Archive for the 'news' Category
Monday, 22 Feb 2010
காது கேளாதோருக்கான சிறப்பு அலாரம்

காது கேட்கிறது அலாரம் வைக்கிறோம். நாம் நினைத்த நேரத்திற்கு எழுகிறோம். காது கேளாதோர் என்ன செய்வார்கள். அவர்களுக்கு என்றே சிறப்பு அலாரம் ஒன்றை ஜப்பான் நிறுவனமான ‘ஏர் வாட்டர் சேப்டி’ நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.
கடந்த ஆண்டே இந்த அலாரம் அறிமுகம் ஆகிவிட்டாலும், இதன் விலையான ரூ.2,500 என்பது அதிகமாகத் தெரிந்ததால் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டது. இந்த கருவியை கொஞ்சமாக மாற்றியமைத்து ரூ.1200 விலையில் கொண்டுவர அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.
இந்த அலாரத்தில் இருந்து மணியோசை ஏதும் கேட்காது. மணியோசைக்கு பதிலாக புகையும் வாசமும் வெளியாகும். அப்படி வெளியாகும் புகையில் அலில் ஐசோதிசைனட் என்ற ரசாயணம் இருக்கிறது. இந்த ரசாயணம் எவ்வித பக்க விளைவுகளும் அற்றது என்கிறார்கள். இதை நுகரும் காதுகேளாதோர் அடுத்த இரண்டு நிமிடங்களில் படுக்கையை எழுந்திருப்பது நிச்சயம் என்கிறார்கள்.
Tags: news
Friday, 19 Feb 2010
1000 ஷூ திருடிய அபூர்வ தாத்தா!

