும் கலந்து காணப்படுகின்றன. இதிலே ஆதரவுச் சக்திகளின் துணையைக் கொண்டு எதிர்ப்புச் சக்திகளை நாம் வெல்ல வேண்டும். அப்படி வெல்லாவிட்டால், வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் தோல்வி அடைந்துவிடுவோம்.
ஓர் அரசாங்கத்திற்கு, மந்திரி சேனாதிபதி ஆகிய இருவரும் எவ்வளவு இன்றியமையாதவர்களோ, அப்படி நம் உலகில் வாழ்க்கைக்கு அறிவும் துணிவும் இன்றியமையாதவை!
போர் நடத்துவதா, அல்லது போரிட முடியாமல் எதிரியுடன் சமாதானமாகப் போய் விடுவதா? என்பதை முடிவு செய்வதிலே பெரும் பொறுப்பு மந்திரிக்குத்தான் உண்டு. போருக்குப் போவது என்று மந்திரி முடிவுசெய்து விட்டாரானால், அந்தப் போரை எப்படி நடத்துவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை சேனாதிபதியைச் சேர்ந்தது.
இந்த மாதிரி, ஒரு காரியத்தில் நாம் இறங்குவதா வேண்டாமா என்பதை நம்முடைய அறிவு முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை நம்முடைய துணிவு செயல்படுத்த வேண்டும். கிடைக்கப்போவது வெற்றி!
———–
உயரத்திலிருந்து குதிப்பதெல்லாம் துணிவாகிவிடாது!
ஒருவன் தன்னுடைய துணிச்சலை உலகிற்கு எடுத்துக் காட்ட விரும்பி, மிக உயர்ந்த ஒரு கட்டடத்திலிருந்து குதித்துக் காட்டுகிறேன் என்று கூட்டத்தை கூட்டி, குதிக்க முற்படுவானேயானால் அவனை எந்த இரகத்தில் சேர்ப்பது? அப்படிக் குதித்தால் உயிரை இழக்க நேரிடும். அல்லது கைகால் உடைந்துபோகும் என்பதை உணர்பவனாக இருக்க வேண்டும். அவ்வாற அவன் உணராது போனால், அதைவிட மடத்தனமான செயல் எதுவுமே இருக்க முடியாது.
அதே நேரத்தில் பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்திலிருந்து பாரசூட் உதவியுடன் குதிப்பது என்பது உண்மையிலேயே துணிச்சலான காரியம். பாரசூட்டின் உதவியுடன் பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து குதிப்பது என்பது எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய செயலல்ல. அப்படிக் குதிப்பவர்களின் துணிச்சல் இருக்கிறதே, அது மற்றவர்களால் பாராட்டக்கூடிய ஒன்றுதான்.
அதில் எள்ளளவும் ஐயமில்லை. கட்டடத்தின் உயரத்தில் இருந்து குதிப்பதற்கும் விமானத்திலிருந்து குதிப்பதற்கும் தேவையான துணிச்சல் முற்றிலும் வேறுபாடானது.
முன்னது, மடத்தனமான துணிச்சல; பின்னது, உண்மையான துணிச்சல். அறிவும் துணிவும் இணைந்து அதனால் செயலாற்றப்படுகின்ற காரியங்களே உண்மையான துணிவின் இலக்கணம்.
ஒருமுறை பாரசூட்டிலிருந்து குதித்த ஓர் இளைஞரை ஒரு மனஇயல் நிபுணர் அணுகிப் பேசினார். பாரசூட்டில் இருந்து குதித்த நேரத்தில், இளைஞருடைய மனநிலை எப்படி இருந்தது எனக் கேட்டார்.
