Monday, 3 Aug 2009
பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் : சீமான்
சிங்கள இன வெறியர்களை எதிர்த்துப் போராடிய தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.
புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில், வழக்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பங்கேற்று பேசியது:
“புதுச்சேரியில் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். பிரபாகரன் என் அண்ணன் என்று கூறினேன். என்னை கைது செய்யும் போது புதுச்சேரியில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் கிடையாது. அதன் பின்னர்தான் அதைக் கொண்டு வந்தனர்.
எல்லோரும் பிறர் தங்களை தலைவர் என்று அழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தந்தை பெரியார்தான் உண்மையான தலைவர். தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்த பிரபாகரன்தான் உண்மையான தளபதி. என் குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக போராடுவேன் என்று வந்த பிரபாகரன்தான் உண்மையான தலைவன்.
சிங்கள இன வெறியர்களை எதிர்த்துப் போராடிய தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தியவர் தலைவர் பிரபாகரன்” என்றார் சீமான்.
Friday, 24 Jul 2009
தமிழர்கள் ஒன்றுபட்டால்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும்: பழ. நெடுமாறன்
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டால்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசினார் .
இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசுகையில்,
“இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களில், 3,000 பேருக்கு ஒரு கழிவறை கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்புதான் அவர்களைப் பழைய இடங்களுக்கு அனுப்ப முடியும் என்ற கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே .
ஆனால் அங்கு சிங்களர்களுக்கென குடியிருப்புகள் கட்டப்பட்டு, சிங்களர்கள் குடியேறி வருகின்றனர். தமிழர்களைச் சிறிது சிறிதாகச் சாகடிப்பதுதான் இவர்களின் நோக்கம்.
இந்தப் பிரச்னையில் ஐ.நா தலையிட்டு, ஐ.நாவின் கண்காணிப்பில் இலங்கைத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும்.
ராஜபக்சேவின் கொடுமையை விட தமிழக அரசு செய்யும் கொடுமை பெரிதாகவுள்ளது. செங்கல்பட்டு அகதிகள் முகாமில், வழக்கு விசாரணைக்கு உட்படாதவர்கள், விடுதலை பெற்றவர்கள் என அனைவரையும் அடைத்து வைத்துள்ளனர்.
இங்கேயே இவ்வளவு கொடுமை நடக்கிறது என்றால் ராஜபக்சே வின் கொடுமையை எவ்வாறு தட்டிக் கேட்க முடியும்? தமிழர்கள் ஒன்றுபட்டால்தான் இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற முடியும்” என்றார்.
வைகோ பேசுகையில்,
“இந்திய அரசு திட்டமிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அதிலும் கடந்த 10 மாதங்களாக ஆயுதம், பணம், பணத்தின் மூலம் மற்ற நாடுகளில் இருந்து ஆயுதம் பெற உதவி என எண்ணிலடங்கா துரோகத்தைச் செய்து வருகிறது.
இலங்கை போன்று செங்கல்பட்டிலும் சித்ரவதை முகாம் உள்ளது. இலங்கையில் தமிழர்களுக்குத் தனி தேசம் அமைப்பதற்கு என்ன உதவியும் செய்யத் தயாராக உள்ளோம்.
சிங்களர்களுக்கு அடிமையாக தமிழன் இருக்க முடியாது. இந்திய அரசு இந்த நிமிடம்வரை ‘போரை நிறுத்துங்கள்’ எனச் சொல்லவில்லை. இலங்கையின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுகிறோம் என்று கூறி இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்க வேண்டாம்” என்றார்.
ராமதாஸ் பேசுகையில், “ஐ.நா. சபையின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளன. இத்தனை அதிகாரம் உள்ள ஐ.நா.வினால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளை அகற்றப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் அங்கு மிச்சம் உள்ள போராளிகளை அழிக்கப் போகிறார்கள். விடுதலைக்குப் போராடிய எந்த இனமும் அழிந்ததாக வரலாறு இல்லை. வெற்றி பெற்றதாகத்தான் வரலாறு உள்ளது. உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் உசுப்பி விடப்பட்டிருக்கிறார்கள். வெற்றி பெறும் வரை இனி ஓயமாட்டோம். இலங்கையில் தனி ஈழம் தவிர எதுவும் தீர்வாகாது. செங்கல்பட்டில் எட்டு நாள்களாக உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளுக்காவது தமிழக அரசு கருணை காட்ட வேண்டும். இதைத் தவிர நாங்கள் எதுவும் கேட்கவில்லை. இலங்கைத் தமிழர் விடுதலை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் எதுவும் கேட்க மாட்டோம் என முடிவு செய்துவிட்டோம்; ஏனென்றால் கேட்டாலும் எந்தவிதப் பயனும் இல்லை என்பதால்தான்” என்றார் .