ஆயிரக்கணக்கில் ஷூக்களைத் திருடிய 59 வயது தாத்தாவை கைது செய்த சியோல் நகர காவல்துறை, களி தின்ன அவரை சிறைக்கு அனுப்பியிருக்கிறது.
பார்க் என்ற அந்த தாத்தாவுக்கு ஷூக்கள் என்றால் பைத்தியம் போலிருக்கிறது. குறிப்பாக அவர் இறந்தவர்களை தகனம் செய்யும் இடத்திற்கு தவறாமல் போய்விடுவாராம். தகனம் நடைபெறும் இடத்தில் அனைவரும் மரியாதை நிமித்தமாக தங்கள் ஷூக்களை கழட்டி விடுவது வழக்கம். அங்குச் செல்லும் இந்த தாத்தா தன்னுடைய அரதபழசான ஷூவை கழட்டிவிட்டுவிட்டு புதிதாக ஒன்றை போட்டுக்கொண்டு நழுவிவிடுவாராம். இப்படியே இவர் காலால் சுட்டு சுட்டு 1200 ஜோடி ஷூக்களை சேர்த்து வைத்திருக்கிறார்.
கடைசியாக இவர் இறந்தவர் நிகழ்ச்சி ஒன்றில் மூன்று ஜோடி ஷூக்களைத் திருடுகையில் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார். நோண்டி நுங்கெடுத்ததில் குடோன் ஒன்றில் திருடிய ஷூக்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் அவர் திருடிய ஷூக்களை மறுவிற்பனையும் செய்து வந்திருக்கிறார். கில்லாடி தாத்தாதான்!
Tags: news
Friday, 19 Feb 2010
புலி வருடத்தில் வசவசன்னு பெத்துங்கங்க :
மக்களுக்கு தைவான் அரசு அன்புக்கட்டளை
புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது ஒருபக்கம் இருக்கட்டும், புலி வருடமான இந்த வருடம் வசவசன்னு குழந்தைகளை பெற்றுத்தள்ளுங்கள் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டிருக்கிறது தைவான் நாட்டு அரசு.
புலி வருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிட்ட குடும்பத்திற்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் சுபிட்சமளிக்கும் என்பது தைவான் நாட்டு நம்பிக்கை. புலி சின்னத்தில் பிறந்தவர்கள் மட்டுமின்றி மற்ற சின்னத்தில் பிறந்தவர்களுஇம் இந்த புலி வருடத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்
என்றும் அன்புக்கட்டளை இட்டிருக்கிறது தைவான் அரசு.
அதிபர் மா யிங் ஜியாவ் (1950), முன்னாள் துணை அதிபர் சியாவ் (1938) ஆகியோர் புலி ஆண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1998 இல் வந்துபோன புலி ஆண்டில் 2,71,459 குழந்தைகளும், அதற்கு இரு வருடம் கழித்து வந்த டிராகன் வருடத்தில் 3,05,312 குழந்தைகளும் பிறந்ததாக தைவான் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது.
Tags: news, taiwan, Tiger year
Wednesday, 17 Feb 2010
மறதி மருத்துவர்கள் மாற்றான் நாட்டிலும் உண்டு
நம்ம ஊர் மருத்துவர்கள் என்றில்லை வெளிநாட்டு மருத்துவர்களும் மறதி மன்னார்சாமிகள்தான் போலிருக்கிறது. செக்கோலோஸ்வாகியா நாட்டைச் சேர்ந்த ஜெடன்கா கோபக்கோவா என்ற 66 வயது பெண்மணி கருப்பை கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் வயிற்றுவலி நின்றபாடில்லை. பரிசோதனை செய்தபோதுதான், முந்தைய அறுவை சிகிச்சையின்போது ஒரு அடி நீள ஸ்பாடூலா என்கிற மருத்துவக்கருவியை பாட்டியின் வயிற்றில் மருத்துவர்கள் மறந்து வைத்துவிட்டது தெரியவந்தது.
இதற்காக வழக்கு போட எண்ணியிருக்கிறார் ஜெடன்கா கோபக்கோவா. அதே சமயம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இவாநைஸ் நகர மருத்துவமனை நிர்வாகம் நடைபெற்ற தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதோடு தக்க இழப்பீடு தரவும் சம்மதித்துள்ளது. தவறிழைத்த நான்கு ஊழியர்களுக்கும் அதற்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பேசாம ஒண்ணு பண்ணலாம். ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்களின் கண்ணில் படுமாறு, ‘வேலை முடிந்து திரும்பும்போது தங்கள் உடைமைகளை மறக்காமல் எடுத்துச்செல்லவும்’ என்று போர்டு வைக்கலாம்.
Tags: news
Tuesday, 16 Feb 2010
அரை மைல் நீள காதல் பரிசு!

ஞாயிற்றுக்கிழமை வந்து போன காதலர் தினத்தில் உங்கள் காதலர் அல்லது காதலிக்கு நீங்கள் என்ன பரிசளித்தீர்கள்? பூங்கொத்து? சாக்லேட்? ஆடைகள்? அரை இருட்டில் இரவு விருந்து?
பிரிட்டனைச் சேர்ந்த ப்ரூஸ் ஆண்டர்சன், 37 வயதான தனது மனைவி பெத்துக்கு ரொம்ப வித்தியாசமாககாதல் பரிசு ஒன்றை அளித்தார்.
தெற்கு மின்னசோட்டாவில் உள்ள சொந்த பண்ணை நிலத்தில் அரை மைல் நீள, அகலத்தில் காதல் சின்னமாக இதயத்தை டிராக்டர் கொண்டு உழுது, உருவாக்கி இருக்கிறார் ப்ரூஸ் ஆண்டர்சன்.
கணவரின் இந்த பரிசைக் கண்டு அசந்துபோன மனைவி பெத், ‘இது போன்றதொரு காதல் பரிசை இதுவரை அவர் அளித்ததில்லை’ என்று ஆச்சர்யப்பட்டுப்போகிறார்.
Tags: news
Tuesday, 16 Feb 2010
ரூ.2.27 கோடிக்கு விற்பனையான அரிய மீன்!