”ஒரு கயிற்றையும் ஒரு வலையையும் நம்பி பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதிப்பதாவது? இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அப்படிக் குதிப்பதனால் நமக்கு என்ன வந்துவிடப் போகிறது? நாம் ஒன்றும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் குதிக்கப் போவதில்லையே? வெறும் விளையாட்டுத்தானே? நான்கு பேர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்குத்தானே? பாராட்டிற்காகவும் விளையாட்டிற்காகவும் உயிரைப் பணயம் வைப்பதாவது? என்றெல்லாம் என் மனம் எண்ணியது. கீழே நோக்கினேன். கண்ணுக்கு எட்டிய வரையில் தரையே தெரியவில்லை. கோடு கோடாக ஏதோ தெரிந்தன. அவை ஆறுகள் என்று ஊகித்துக்கொண்டேன். கருமையும் வெண்மையும் கலந்த மேகக்கூட்டங்கள். பார்க்கவே அச்சமாக இருந்தது. எனக்குப் பின்னால் குதிக்க வேண்டும் என்று இரண்டுபேர் காத்திருந்தார்கள். அவர்கள் என்னை கேலியாகப் பார்த்தார்கள். என்னுடைய இயேசுவை நினைத்துக் கொண்டேன். இதற்கு முன் குதித்த பலர் பாதுகாப்புடன் தரையை அடைந்ததையும் நினைத்துக் கொண்டேன். அந்தக் குறுகிய நேரத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன்.
”என்ன நினைத்தேனோ தெரியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு டக்கென்று குதித்துவிட்டேன். இனம் புரியாத ஓர் உணர்வு. வானத்தில் மிதக்கும்போது ஏற்பட்ட என் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாத காரியம். சிறிது நேரத்திற்கெல்லாம் எனக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. தரையை விரைவில் எட்டிவிடக் கூடாது. மிதந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியது என் மனம். என்னையும் அறியாமல் ஏதோ ஓர் உற்சாகம் பிறந்துவிட்டது. பத்திரமாகத் தரையில் இறங்கினேன். அதற்குப் பிறகு பலமுறை குதித்துப் பழகினேன். இன்று என்னுடைய விருப்பமான பொழுதுபோக்கு விமானத்தில் இருந்து குதிப்பதுதான். எந்த ஒரு செயல் என்னுடைய பய உணர்வைத் தூண்டியதோ அதுவே இன்று எனக்குப் பொழுது போக்காகிவிட்டது.
”என்னைப் பொறுத்தவரையில் பயம் என்பது பழகும் வரைக்கும்தான். பழகிவிட்டால் அதுவே பொழுதுபோக்கு. அறிவுபூர்வமான ஒரு துணிச்சல் இத்தகைய ஓர் உற்சாகத்தைத் தரக்கூடியதே. அத்தகைய ஒரு துணிச்சல் மற்றவர்களால் பாராட்டப்படும்போது அதனால் கிடைக்கும் இன்பமே தனி” என்று பதிலளித்தார் அந்த இளைஞர்.
————
அறிவும் துணிவும் இணைய வேண்டும்
ஒருவருக்கு நல்ல அறிவு இருக்கிறது. ஆனால், அந்த அறிவின் முடிவுகளைச் செயல்படுத்துவதற்கான துணிவு அவரிடம இல்லை என்றால், அவரால் எந்த ஓர் அரிய காரியத்தையும் சாதிக்க முடியாது.
முடியும், ஓர் ஆட்சியிலே அறிவிற் சிறந்த மந்திரிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய ஓர் இராணுவம் கிடையாது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நாடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இராணுவ பலம் வாய்ந்த ஒரு சிறிய நாடு கூட எளிதில் அந்த நாட்டைக் கைப்பற்றித் தனக்கு அடிமையாக்கிக் கொண்டுவிடும் அல்லவா?
அதுபோலவே, ஒரு மனிதன் இருந்தானானால், செயல் திறன் வாய்ந்த ஒரு சாதாரண மனிதன் கூட வாழக்கைப் போராட்டத்தில் அவனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தான் முன்னுக்கு வந்துவிடுவான். இந்தச் செயல்திறன் துணிவு. ஒருவனிடத்தில் துணிவு மட்டும் இல்லை. ஆனால் மற்ற சிறப்புகளெல்லாம் இருக்கின்றன என்றால், பயன் இல்லை. இராணுவம் இல்லாத நாடு இருப்பதும் இல்லாதிருப்பதும் ஒன்றே!