Wednesday, 22 Jul 2009
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை, இனி வரும் காலத்தில், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் வழி நடத்துவார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது:
‘இலங்கைத் தமிழர்கள் தற்போது நெருக்கடியான கால கட்டத்தில் உள்ளனர். கனவிலும் நினைக்க முடியாத பல்வேறு இழப்புகளை இலங்கைத் தமிழர்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக இலங்கை அரசு பிரசாரம் செய்து வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப, புதிய வழிமுறைகளுடன் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாக கட்டமைப்பு மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. போராட்டங்களும், அதற்கான உத்திகளும், காலத்திற்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் மாற்றமடையலாம். ஆனால், எங்களது தனி நாடு கோரிக்கை என்றும் மாறாது. எனவே, விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எப்போதுமே பிரபாகரன் தான் எங்கள் தலைவர். பிரபாகரனால், விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த செல்வராஜா பத்மநாதன், இனி வரும் காலத்தில், போராட்டங்களை வழி நடத்திச் செல்வார்.
போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்காக, ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். எங்களது எதிர்கால செயல்பாடுகளை வலுப்படுத்த, தமிழ் மக்களின் ஆதரவு தேவை. எங்களின் அமைப்பு தொடர்ந்து செயல்படுவதை, அடுத்த கட்ட போராட்டங்களின் மூலம் உலகிற்கு தெரியவைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து புலிகளின் செயற்குழு சார்பாக இந்த அறிக்கையை வெளியிடுவதாக சுரேஷ், ராம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில், புலிகளின் தலைமைச் செயலகம் எங்கிருந்து செயல்படுகிறது என்ற விவரம் வெளியிடப்பட வில்லை.
தமிழகத்தில் தலைமைச் செயலகம்? விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை, நேற்று முன்தினம் இரவு தமிழக பத்திரிகை அலுவலகங்களுக்கு பேக்ஸ் மூலம் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டன. அந்த எண், தனியார் பொது தொலைபேசி எண். இதன் மூலம் புலிகளின் அலுவலகம் சென்னையில் செயல்படுகிறதோ என்ற சந்தேகம், மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. புலிகளின் இந்த அறிக்கை, புலிகள் ஆதரவு இணைய தளங்களான “புதினம்’, “தமிழ் நெட்’ ஆகிய தளங்களிலும் வெளியாகியுள்ளது. எனவே, இந்த அறிக்கை, புலிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையாகக் கருதப்படுகிறது.
Wednesday, 15 Jul 2009
இலங்கைத் தமிழர்மீது இந்தியாவுக்கு அக்கறை இல்லை : இல.கணேசன்
பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”போர் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ள இலங்கை அரசு, அங்குள்ள தமிழர்களை அகதிகள் முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. இதனால் சொந்த நாட்டிலேயே அவர்களை அடிமைகள் போல் நடத்தி வருகிறது. அந்த முகாம்களில் தமிழர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.
ஆடு, மாடுகளை விட அவர்கள் மிக கேவலமாக நடத்தப்படுகின்றனர். தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு போய் சேர்ந்ததா என்பது தெரியவில்லை. அந்த நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
அகதிகள் முகாம்களில் நேரடியாக ஆய்வு செய்த ஐ.நா. சபை பணியாளர்களுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியாது என ஐ.நா.சபையும் பின்வாங்கிவிட்டது.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு ரூ.500 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை. இலங்கைத் தமிழரின் நிலையை ஆராயாமல் மேம்போக்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டிருப்பது இந்திய அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது.
இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி, அவர்களது சொந்த கிராமத்தில் குடியமர்த்த வேண்டும். அவர்களுக்கு வேலை உள்பட அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்துதர வேண்டும்.இதற்காக இந்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசு இதில் தலையிட்டு, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும்” என்றார்.
