Archive for the 'cricket' Category
Tuesday, 6 Jan 2009
கிரிக்கெட்: வங்கதேசத்தை துவம்சம் செய்தது இலங்கை
சிட்டகாங்: வங்கதேச அணியுடனான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 465 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் 2-0 என்ற கணக்கில் கோப்பையையும் கைப்பபசற்றியது.
சிட்டகாங் டிவிஷனல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலி்ல் விளையாடிய இலங்கை 384 ரன்கள் எடுத்தது. தில்ஷான் 162, வர்ணபுரா 63, கபுகேதரா 96 ரன் எடுத்தனர். வங்கதேசம் 208 ரன்கள் எடுத்து அனைத்து இழந்தது.
இலங்கை அணி 2ஆவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 447 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தில்ஷான் 143, சமரவீரா 77, சங்கக்கரா 54, கபுகேதரா 59* ரன் எடுத்தனர்.
2ஆவது இன்னிங்சில் 624 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, செவ்வாய்க்கிழமை நடந்த 4ஆவது நாள் ஆட்டத்தில் 158 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
இலங்கை பந்துவீச்சில் தில்ஷான் 4, மெண்டிஸ் 3, வாஸ், பெர்ணாண்டோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இலங்கை அணி 465 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை இலங்கை வீரர் தில்ஷான் வென்றார்.
அடுத்து, வங்கதேசம், ஜிம்பாவ்வே, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேசம்-ஜிம்பாவ்வே அணிகள் மோத உள்ளன.
Tags: cricket, cricket, Srilanka-Bagaladesh cricket series, இலங்கை கிரிக்கெட் அணி, இலங்கை வெற்றி, கிரிக்கெட், வங்கதேச கிரிக்கெட் அணி
Friday, 19 Dec 2008
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் ரத்து:
அனுமதி அளிக்க மத்திய அரசு மறுப்பு
புதுதில்லி: பாகிஸ்தானுடனான இந்திய கிரிக்கெட் தொடருக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது மத்திய அரசு.
இதையடுத்து தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி 4 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையே, மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் விழுந்தது. இதனால் திட்டமிட்டபடி கிரிக்கெட் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம் என்றது பி.சி.சி.ஐ.
இந்நிலையில், தற்போது நிலவிவரும் சிக்கலான சூழ்நிலையில் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என பி.சி.சி.ஐ.க்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ. கில் ஆகியோர் கிரிக்கெட் வாரியத் தலைவர் சசாங்க் மனோகரிடம் அரசின்முடிவை வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து பி.சி.சி.ஐ. மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா கூறுகையில்.
”அரசின் முடிவு குறித்து விளையாட்டு அமைச்சகம் மூலம் எங்களுக்குக் கடிதம் வந்துள்ளது. அதன்படி பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படுகிறது. இம்முடிவை பாகி்ஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் தெரிவித்துவிட்டோம்” என்றார்.
அரசின் முடிவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வரவேற்பு அளி்த்துள்ளனர்.
அதேசமயம் தற்போதைய தொடர் ரத்து செய்யப்படுவதால் உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார் பி.சி.சி.ஐ. யின் முதன்மைச் செயல் அதிகாரி ரத்னாகர் ஷெட்டி.
Tags: BCCI, cricket, cricket, Indian govt, Mumbai attack, Pakistan cricket tour, Terrorists, கிரிக்கெட் தொடர், பாகிஸ்தான், பி.சி.சி.ஐ., மத்திய அரசு
Monday, 15 Dec 2008
41ஆவது சதம்: மும்பை மக்களுக்கு அர்ப்பணித்தார் சச்சின்

சென்னை: சென்னை டெஸ்டில் பெற்ற சதத்தை மும்பை மக்களுக்கு அர்ப்பணிப்பதாக சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
சென்னையில் நடந்த இங்கிலாந்து அணியுடனான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் தனது 41 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
”மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் துரதிருஷ்டவசமானது. அதில் தாக்குதலுக்கு உள்ளான என்எஸ்ஜி கமாண்டோக்கள், தாஜ் ஓட்டல் ஊழியர்கள், போலீஸ், பொதுமக்கள் என ஒவ்வொருவருக்கும் தலைவணங்குகிறேன்.
அத் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தொடர் நடைபெறுகிறது. கிரிக்கெட் அதன் தாக்கத்தைக் குறைக்கமுடியாது. என்றாலும் பாதிப்புக்குள்ளான மும்பை மக்களுக்கு 41 ஆவது சதத்தை அர்ப்பணிக்கிறேன். அவர்களுக்கு இது சிறிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். அதே நேரம் நான் அடித்த சதமோ, இந்தியா பெற்ற வெற்றியோ அந்த துயரத்தைத் மறக்கச் செய்யும் எனக் கூறவில்லை. அதிலிருந்து மீளுவது மிகவும் கடினம்.
என்னைப் பொருத்தவரை இங்கிலாந்துக்கு எதிரான இந்த சதம் மிக மிக முக்கியமானது. நான் எப்போதும் கூறுவது போல், அணி வெற்றி பெறும்போது அடிக்கும் சதம் மிகவும் சிறப்பானது. அதே சமயம் மிகவும் எதிர்பார்ப்பை பெற்ற போட்டியில் அடிக்கப்பட்ட இந்த சதம் மிகவும் முக்கியமானது” என்றார் சச்சின்
Tags: 41st hundred, Chennai, cricket, cricket, India - England Test Match, MAC stadium, Sachin Tendulkar, கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர், சென்னை டெஸ்ட், தீவிரவாதிகள், முதலாவது டெஸ்ட், மும்பை தாக்குதல்
Monday, 15 Dec 2008
கிரிக்கெட்: சென்னை டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