‘திறனோடு செயல்படுவதே தர்மயோகத்தின் இலக்கணம்’ என்று பேசுகிறது பகவத்கீதை.
இந்த அடிப்படையில் பார்த்தால் துணிவுடமை என்பது இந்த உலகத்தில் வெற்றிக்கு மட்டுமல்ல. இறைவனை நோக்கி ஆன்மா முன்னேறிச் செல்வதற்கும் கூட அதாவது சாதாரண மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுள் தன்மையை அடைவதற்குக்கூட துணிவே வேண்டும்.
துணிவு இருந்தால் எல்லாம் உண்டு. துணிவு இல்லாவிட்டால் எதுவும் இல்லை!
சில அரசியல் கட்சிகளில் நன்றாக உழைக்கும் தொண்டர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டி, சரியான துணிவைக் கொடுத்து அவர்களை அழைத்துச் செல்லக்கூடிய தலைவர்கள் இருக்கமாட்டார்கள். வெறும் உழைப்பு மட்டும் இருந்து இந்த உழைப்பைச் சரியான துணிவுள்ள வழியில் பயன்படுத்துதற்குரிய அறிவுத் திறனைப் பெற்றிராத மனிதன் அந்த அரசியல் கட்சியைப் போன்றவனகாவேயிருப்பான். சும்மா உழைத்துக் கொண்டேயிருந்து என்ன பிரயோஜனம்? மாடு மாதிரி!
வேறு சில கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் அறிவுத் திறன் உள்ள தலைவர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி நிறைவேற்றுவதற்குரிய தொண்டர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல அறிவுத்திறன் இருந்தும் துணிவில்லாத காரணத்தினால் இந்தக் கட்சி மாதிரி முன்னேறாமலேயே கிடந்து நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டிருப்பார்கள்.
————
ஃபோர்டி-ன் துணிச்சல்
உலகில் ஃபோர்ட் காரைப் பற்றித் தெரிந்திராதவர்கள் இருக்க முடியாது. ஃபோர்டு பரம்பரைப் பணக்காரர் அல்லர். சாதாரணமாக குடும்பத்தில் பிறந்தவர். அவர் தம்முடைய வாழ்க்கையைத தொடங்கும்போது மிக எளிமையாகத் தான் தொடங்கினார்.
ஆனால் இன்று - உலகில் குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளத்தக்க பணக்காரர்களுள் ஃபோர்டும் ஒருவர். ஃபோர்டு கம்பெனி ஒரு நிமிடத்திற்கு ஒரு காரை உற்பத்தி செய்கிறது. அந்த அளவிற்கு அவரது வளர்ச்சிக்குக் காரணம்?
துணிவு!
அறிவு!
செயல்திறன்!
அவரிடம் இந்த மூன்றுமிருந்தன. அறிவையும் செயல் திறனையும்விடத் துணிவே அவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது.
அவருக்கு தாமே கார்த் தொழிற்சாலையைச் சிறிய அளவில் தொடங்கி நடத்தினால் என்ன என்று ஓர் எண்ணம்.
இவருக்கு முன்னரே வெற்றிகரமாக நடந்து வந்த கார்த் தொழிற்சாலையை அணுகினார். அவர்கள், அந்தத் தொழிற்சாலையில் உள்ள கஷ்ட நஷ்டங்களைச் சொன்னார்களே தவிர, அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எதையும் சொல்லிவிடவில்லை. காரை முழுமையாக்கி வெளிக்கொண்டு வருவதற்கான உதிரிப்பொருள்கள் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று பலரும் எடுத்துச் சொன்னார்கள். போர்டு தயங்கவில்லை. திட்டங்களை வகுத்தார். அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். எந்த இடத்திலும் அவர் தவறான கணக்கைப் போடவில்லை. சிறிய அளவில் தொடங்கிய அவருடைய துணிவும் திறமையும் செயல்திறனும் சிறிதும் குறையவில்லை. வளர்ந்துவிட்டதே என்று அவர் சும்மா இருக்கவில்லை. புதுமைகள் பலவற்றைப் புகுத்தினார். உலக மக்களைக் கவர்ந்தார். வெற்றி கண்டார். இன்று உலகில் அவருடைய கார் ஓடாத நாடுகளே இல்லை.