Tuesday, 7 Jul 2009
முகாம்களில் தமிழர்கள் நன்றாகவே இருக்கிறார்கள்:
இலங்கை நிலவரம் குறித்து இந்து என்.ராம்
பிரபாகரனின் மரணத்திற்குப் பிறகு இலங்கை நிலைமை குறித்து அறிந்துகொள்ள அங்கு சென்று வந்திருக்கிறார் இந்து என்.ராம்.
இலங்கை நிலவரம், தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள், ராஜபக்சேவின் பேட்டி என ‘இந்து’விலும் செய்திகளை பிரசுரித்தார்.
அவர் கொடுத்த செய்திகள் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் நிலையில் ஜூனியர் விகடன் வார இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியின் சாராம்சம் வருமாறு:
முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மிகமோசமான நிலைமையில் இருப்பதாகக் கூறப்படுவது தவறு. அங்கு கழிவறைகள் அதிகமில்லாதது மட்டுமே பிரச்னை. இதற்கும் கூட மெதுவாகச் செயல்படும் ஐ.நா. அதிகாரிகள் காரணம் என ராஜபக்சே கூறினார்.
அதற்கான நிதியை இலங்கைக்கு விரைந்து அனுப்ப ஏற்பாடு செய்யாமல இருக்கிறார்கள் என்றும் ராஜபக்சே வருத்தப்பட்டார்.
தமிழர்கள் முகாமை விட்டு வெளியேற முடியாதே தவிர, முகாமைச் சுற்றியுள்ள வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனை. மழை வந்தால் அங்கு பிரச்னை எழலாம். ஆனால், நம்மூரில் உள்ள அகதிகள் முகாமைக் காட்டிலும் அவை பல மடங்கு மேம்பட்டதாக இருக்கிறது என்று உறுதியாகச் சொல்வேன்.
சாப்பாடு மற்றும் தண்ணீருக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
அங்குள்ளவர்களிடம் நான் சரிவர பேசமுடியவில்லை என்றாலும் தானாகவே முன்வந்து சிலர் குறைகளைக் கூறினார்கள். வயதான வர்கள் தங்கள் உழைப்பு தங்களைப் பார்த்துக் கொள்ளும் என நம்பிக்கையுடன் கூறினர்.
எனக்குக் கிடைத்த தகவலின்படி புலிகளின் சார்பாக போரிட்ட 9 ஆயிரம் இளைஞர்களைத்தான் தனி முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களைக் கூட இலங்கை ராணுவம் நன்றாகவே நடத்துகிறது. நான் பார்த்த முகாமில் மக்கள் குடும்ப குடும்பமாகத்தான் இருந்தார்கள. அவர்கள் தைரியமாக இருக்கிறார்கள். போரின்போது தங்கள் இருப்பிடத்தை விட்டு வந்தவர்கள் கூட
தங்கள் பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்துள்ளனர். அதை சேமித்துவைக்க, இரண்டு வங்கிகளை தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு. முகாம்களில் உள்ள மாணவர்கள் ஏ-லெவல் (ப்ளஸ் டூ) பரீட்சை எழுத தயாராகிறார்கள்.
இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது எழுந்த பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூட இலங்கை ராணுவம் மீது யாரும் கூறவில்லை. அதேப்போல் முகாமில் திருட்டு குற்றச்சாட்டுகள் கூட எழவில்லை.
பிரபாகரன் குறித்து ராஜபக்சே மட்டுமல்ல, ராணுவத்தினரே மரியாதையாகத்தான் பேசினார்கள். ஆனால் பொட்டு அம்மான் பற்றித்தான் ராணுவத்தால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
விடுதலைப் புலிகள் இனி ராணுவரீதியாக தலையெடுக்க முடியாது. ஆனால், அவர்களிடம் பெரும் பணம் இருக்கிறது. இன்னமும் அவர்கள் வெளிநாடுகளில் பணம் வசூலித்து வருகிறார்கள. தாங்கள் வசூலிக்கும் பணத்துக்குக் கணக்கு காட்டு்ம் நோக்கத்தில் அவர்கள் இலங்கையில் ஏதாவது வன்செயலில் ஈடுபடக்கூடும் என்று ராஜபக்சே நினைக்கிறார்.