சீனாவில் பிடிக்கப்பட்ட அரிய வகை மீன் ஒன்று அதன் எடைக்கு சமமான தங்கத்தின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. மனிதனின் ஆரோக்கியத்திற்கு உதவும் மருத்துவக் குணங்கள் கொண்ட மீன் இது என்பதால் இந்த மதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென் சீன கடலில் இந்த மாதத் தொடக்கத்தில் பிடிக்கப்பட்ட இம்மீனின் பெயர் பஹாபா. 50 வயதைக் கடந்த மீனாகக் கருதப்படும் இது 136 கிலோ எடைக்கு மேல் இருந்தது. இது ஐந்து அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டிருந்தது.
இத்தனை பெருமை கொண்ட இந்த மீனை யூயிக்யிங் நகரைச் சேர்ந்த மீன்பிடி நிறுவனம் ஒன்று ரூ.2.27 கோடிக்கு வாங்கியுள்ளது. சீன பாரம்பரிய வைத்தியர்களின் கூற்றுப்படி, இந்த மீனின் செதில்களை உண்பவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறதாம். நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு பிடிக்கப்பட்டுள்ள இந்த அரிய வகை பஹாபா மீன் சீனா, ஹாங்காங், மக்காவ் பகுதி கடல் பிரதேசங்களில் மட்டுமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஹாங்காங் கடல் பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட 82 கிலோ எடை கொண்ட பஹாபா மீனை பிடித்த மீனவர் அதன் மதிப்பு தெரியாமல் ரூ.11ஆயிரத்திற்கு விற்றுவிட்டார். அடிமாட்டு விலைக்கு வாங்கியவர்கள் மறுவிற்பனையில் அதை ரூ.56 லட்சத்திற்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துவிட்டார்கள்.
Tags: Bahaba fish, china, news, Rare fish
Monday, 15 Feb 2010
பிரிட்டனின் ‘கவர்ச்சி விவசாயி’ சிம்சன்!

பிரிட்டனின் கவர்ச்சிகரமான விவசாயியாக அன்னா சிம்சன் என்கிற 25 வயது பெண் (இன்னும் கல்யாணம் ஆகலைங்க!) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 100 க்கும் மேற்பட்ட சக போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி கவர்ச்சி விவசாயி பட்டத்தை வென்றிருக்கிறார் சிம்சன்.
யார்க்ஷையர், ஹட்டன் ரூட்பீ பகுதியைச் சேர்ந்த சிம்சன் ஒரு அழகான பெண் விவசாயி. தன்னுடைய விண்டி ஹில் பண்ணை நிலத்தில் ஆடு மேய்க்கும் கலையை நாய்களுக்கு கற்றுக் கொடுப்பதும், டிராக்டர் கொண்டு உழுவதும், விலங்குகளுக்கு இடையே இனவிருத்தியை ஊக்குவிப்பதும் தான் இவருடைய முழுநேர பணி.
சமீபத்தில், விவசாயிகளுக்கென வெளிவரும் பத்திரிகையான ‘பார்மர்ஸ் வீக்லி’ நடத்திய போட்டியில், பிரிட்டனின் கவர்ச்சிகரமான விவசாயப் பெண்ணாக சிம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பீட் மார்ட்மோர் என்ற 25 வயது விவசாயி ‘கவர்ச்சியான ஆண் விவசாயி’யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்களுக்குப் பரிசாக தலா ரூ. 15000 அளிக்கப்பட்டது.