சென்னை: சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. சச்சி்ன் தனது 41ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 316 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 311 ரன்களும் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 241 ரன்கள் எடுத்து பரிதாபமாக நின்றது.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. முதல் இன்னிங்ஸ்கில் பெற்ற கூடுதல் ரன்களுடன் சேர்த்து 387 ரன்களை எடுத்தால் இந்தியா வெற்றி பெறலாம் என்ற இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.
தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு சேவாக்கின் அதிரடி ஆட்டம் நம்பிக்கையைத் தந்தது. நேற்று ஆட்ட முடிவில் இந்தியா, (சேவாக் 83, கம்பீர் 41) சேவாக்கின் விக்கெட்டை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்திருந்தது .
கடைசி தினமான இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா, 4 விக்கெட்டுக்கு 387 ரன்களை கடந்து வெற்றி பெற்றது. சச்சின் 92, யுவராஜ் சிங் 80 ரன்கள் எடுத்தனர்.
Tags: Chennai, cricket, cricket, England Cricket Team, Indian Cricket Team, MAC stadium, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியா வெற்றி, கிரிக்கெட், முதலாவது டெஸ்ட்
Friday, 12 Dec 2008
கிரிக்கெட்: இந்தியா சொதப்பல்

சென்னை: இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்துவரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் கை ஓங்கியுள்ளது.
இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் 316 எடுத்ததுடன், இந்தியாவின் 6 விக்கெட்டுகளையும் பறித்தது.
இரண்டாடம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இங்கிலாந்தி்ன் இலக்கை எட்ட இந்தியாவுக்கு இன்னும் 161 ரன்கள் தேவை. கையிலோ நான்கு விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து பந்துவீச்சிற்கு இவர்கள் தாக்குப்பிடித்து நிற்பார்களா என்ற நிலையில் இன்று (சனிக்கிழமை) மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
சச்சின் அதிகபட்சமாக 37 ரன்கள் அடித்ததுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களைக் கடந்தது மட்டுமே இப்போதைக்கு இந்திய அணிக்கு ஆறுதல் தரும் விஷயம்.
இங்கிலாந்தின் முன்னணியும், இந்தியாவின் சறுக்கலும் இந்தப் போட்டிக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய ஆட்டமும் நாளைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டமும் சென்னை ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக அமையும் என நம்பலாம்.
Tags: Chennai, cricket, cricket, England, India, MAC stadium, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட், சென்னை
Wednesday, 10 Dec 2008
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்:
சென்னை மைதானத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பு

சென்னை: இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
மும்பை தாக்குதலுக்குப் பின்னர் 2 ஒருநாள் ஆட்டங்களைக் கைகழுவிவிட்டு தாயகம் திரும்பியது இங்கிலாந்து அணி. இந்தியா அளித்த உறுதிமொழிக்குப் பிறகு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வந்தது.
முதல் டெஸ்ட் இன்று (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்திய பேட்டிங்கைப் பொருத்தவரையில் டிராவிட்டை தவிர மற்றவர்கள் நல்ல பார்மில் உள்ளனர். கங்குலிக்கு பதில் யுவராஜ் சிங் இடம்பிடித்துள்ளார்.
ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா என பந்துவீச்சிலும் இந்திய அணி வலுவாக உள்ளது.
இங்கிலாந்து அணியில் உள்ளவர்கள் அனைவருமே அனுபவசாலிகள் எனக் கூற முடியாது. இயன் பெல், பிளிண்டாப், கெவின் பீட்டர்சன், ஓவைஸ் போன்றவர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள் என்றாலும், சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான சென்னை மைதானம் அவர்களுக்கு எந்தளவுக்கு பலன் கொடுக்கும் என்பது போகப் போகத் தெரியும்.
மேலும் சென்னை மைதானம் இந்திய அணிக்கு மிகவும் ராசியான மைதானம். 1985க்குப் பிறகு பாகிஸ்தானிடம் மட்டுமே (1999இல் 12 ரன் வித்தியாசத்தில்) சென்னையில் இந்தியா தோற்றுள்ளது.
சென்னையில் இந்தியா பெற்றுள்ள 11 வெற்றிகளில் 77 சதவிகிதம் விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே எடுத்துள்ளார்கள்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்ய டெண்டுல்கருக்கு இன்னும் 6 ரன்களே தேவை. அதை அவர் இன்று சாதிப்பார் என எதிர்பார்ககப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக 2 ஆயிரம் ரன் குவித்த ஒரே இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.
Tags: Chennai, cricket, cricket, England Cricket Team, Indian Cricket Team, MA Chidabaram Stadium, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணி, எம்.ஏ. சிதம்பரம் மைதானம், கிரிக்கெட்
Wednesday, 10 Dec 2008
இந்தியா - இங்கிலாந்து முதல் கிரிக்கெட் டெஸ்ட்