இலங்கை ராணுவத் தரப்பு செய்திகள்தான் ‘இந்து’வில் வெளியாகிறது என்பதும், விடுதலைப் புலிகள் தரப்பு செய்திகளோ அங்கே இருக்கும் தமிழ் மக்களின் நிஜமான நிலைமைகளோ வெளிவருவதே இல்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. எங்கள் பத்திரிகையை சரியாகப் படிக்காதவர்கள் சொல்லும் கருத்து இது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல கைப்படங்களையும், செய்திகளையும் நாங்கள் அதிகமாக வெளியிட்டுள்ளோம். ஏன், பிரபாகரன் பேட்டியையே நாங்கள் வெளியிட்டுள்ளோம். இலங்கை அரசை விமர்சித்தும் செய்திகள் வெளியிட்டுள்ளோம். ஆனால், அதேசமயம் கருத்துரீதியாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வந்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த பேட்டியில் என். ராம் கூறியுள்ளார்.
Wednesday, 1 Jul 2009
இலங்கையில் தமிழர் அரசு அமையும்- கருணாநிதி நம்பிக்கை

அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றத்தைப் போல இலங்கையிலும் மாற்றம் வரும். தமிழர்கள் எல்லாம் சேர்ந்து தமிழர் அரசாக அமைத்தால், நம்மைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அங்கு தமிழர் அரசு அமையும்; அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், நமது கருத்துக்களையும், எண்ணங்களையும், செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி கூறினார்.
இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை ஏற்படுத்தித் தருவதோடு, அத்தியாவசியத் தேவையான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்து, சட்டசபையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
இதற்கு, பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
அரசியல் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து, இந்த தீர்மானத்தை அணுகவில்லை. தமிழக சட்டசபையில் தமிழர்கள் என்ற முறையில் இப்போது ஒன்றாகக் கூடி இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசியுள்ளோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சிலர், தீர்மானத்தில் இருந்து சற்று விலகி தனி ஈழம் குறித்தும் பேசினர். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மணி தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதே கருத்தை தான் கொண்டிருந்தன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், தமிழ் ஈழம் வேண்டும் என பேசியிருக்கிறார். இங்கே நடப்பது, இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான வாக்குவாதம் அல்ல; இனப் போராட்டம். அங்கே, சிங்கள இனம்; இங்கே தமிழ் இனம் என்ற போராட்டம் தான் இது. மாநில சுயாட்சி தான் அங்கு தேவைப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ் மொழிக்கு சம தகுதி, அதிகாரப் பகிர்வு ஆகியவை தான் தற்போதைய தேவையாக இருக்கிறது.
இலங்கையில் தமிழக மக்களை மதிக்கும் அரசு அமைய வேண்டும். சிங்களர்கள், தமிழர்கள் இருவரையும் சமமாக பாவிக்கும் அரசு அமைய வேண்டும். அமெரிக்க மண்ணில் வெள்ளையர்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்த காலம் போய், இன்று “கறுப்புத் தோல்’ அந்நாட்டை ஆள்கிறது. அந்நாடு என்ன சொல்கிறது என்பதை, உலகமே உற்று நோக்குகிறது. அங்கு ஏற்பட்ட மாற்றத்தைப் போல் இலங்கையிலும் மாற்றம் வரும். தமிழர்கள் எல்லாம் சேர்ந்து தமிழர் அரசாக அமைத்தால், நம்மைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அங்கு தமிழர் அரசு அமையும்; அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், நமது கருத்துக்களையும், எண்ணங்களையும், செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில், அங்குள்ள சிங்களர்கள், புத்த மதத்தைச் சேர்ந்த பவுத்தர்கள் கூட நம் மீது கோபாக்கினியை வீசக் கூடியவர்கள் தான். சிங்களர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்வதாக நம் செயல்கள் அமைந்துவிடக் கூடாது. அவர்களுக்கு கோபம் அதிகரித்தால், அது அங்குள்ள தமிழர்களை பாதிக்கச் செய்யும். எதிலும், ஒரு நீக்கு போக்கு வேண்டும். அதை மறந்து செயல்பட்டால், அங்குள்ள தமிழர்களுக்கு கேடு ஏற்படும். சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால், அது நல்லதல்ல. மத்திய அரசு இதுவரை கொடுத்த நிவாரணப் பொருட்கள், தமிழக அரசு கொடுத்த நிவாரணப் பொருட்கள் ஆகியவை, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம் நேரடியாக சென்று சேர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். “வணங்கா மண்’ கப்பலில் உள்ள பொருட்களை, இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு பேசி வருகிறது.
தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து செயல்பட, இலங்கை அமைச்சர் தொண்டைமான் போன்றவர்கள் இரண்டு, மூன்று முறை என்னை சந்தித்துள்ளனர். தொண்டைமானின் மகனும் அங்கு அமைச்சராக உள்ளார். அவரும், நேற்று முன்தினம் என்னை சந்தித்தார். அப்போது, ஒரு குழுவாக வந்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தியுங்கள் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு அனுமதியுடன் தான் எதையும் செய்ய முடியும் என்று அவரிடம் தெரிவித்தேன். அதே நேரத்தில், உங்களால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அதை செய்யுங்கள் என்று தெரிவித்தேன். இதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Friday, 26 Jun 2009
தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்: இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை 10 நாள்களுக்குள் முடிக்க வேண்டும், தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவத்தை திரும்ப ப்பெறும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை அரசும் ராணுவமும் முழுவதுமாக பூர்த்தி செய்து முடிக்கும்வரை பொறுமை காத்த இந்திய அரசு இப்போது இலங்கை விவகாரத்தில் தமிழர்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்க வலுவான நடவடிக்கைகளைத் தொடங்கியிருகிறது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர்க பாசில் ராஜபக்சே (இலங்கை அதிபரின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர்), ராணுவத்துறை அமைச்சர் கோத்தபய ராஜபட்ச ஆகியோரும் அதிபரின் செயலாளர் லலித் வீரசிங்கவும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர மேனன் மற்றும் ராணுவச் செயலர் உள்ளிட்ட மூவர் குழுவை புதன்கிழமை மாலையில் சந்தித்து ஆலோசனை கலந்தனர்.
அப்போது, தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் ராணுவத்தினரின் அளவுக்கு அதிகமான நடமாட்டம்தான் என்று சுட்டிக்காட்டிய இந்தியத் தரப்பு ராணுவத்தைப் பாசறைக்குத் திரும்பிச்செல்ல உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
முகாம்களில் தமிழர்கள் போதிய உணவு, சுகாதார வசதியின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதால் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்பு அடைந்துவருவதால் அனைத்து முகாம்களையும் மூடிவிட்டு அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று அடுத்து கோரப்பட்டது.
தமிழர் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியை இலங்கை அரசு உடனே தொடங்காவிட்டால், பத்து நாள்களுக்குப் பிறகு அந்தப் பணியில் ‘இந்தியா ஈடுபட்டு உதவி செய்யும்” என்று குறிப்பாக வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, ‘இந்தியா தலையிடும்” என்று நேரடியாகவும் கடுமையாகவும் கூறாமல், ‘உதவி செய்யும்’ என்று ராஜரீகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து இந்திய அரசு எந்த அளவுக்குத் தமிழர்கள் விஷயத்தில் தீவிரமாக இருக்கிறது என்பது இலங்கை அரசுக்குப் புரிந்திருக்கும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மறு சீரமைப்புக்கு அந்த நாடு எடுக்கவுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தியா துணை நிற்கும், அதே வேளையில் சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பும் தரப்பட வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலுவாக வலியுறுத்தப்பட்டது.
தமிழ் ஈழம் வேண்டும் என்று ஆயுதம் எடுத்துப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் கொல்லப்பட்டு அந்த இயக்கம் இப்போது செயல்பட முடியாதபடிக்கு முடக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தமிழர்கள் தனி நாடு கேட்டதற்கான காரணங்களை நீக்காதவரை அத்தகைய வெற்றி எதுவும் இலங்கைக்கு நிரந்தர நிம்மதியைக் கொடுத்துவிடாது என்று இந்தியத் தரப்பு ராஜபக்சே சகோதரர்களிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
இலங்கையின் நலனில் இந்திய அரசுக்கு உள்ள உண்மையான அக்கறை காரணமாகத்தான் தமிழ்நாட்டிலிருந்து கடும் நெருக்குதல் ஏற்பட்ட நிலையிலும் ராணுவரீதியாகத் தலையிடாமல் அமைதி காத்ததையும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பகை நாடுகளுடன் (சீனா, பாகிஸ்தான்) இலங்கை கொஞ்சிக் குலாவுவதை ஓரளவுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதையும் இச் சந்திப்பின்போது இந்தியத் தரப்பினர் இலங்கைப் பிரதிநிதிகளுக்கு உணர்த்தினர்.