‘அறுபது வயது ஆட்கள்தான் விவசாயத்தில் ஈடுபட வேண்டுமா என்ன? அழகான பெண் கூட ஈடுபடலாம் என்பதை சுட்டிக்காட்டவே விவசாயப்பணிகளில் என்னை நான் ஈடுபடுத்திக்கொண்டேன்’ என்று சொல்லும் சிம்சன், அழகான, கவர்ச்சியான பெண் விவசாயியாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமிதம் அடைவதாகக் கூறியுள்ளார்.
‘விவசாயி என்றால் இப்படித்தான் தோற்றமளிக்க வேண்டும் என்பதை சிம்சன் உடைத்திருக்கிறார். அவர்களும் அழகாக, கவர்ச்சியாக இருக்கலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்’ என்று
‘பார்மர்ஸ் வீக்லி’ பத்திரிகையும் சிம்சனை புகழ்ந்து தள்ளியிருக்கிறது.
Tags: Anna Simpson, news, sexiest female farmer
Monday, 15 Feb 2010
உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் நிறுவும் பணி :
சிலி பாலைவனத்தில் தொடங்கியது

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் பணி சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் தொடங்கியது. இதற்காக வானியல் ஆராய்ச்சி நிபுணர் குழு சிலி நாட்டுக்குச் சென்றுள்ளது. இந்த டெலஸ்கோப் நிறுவும் பணி வருகிற 2018 ஆண்டு நிறைவடையும்.
உலக நாடுகள் பலவும் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. அதில் பிரிட்டனில் இருந்து செயல்படும் ஈரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி ஆராய்ச்சி மையமும் (European Southern Observatory (ESO), ஒன்று. பல நாடுகளைச் சேர்ந்த வானியல் நிபுணர்கள் இணைந்து செயல்படும் மையம் இது. இந்த மையம் தான் சிலி நாட்டில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில், உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான அறிஞர் குழுவில சிலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர், ஜெர்மன் மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த மிகப்பெரிய டெலஸ்கோப்பிற்கு ஈரோப்பியன் எக்ஸ்ட்ரீம்லி லார்ஜ் டெலஸ்கோப் (European Extremely Large Telescope (ELT) என பெயரிடப்பட்டுள்ளது.
138 அடி சுற்றளவுள்ள இந்த டெலஸ்கோப்பை சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தில் நிறுவக் காரணம், இந்தப் பகுதியில் தான் வருடத்தில் முழுக்காலமும் வானம் மேகமின்றி காணப்படுகிறது. வான ஆராய்ச்சிகளுக்கு மிகவும் ஏற்றப் பகுதியாகக் கருதப்படும் இங்கு ஏற்கனவே ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2011 டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த மாபெரும் டெலஸ்கோப் பணி, ரூ.540 கோடியில் செய்யப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் மூலம் வான ஆராய்ச்சிகள் பல மடங்கு மேம்பாடு அடையும் என்றும், இதனால் பூமி மற்றும் விண்வெளி குறித்த அரிய உண்மைகளை மனிதன் விரைவாக அறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.
Tags: Astronomer, Atacama desert, biggest telescope, Chile, ELT, ESO, news
Sunday, 14 Feb 2010
எடையைக் குறைத்தது எப்படி? : சூடு கிளப்பப்போகும் குண்டு மனிதரின் சுயசுரிதை