————
செயல் திறனும் வேண்டும்
அறிவுத்திறன், செயல்திறன் இந்த இரண்டும் நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை. இந்த இரண்டில் அறிவுத் திறன் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். இருந்தாலும்கூட, திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்தாவது, அந்தத் தவறுகிலிருந்து கிடைக்கிற அனுபவத்தின் அடிப்படையிலே, ஒரு மனிதன் தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
ஆனால் செயல்திறன் குறைவாக இருந்தால், வெறும் சிந்தனையால் மட்டும் அதை வளர்த்துக் கொள்ள முடியாது. சரியாகவோ, தவறாகவோ செயல்படும் போது மட்டுமே, ஒருவனுடைய செயல்திறன் வளர்ச்சி அடைகிறது. செயல்படாமலே சும்மா இருக்கிற மனிதன் இயல்பிலேயே ஒரு பேரறிவாளனாக இருந்தாலும்கூட, அந்தப் பேரறிவு அவனுக்குப் பயன்படாமல் பிறருக்கும் பயன்படாமல் மங்குகிறது. துருப்பிடிக்கிறது. நாளடைவில் மறைந்து விடுகிறது.
இந்த முறையில் பார்க்கும்போது ஒருவனுக்கு அறிவுத் திறன் கொஞ்சம் குறைவாய் இருந்தாலும் குற்றம் இல்லை. துணிவுதான் அவனிடம் குறைவில்லாமல் இருக்கவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
துணிவின் துணை மட்டும் உறுதியாக இருக்குமேயானால் அறிவில் குறைந்தவன்கூட நாளடைவில் ஒரு பேரறிஞனாக வளர்ச்சியடைந்துவிடலாம். இதனாலே தான், நான் துணிவே துணை என்பதை என் உயிர்க் கொள்கையாகக் கொண்டு நிற்கிறேன்.
———-
தாய்மார்கள் பால் மட்டுமா புகட்டுகிறார்கள்?
பயத்தையுமல்லவா புகட்டுகிறார்கள்!
பய உணர்வு என்பது திடீரென்று முளைத்துக் கிளர்ந்து எழுவது அல்ல. அது இளம் வயது முதலே ஊட்டப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் தாய்மார்களால்தான் ஊட்டப்படுகிறது.
பிள்ளை அடம்பிடித்தவுடனேயே அவர்கள் கையில் இருக்கும் மருந்து ‘பூச்சாண்டி’ என்ற வார்த்தைதான். பூச்சாண்டி பூச்சாண்டி என்று சொல்லியே பிள்ளைகளைப் பயமுறுத்தி வைக்கிறார்கள். பூனை, மாடு இப்படி ஏதாவது ஒன்றைச் சுட்டிக் காட்டியும் பயமுறுத்துவது உண்டு.
இத்தகைய பிள்ளைகள் மெல்ல மெல்லத் துணிவு மனப்பான்மையை இழந்துவிடுகின்றன. இந்த மனநிலை, வளர்ந்துவிட்ட வாழ்க்கை நிலையிலும் தொடர்கிறது. அதன் காரணமாக அவர்கள் திறமையற்றவர்களாகி விடுகிறார்கள். எப்போதும் ஓர் அச்ச உணர்வு அவர்களை வாட்டிக்கொண்டே இருக்கிறது. தன்னம்பிக்கையை இழக்கும் நிலையும் வருகிறது. தாய்மார்கள், அடம்பிடிக்கும் பிள்ளைகளை வேறு வழிகளில் சமாதானப்படுத்த முயல வேண்டுமேயொழிய கண்டவற்றையும் சொல்லிப் பயமுறுத்தக் கூடாது.