அதன் விளைவாகவே, தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கேப்டன் அலி கப்பலை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டால் நிவாரணப் பொருள்களை இலங்கையில் இறக்க அனுமதிப்பதாக அந்தத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்கு தமிழக முதல்வர் மு. கருணாநிதி அளித்த நெருக்குதலும் முக்கிய காரணம் என்று தலைநகர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கச்சத் தீவை ராணுவக் கேந்திரமாக்க இலங்கை முயல்கிறது, அதற்கு உதவ சீனாவும் பாகிஸ்தானும் முன்வந்துள்ளன என்ற தகவல்களை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது என்பதையும் அத்தகைய எந்தவொரு அத்துமீறலையும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் இந்தியத் தரப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அதையடுத்தே இலங்கைத் தரப்பில் அவசர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கச்சத்தீவை ராணுவ நோக்கத்துக்குப் பயன்படுத்தும் திட்டமோ, அதில் பிற நாடுகளின் தலையீட்டை அனுமதிக்கும் எண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்று இலங்கை அரசு விளக்கமும் அளித்துள்ளது. இவையெல்லாம் பத்திரிகைகளின் கற்பனையே என்றும் அது மறுத்திருக்கிறது.
தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்துக்கு மேலும் வலுவூட்டி தமிழர்களுக்கு சம உரிமைகளும் அந்தஸ்தும் அளித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப் போவதாக இலங்கை அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 180 நாள்களுக்குள், அதாவது ஆறு மாதங்களுக்குள் தமிழர்கள் அனைவருமே வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகாம்கள் மூடப்படும் என்றும் இலங்கைப் பிரதிநிதிகள் உறுதி அளித்துள்ளனர்
Wednesday, 24 Jun 2009
வணங்காமண் கப்பலுக்கு தலை சாய்த்தது இலங்கை
தமிழக முதல்வர் கருணாநிதியின் தொடர் முயற்சியின் விளைவாக, இலங்கைத் தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் வணங்காமண் கப்பலில் அனுப்பிய நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு சம்மதித்து உள்ளது. இதற்கான உறுதிமொழியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் இலங்கை தூதர்கள் அளித்தனர்.
இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களுக்கு உதவும் வகையில், உலகத் தமிழர்களால் வணங்காமண் என்கிற (கேப்டன் அலி) கப்பலில் நிவாரணப் பொருட்கள்அனுப்பப்பட்டன. ஆனால், இந்தக் கப்பலை தங்கள் நாட்டின் கடல் பகுதிக்குள் அனுமதிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.
இதனால் வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில், சென்னை நோக்கி வந்தது அந்தக் கப்பல். பாதுகாப்பு காரணம் கருதி சென்னை துறைமுகத்திற்குள் நுழையவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் வணங்காமண் கப்பலை அனுமதிக்கவும், அதில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகிக்கவும் இலங்கை அரசை இசைய வைக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
ஒருவாரமாக நிலவிவந்த இந்தப் பிரச்னை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு குறித்தும், தமிழர்களுக்கு சம அரசியல் அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் இந்திய அரசுடன் ஆலோசனை செய்ய அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களான கோதபய ராஜபக்சே (ராணுவ செயலாளர்), பசில் ராஜபக்சே (அரசியல் ஆலோசகர்) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தனர்.
அவர்கள் நேற்று மாலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து ஆலோசனை செய்தனர்.அப்போது, வணங்காமண் கப்பலில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இலங்கைத் தூதுவர்களும் ஒப்புக்கொண்டனர். இப்பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூல ம்பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விநியோகிக்கப்படும்.
மேலும், இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான புனரமைப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அடுத்த 6 மாத காலத்தில் அனைத்து அகதிமுகாம்களும் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இலங்கைக் குழுவினர்கள் தெரிவித்தனர்.
மாகாணங்களுக்கு குறிப்பிட்ட அரசியல் அதிகாரங்களை அளிக்கவும் இலங்கை அரசு தயாராக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். இலங்கையின் இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் இந்தியா உதவும்.
Wednesday, 24 Jun 2009
மதிவதனிக்கு, திருச்சியில் பாஸ்போர்ட் பெற்றது எப்படி?