பவுல் மேஷன்… பிரிட்டனைச் சேர்ந்த இந்த மாமனிதன் தான் உலகில் உயிருடன் இருக்கும் அதிக எடை கொண்ட மனிதர். இவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை தேவைப்பட்டபோது அவருடைய வீட்டின் முகப்பை தீயணைப்புத் துறையினர் வந்து இடித்தனர். இவரை வீட்டில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு கிரேனும் வரவழைக்கப்பட்டது. அப்படிப்பட்ட மனிதர் தன்னுடைய எடையான 438 கிலோவில் இருந்து 127 கிலோ எடையைக் குறைத்து 311 கிலோ எடைக்கு இறங்கி வந்திருக்கிறார். இந்த அபார எடை குறிப்பு பற்றிய ரகசியத்தை தான் எழுதப்போகும் ‘தி ஜர்னி’ (பயணம்) என்ற சுயசுரிதை புத்தகத்தில் குறிப்பிட உள்ளார் மேஷன் என்பதுதான் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
முன்னாள் தபால் காரரான மேஷன் வெஸ்ட் சஸ்ஸக்ஸ் நகரில் உள்ள சிசெஸ்டர் மருத்துவமனைக்கு வந்தபோது, அங்குள்ள ஊழியர்களிடம் தன்னுடைய சுயசுரிதை குறித்து வாய்விட்டிருக்கிறார்.
இத்தனை அதிக எடை கொண்ட மனிதர் ஒருவர் நிதானமாகச் செயல்புரிந்து, பல காலம் காத்திருந்து அரும்பாடுபட்டு குறைத்த எடையை எவ்வாறு குறைத்தேன் என்று கூறப்போவது அதிசய சங்கதியாகக் கருதப்படுகிறது. அதனால் அவர் எழுதப்போகும் சுயசுரிதை புத்தகத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கிவிட்டது.
மேஷன் தினசரி 20 ஆயிரம் கலோரி உணவை உண்டு கொண்டிருந்தார். இது சராசரி மனிதனின் உணவுத்தேவையை ப்போல எட்டு மடங்கு அதிகமாகும். இதற்காக இவருக்கு ஆண்டுக்கு
73 லட்சம் ரூபாய் செலவாகிக் கொண்டிருந்தது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் 7 கோடி ரூபாய்க்கு மேல் உணவுக்காகவே இவர் செலவழித்துள்ளார்.
Tags: fattest man, news, Paul Mason, Weight Loss, World's heaviest man
Friday, 5 Feb 2010
குப்பைக் கூளங்களை வைத்து ஒரு பாலம் : சீன நிறுவனம் செய்த மோசடி

சீனாவின் பெருநகரங்களில் ஒன்றான ஷாங்காயில் வூசாங்க் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. அதற்கு காரணம் மோசமாக கட்டப்பட்டது அல்ல, அதைவிட மோசமானது. பாலத்தின் பல இடங்களில் கான்கிரீட்டுக்கு பதிலாக உள்ளே குப்பைக் கூளங்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் வைத்து கட்டப்பட்டுள்ளது.
ஷாங்காயில் ஓடும் வூசாங்க் ஆறு முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையாகும். சீனாவின் உள்ளே ஒரு சரக்கு செல்ல வேண்டுமானால் இந்த ஆற்றை கடக்காமல் முடியாது. இந்த ஆற்றுடன் கலக்கும் ஷசோவ் ஆற்றின் ஒரு பகுதியில் இருந்த பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்ஒன்று கட்டப்பட்டது. 2009 இல் பாலப் பணிகள் நிறைவடைந்தன. ஆனால், குறுகிய காலத்திலேயே பாலத்தின் பல இடங்களில் விரிசல் விடத்தொடங்கியது. அமைந்த நிலம் சரியாக இல்லையோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அப்படி ஏதும் இல்லை என்பதும், பாலம் உறுதியாகக் கட்டப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. விரிசல் விடத்தொடங்கிய இடங்களை தட்டிப் பார்த்தபோது அந்த இடத்தில் கான்கிரீட்டுக்குப் பதிலாக கட்டட மிச்சங்களும், பிளாஸ்டிக் மற்றும் துணி குப்பைக் கூளங்களும் வெளியே வந்து விழுந்துள்ளன.

பாலப் பணிக்கு சரியான விகிதத்தில் சிமெண்ட், மணல் மற்றும் இதர அவசியமான பொருட்களைப் பயன்படுத்தாமல் கழிவுகளை கலப்படம் செய்து பாலத்தை தயார் செய்து விட்டார்கள். அது புழக்கத்திற்கு வந்த சில மாதங்களிலேயே பல்லிளித்து விட்டது..
மறு சுழற்சி தேவைதான் அது மனித சுழற்சியை கெடுக்கும் அளவுக்கா போகும் என்ற கேள்வியுடன் அந்தப் பாலத்தை கட்டிய நிறுவனம் மீது விசாரணை நடந்து வருகிறது.
