———
பூச்சி-பூரானைக் கண்டாலும் பயம்
அர்த்தமில்லாத பயங்களுள் இந்த வகையும் ஒன்று. மனிதன் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தைப் பிடித்தக் கூண்டிலடைத்து, பழக்கித் தன் வழிக்குக் கொண்டுவந்து சர்க்கஸ் வித்தையைச் செய்துகாட்டச் செய்து அதன் வாய்க்குள் தலையை விட்டுக் காட்டிக் காசு சேர்த்து விடுகிறார். அத்தகைய திறமை மனிதனிடத்தே இருக்கிறது. இத்தகைய மனிதர்களோடு பிறந்தவர்கள்தாம் நாமும்.
அப்படியிருக்கும்போது பூச்சியையும் பூரானையும் பார்த்துப் பயப்படுவது என்பது எத்தகைய ஒரு கேலிக்குரிய செயல்? நம்மிடம் அறிவு இருக்கிறது. நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்குத் திறமை இருக்கிறது. ஒரு விளக்குமாறு, ஒரு செருப்பு இவை போதுமே பூச்சியையும் பூரானையும் சமாளிக்க! உயிர்களைக் கொல்வது பாவம் என்பதை உங்கள் மனம் எண்ணினால் விலகிச் செல்ல வேண்டியதுதானே! ஏன் இந்தப் பதற்றமும் ‘ஆ’ ‘ஓ’ என்ற கூச்சலும்?
———–
நாம் எந்த வகையான முன்னேற்றத்தில் அக்கறை காட்டுகிறோம்
துணிந்து செயல்படுவதால் மனிதன் முன்னேற்றம் அடைகிறான் என்று சொல்லப்படும் பொழுது, முன்னேற்றம் என்ற சொல்லின் பொருளைச் சிலர் சரியாகப் புரிந்து கொள்வது இல்லை. முன்னேற்றம் என்றால் என்ன? பொருளாதார முன்னேற்றமா? வாழ்க்கை வசதிகளில் முன்னேற்றமா? ஆன்மீக முன்னேற்றமா? இவற்றுள் எந்த முன்னேற்றத்தை நம்மவர்கள் முன்னேற்றம் என்று நினைக்கிறார்கள்?
ஆன்மீக முன்னேற்றத்துக்குக்கூடத் துணிவின் துணை வேண்டும். ஆனால், ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாதவர்கள்தாம் நம் சமுதாயத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆகையால் ஆன்மீகத்தில் துணிவின் துணையைக் கொண்டு முன்னேறுவது எப்படி என்பதை இப்போது சொல்லுவதில் பயன் இல்லை.
அதே போல,மன வலிமையில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தைப் பற்றி நாம் இப்போது ஆராய வேண்டாம். ஏனென்றால் மன வலிமை என்றால் என்ன?
அதை ஏன் ஒரு மனிதன் முயன்று தேடிக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பேர் அறிந்திருந்தாலும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!
புகழில் ஏற்படுகிற முன்னேற்றத்தைப் பற்றியும் நம்மவர்கள் பெரும்பாலும் அக்கறை காட்டுவதில்லை. புகழுக்குரிய காரியங்களைச் செய்யவேண்டும். அவற்றின் மூலம் புகழைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பவையெல்லாம் உயர்ந்த குறிக்கோள். அந்தக் குறிக்கோள்களை நோக்கிச் செல்வதற்குத் தேவையான ஆர்வம், தினசரி வாழ்க்கைப் போராட்டத்தல் தவித்துக் கொண்டிருக்கிற நம்மவர்களுக்கு இருக்கும் என்று இன்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகையால், அது பற்றியும் இங்கே இப்போது பேசிப் பயன் இல்லை.