‘ரா’ அதிகாரிகள் நேரில் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி விமானம் மூலம் வெளிநாடு செல்ல உதவிய பாஸ்போர்ட் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வசந்தி, க/பெ.மாரிமுத்து, ஜெகதாப்பட்டினம், ஆவுடையார் கோவில் தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயர் மற்றும் முகவரியில் எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ‘ரா’ அமைப்பு அதிகாரிகள் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். மதிவதனிக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் தொடர்பான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைக்காக கடந்த வாரம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலர் பாலசந்திரன் டெல்லி சென்று வந்தார்.
இதுபற்றி பாலச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
”திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தினமும் 500 பாஸ் போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் 15 ஆவணங்கள் உண்மையாக உள்ளவையா என்பதை சரிபார்த்த பிறகு பாஸ்போர்ட் வழங்கப்படும்.
அதே போன்று சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்தால்தான் பாஸ்போர்ட் வழங்கப்படும். மதிவதினிக்கு பாஸ்போர்ட் வசந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டது என்று கூறப்படுவது உண்மையில்லை. நான் டெல்லி சென்றது எனது பதவி உயர்வு கொச்சின் அலுவலக பொறுப்பு ஏற்பது தொடர்பாகத்தான். எதற்காக இந்த புரளியை பரபரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை”
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோன்று கியூபிரிவு போலீசாரும் இதை புரளி என்று கூறினர். இது தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறினர்.
மதிவதனிக்காக வசந்தி என்ற பெயரில் போலி பாஸ் போர்ட்டை தயாரித்து கொடுத்தது திருச்சியை சேர்ந்த ஒரு புரோக்கர் என்று தெரிய வந்துள்ளது. அவர் தான் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பத்தை கொடுத்துள்ளார்.
அதன் பேரில் ஓ.எஸ்.ஆர். முறையில் சோதனை நடந்துள்ளது. அதில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அக்செப்டட் என்று முத்திரை குத்தி கையெழுத்து போட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த போலி பாஸ்போர்ட் உதவியால் மதிவதனி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அந்த புரோக்கர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
Tuesday, 23 Jun 2009
மதிவதனி தப்பியது எப்படி?

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்று ஒரு சாரார் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மனைவியான மதிவதனி, மகள் துவாரகா, இளையமகன் பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கையில் இருந்து தப்பி வெளிநாடு ஒன்றில் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து பிரபல வார ஏடான ஜூனியர் விகடனில் எழுதப்பட்ட கட்டுரையில் இந்திய ‘ரா’ அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாக கூறப்பட்டுள்ள செய்தியின் சாராம்சம் வருமாறு:
இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த சமயத்தில் பிரபாகரனின் திட்டப்படி, அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளையமகன் பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, இந்தோனேஷியா சென்று அங்கிருந்து அயர்லாந்துக்கு சென்றுவிட்டனர்.
மற்றொரு தகவலின்படி அவர்களுக்கான பாஸ்போர்ட் போலியான பெயரில் புதுக்கோட்டையில் எடுக்கப்பட்டது. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த சமயம் தமி்ழ்நாட்டுக்கு தப்பி வந்த அவர்கள் பின்னர் கல்கத்தா சென்றனர். அங்கிருந்து ஹாங்காங் சென்று கனடா நாட்டை அடைந்தனர். கனடாவில் வசிக்கு்ம் பிரபாகரனின் சகோதரி வினோதினியின் உதவியோடு அவர்கள் பத்திரமான இடத்தில் உள்ளனர் என்றும் செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.
இது குறித்து ரா அமைப்பு ரகசியப் புலனாய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இவர்கள் தவிர, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களும் இந்தியா வழியே வெளிநாட்டுக்கு தப்பியிருக்கக்கூடும். மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்கால திட்டங்களை மனைவி மதிவதனியிடம் பிரபாகரன் ஒப்படைத்திருப்பதாகவும், மதிவதனியைச் சந்திக்க நேர்ந்தால், பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘இலங்கை வதை முகாம் ஒன்றில் சித்ரவதை செய்யப்பட்டுவரும் பிரபாகரனின் பெற்றோர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வரவேண்டும்’ என முதல்வர் கருணாநிதியிடம் திருச்சி ஹோமியோபதி மருத்துவர் ராஜேந்திரன் என்பவர் மனு கொடுத்துள்ளார்
