முன்னேற்றம் என்ற உடனேயே, பொருளாதார முன்னேற்றமும், அந்தப் பொருளைக் கொண்டு அடையக் கூடிய வாழ்க்கை வசதிகளின் முன்னேற்றமும்தான் நம்மில் பெரும்பாலோரது நினைவுக்கு வருகின்றன. அந்த இரண்டு முன்னேற்றங்களையும் அடைவதற்குத் துணிவுடமை துணை புரியுமானால் அதை வரவேற்பதற்கு நாம் தயாராக இருக்கலாம் அல்லவா?
——-
துணிவு என்பதற்குச் சிலர் புரிந்துகொள்ளும் விபரீதமான கருத்துகள்
தலைவலியால் சங்கடப்படுகிறவன், எந்த மருந்தைக் கொண்டாவது அந்தத் தலைவலியைப் போக்கிக்கொள் வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகிவிடுகிறான். வயிற்று வலியால் துடிதுடிப்பவன், அதைப் போக்கிக் கொள்வதற்கு எந்த மருந்தை வேண்டுமானாலும் சாப்பிடுவதற்குத் தயாராகி விடுகிறான். இந்தத் தலைவலியையும் இந்த வயிற்றுவலியையும் போலவே சமுதாயத்திலுள்ள பெரும்பாலான மக்கள், வறுமை என்ற நோயினால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் துணிவையே துணையாகக் கொண்டு தன் வறுமையைப் போக்கிக் கொண்டுவிடலாம் என்று அவர்களிடம் போய்ச் சொன்னால் உடனே அதற்கு அவர்கள் கொள்கிற அர்த்தம் விபரீதமானதாக இருக்கிறது.
பயந்துகொண்டே இருந்தால் நாம் ஒரு நாளும் பணத்தைப் பார்க்க முடியாது. துணிந்து இறங்கினால் தான் ஒரு கணிசமான பணத்தை நாம் நம் வாழ்நாளில் கண்ணால் பார்க்க முடியும் என்ற பாணியில் பேசுகிறவர் எத்தனையோ பேரை நாம் பார்க்கிறோம்!
சூதாட்டத்தில் ஏற்கெனவே மெல்ல மெல்லத் தன் செல்வத்தையெல்லாம் இழந்த ஒரு மனிதன், கடைசியில் மன் மனைவியின் கழுத்திலே தங்கத் தாலிக்குப் பதிலாக மஞ்சள் கயிற்றைக் கட்டி வைத்துவிட்டு அந்தத் தங்கத் தாலியை விற்றுச் சூதாடப் போகிறான். வந்தாலும் சரி, போனாலும் சரி என்று துணிந்து அந்தக் காரியத்தைச் செய்வதாக அவன் எண்ணிக் கொள்கிறான். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவன் கண்ட அர்த்தம்.
இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது!
வருகிற வருமானத்தையெல்லாம் ஒழுங்காகக் கணக்கு எழுதிக் காட்டினால், அதில் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் வருமான வரியாக எடுத்துக் கொண்டு விடுமே என்பதற்காக, பொய்க் கணக்கு எழுதிக் கறுப்புப் பணத்தைச் சோக்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படிப் பொய்க் கணக்கு எழுதுவது சட்டப்படிக் குற்றம் என்பது அவர்களுக்குத் தெரியும். தெளிவாகத் தெரியும். இருந்தாலும் அந்தக் குற்றத்தைத் துணிந்து செய்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவர்கள் கண்ட அர்த்தம்.
இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது!
அதிகார பீடத்தில் இருக்கிறவர்கள் இலஞ்சம் வாங்குவது ஒரு மாபெரும் குற்றம். இது அவர்களுக்குத் தெரியும். நன்றாகத் தெரியும்.
இருந்தாலும் இலஞ்சம் வாங்காமல், அரசாங்கம் கொடுக்கிற சம்பளம் ஒன்றை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால், எந்தக் காலத்திலும் தங்களுடைய வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். அதனால் துணிந்து இலஞ்சம் வாங்குகிறார்கள். துணிவு என்ற சொல்லுக்கு இதுதான் அவர்கள் கண்ட அர்த்தம்.
இத்தகையவர்களின் நிலை பரிதாபமானது.
———
இதுவா துணிவு?
தங்களுடைய வறுமையைப் போக்கிக்கொண்டு வாழக்கை வசதிகளிலும், பொருளாதாரத்திலும் ஒரு சிறப்பான முன்னேற்றத்தை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு பலர் துணிந்து திருடுகிறார்கள். பலர் துணிந்து கொள்ளை அடிக்கிறார்கள்.
பலர் துணிந்து பொய்க் கையெழுத்துப் போடுகிறார்கள். பலர் துணிந்து பொய்யான ரிக்கார்டுகளைத் தயார் செய்கிறார்கள். பலர் துணிந்து பொய் சாட்சி சொல்கிறார்கள்.
பலர் துணிந்து துரோகம் செய்கிறவர்கள், பலர் துணிந்து இழிசெயல்களில் இறங்குகிறார்கள். பலர் துணிந்து கொலை கூடச் செய்துவிடுகிறார்கள்! துணிவு என்ற சொல்லுக்கு இதுவா அர்த்தம்?
இவையெல்லாம் துணிவு மிக்கச் செயல்களே அல்ல. வடிகட்டின முட்டாள்தனமான செயல்கள் இவை. இந்த மடத்தனமான செயல்களையெல்லாம் துணிவான செயல்கள் என்று எண்ணிக் கொள்வதும் அறிவீனம்!
உழைப்பைக் கண்டு அஞ்சுகிற கோழைதான் சூதாட்டத்தில் இறங்குகிறான். உழைப்பைக் கண்டு பயப்படுகிற கோழைதான் கள்ள நோட்டு அச்சடிக்கிறான். ஏற்கெனவே பெரும்செல்வம் இருக்கும்போது அவன் எதற்காகச் சூதாட வேண்டும்? எதற்காகக் கள்ளநோட்டு அச்சடிக்க வேண்டும்?
செல்வம் நிலையில்லாதது என்று அவர்களுடைய உள்ளுணர்வு சொல்லுகிறது. அந்த நிலையற்ற தன்மையின் காரணமாக அவர்கள் கையில் இருக்கும் செல்வம் எல்லாம் கரைந்து போய் விடுமானால், அதற்கப்புறம் தாங்கள் வறுமைக்கு ஆளாக நேர்ந்துவிடுமே என்ற பயம் அவர்களை உறுத்தத் தொடங்குகிறது. அதனாலேயே அவர்கள் சூதாடுகிறார்கள்! கள்ள நோட்டு அச்சடிக்கிறார்கள்.
இருக்கிற செல்வம் போய்விட்டாலும், தங்களால் புதிய செல்வத்தை நேர்மையான வழியில் தேடிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குக் கிடையாது. தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால் உள்ளத்தில் கோழைத்தனம் பிறக்கிறது. அதுவே குற்றம் செய்யத் தூண்டுகிறது. துணிந்து குற்றம் செய்வதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். தங்கள் துணிவைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறார்கள்.
இது மடத்தனமான துணிவு!
——–
கொள்ளைக்காரர்கள் எல்லாம் வீரர்களா?
தங்கள் உயிரையே ஒரு பொருட்டாகக் கருதாத குற்றவாளிகள் உலகத்தில் மிகப் பலர் இருக்கிறார்கள். பெரிய கொலைக்காரர்கள்,
கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் ஆகியோரெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களைத் தாங்களே பெரும் துணிவு உடையவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இறுமாப்பு அடைகிறார்கள். விவரம் தெரியாத மக்களும் அவர்களுடைய வீர சாகசச் செயல்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். உண்மை என்ன? இவர்களில் எவருமே உண்மையான வீரர்கள் அல்லர். முதல்தரமான கோழைகள் இவர்கள்!
இவர்களிடம் நிரம்பப் பணபலம் இருக்கலாம். படை பலம் இருக்கலாம். ஆனால், அந்தப் பணத்தையும் படையையும் நேர்மையான வழியில் தேடிக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை, இவர்களுக்கு இயல்பிலே கிடையாது.
தன்னம்பிக்கை இன்மைதான் கோழைத்தனத்தின் அடிப்படை இலக்கணம்.
கோழைத்தனம் - குற்றம் இந்த இரண்டும், ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள், கோழைத்தனம் உள்ள இடத்தில் குற்றம் இருக்கும். குற்றம் உள்ள இடத்தில் கோழைத்தனம் இருக்கும். இது இயற்கை.
கோழைத்தனத்தின் காரணமாக மனிதன் முதலில் ஒரு சிறு குற்றத்தைச் செய்கிறான். அந்தச் சிறு குற்றம் அவனுடைய கோழைத்தனத்தைக் கூடுதல் ஆக்குகிறது! அந்தக் கூடுதல் கோழைத்தனம் அவனைப் பெரும் குற்றம் செய்யத் தூண்டுகிறது. அந்தப் பெரும் குற்றம் அவனைப் பெரும் கோழை ஆக்குகிறது. இப்படியாக, ஒரு விஷமச் சூழல் உருவாகி அவனை மேலும் மேலும் கோழையாகவும் குற்றவாளியாகவும் ஆக்கிக்கொண்டே போகிறது.
———–
வெளியே வீரன்; உள்ளே கோழை!
உண்மையான துணிவு என்பது ஒருவனுடைய உள்ளுணர்வுக்கு மட்டும்தான் தெரியுமே தவிர வெளி உலகத்துக்குத் தெரியாது. வெளி உலகம் அவனை ஒரு மாவீரன் என்று போற்றும். சந்தனத் தேவன், கட்டபொம்மன், ஜம்பு லிங்கம் போன்றவர்களெல்லாம் நம் தமிழகத்திலே இப்படிப் போற்றப்பட்டவர்கள்.
இன்றைக்குப் பெரிய பெரிய கொள்ளைக்காரர்களைப் பற்றிய கதைகள் பெரும் செலவில் திரைப்படமாக்கப்படுகின்றன. அந்த மாதிரிப் படங்களை நம் நாட்டு ஆண்களும் பெண்களும் எவ்வளவு ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்! மக்கள், அப்படி ஆர்வத்தோடு பார்ப்பதற்குக் காரணம் என்ன? அந்தக் கொள்ளைக்காரர்களின் பயங்கர அட்டகாசங்களை மக்கள் துணிவுடைமை என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள்.
உண்மையான துணிவு உடையவனை அவனுடைய பகைவனும் புகழ்ந்து போற்றுவானே, அந்த முறையில் தான் கொள்ளைக்காரர்கள் உயர்ந்த மதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
இப்படிப் போற்றப்படுகிற அந்தக் கொள்ளைக்காரர்கள், உண்மையில் தங்களை உயர்ந்த வீரர்கள் என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். ”நீ ஒரு கோழை” என்று கூறிக் கொண்டிருக்கிற அவர்களுடைய உள்ளுணர்வை, மக்களின் பாராட்டுக்கள் வாயடைக்கச் செய்துவிடுகின்றன!
அதனால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் பொருளாதார வசதி, வாழ்க்கை வசதி, புகழ் போன்றவற்றில், மேலும் மேலும் முன்னேற்றம் அடைவதற்கு முயற்சி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி முயற்சி செய்யாமல் இருப்பவன் நாளடைவில் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தவனாகிவிடுகிறான். மங்கிப் போய்விடுகின்றான், மக்கிப் போய்விடுகிறான்!
அறிவும் ஆற்றலும் எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த இரண்டும் நமக்கு முழுக்க முழுக்கப் பயன் உள்ளவையாக அமையும்!
-தொடரும்