சென்னை: இந்தியா - இங்கிலாந்து இடையே சென்னையில் நாளை முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியைப் பொருத்தவரையில் விசேஷம் ஒன்று உண்டு. சென்னை மற்றும் மொகாலி டெஸ்ட்களில் கிடைக்கும் சம்பளத்தை மும்பை தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக வழங்க முன்வந்துள்ளார் இந்திய கேப்டன் தோனி. சம்பளத்தில் பாதி தொகையை இங்கிலாந்து வீரர்களும் வழங்க உள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து வீரர் அலிஸ்டர் குக் கூறுகையில், ”மும்பை தாக்குதலுக்கு பின் இருவாரங்கள் மிகவும் கடினமானது. இந்தியா அளித்த உறுதிமொழியின் காரணமாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்திலும் வந்துள்ளோம்.
சென்னை டெஸ்டில் கிடைக்கும் சம்பளத்தில் பாதியை, எங்கள் வீரர்கள் அனைவரும் மும்பை தாக்குதலில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக கொடுக்க இருக்கிறோம். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களில் முதல் இன்னி்ங்ஸ் கோர் மிக முக்கியம். முதலில் அதிக ரன்கள் எடுத்தால் போதும். எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் பிற பிரச்னைகள் எங்களை பாதிக்காது. மைதானத்திற்கு வெளியே நடப்பதை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்” என்றார்.
Tags: Chennai, cricket, cricket, England, India, MA Chidambaram Stadium, இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், தோனி
Tuesday, 9 Dec 2008
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்!:
காவல்துறை கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் மைதானம்
சென்னை: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் (11/12/08) தொடங்குகிறது. இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர். சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் அவர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
மும்பையைத் தீவிரவாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, இந்தியாவில் விளையாடி வந்த இங்கிலாந்து அணி வீரர்கள் நாடு திரும்பினர்.
மும்பையில் நடக்கவிருந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்று உறுதிமொழி அளித்தப் பிறகே சென்னை வந்து விளையாட இங்கிலாந்து அணி ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தமிழக காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இதுகுறித்து நேற்று சென்னை காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,
”போட்டியின்போது 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சென்னை காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, கமாண்டோ படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிவிரைவுப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
வீரர்கள் தங்கும் ஒட்டல்கள், செல்லும் வழிகள், விளையாடும் மைதானம் மற்றும் வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பில் கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போட்டி நடைபெறும் மைதானத்தை நேற்று முன்தினம் முதல் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது. வீரர்களுக்கு 3 கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை நேற்று தொடங்கியது. சென்னையை மழை மிரட்டிவந்தாலும், ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக நுழைவுச்சீட்டை வாங்கினர்.
Tags: Chennai, cricket, England Cricket Team, Indian Cricket Team, MA Chidambaram Stadium, இங்கிலாந்து, இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் டெஸ்ட்
Sunday, 7 Dec 2008
இங்கிலாந்து அணியின் இந்தியப் பயணம் உறுதி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வருவது நேற்றிரவு உறுதியானது. அந்த அணி இன்று சென்னை வருகிறது.
பாதுகாப்பு பிரச்சினை
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியாவில் நட்நத ஒரு நாள் தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பிய இங்கிலாந்து அணி, இந்தியாவுடன் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அபுதாபியில் சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டது.
இருப்பினும் தங்களது பாதுகாப்பு ஆலோசகர் ரெக் டிகாசன் தரும் அறிக்கைக்கு பிறகே இந்தியா செல்வதா! வேண்டாமா என்பதை முடிவு செய்வோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கிறது.
இதை தொடர்ந்து ரெக் டிகாசன் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் ஹக் மோரிஸ், வீரர்கள் சங்க தலைவர் சீன் மோரிஸ் ஆகியோர் வருகிற 11-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்க உள்ள சென்னையில் 3 கட்டமாக ஆய்வு நடத்தினார்கள். சென்னை காவல்துறை கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். அப்போது இங்கிலாந்து அணிக்கு உயர்மட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது உறுதி அளிக்கப்பட்டது.
சென்னையில் ஆய்வு செய்த இங்கிலாந்து பாதுகாப்பு அதிகாரி ரெக் டிகாசன் நேற்று மாலை அபுதாபி போய் சேர்ந்தார். தனது அறிக்கையை இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். தனது அறிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்து இருந்தார். அவர் கிரீன் சிக்னல் காட்டியதை தொடர்ந்து, இங்கிலாந்து அணி திட்டமிட்டப்படி இந்தியா வருவது என்று முடிவு செய்திருக்கிறது. இந்த தகவல் இங்கிலாந்திடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நேற்றிரவு வந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகம் என்று தகவல்கள் தெரிவித்தன.
இங்கிலாந்து அணியினர் 2 குழுவாக இன்று சென்னை வருகிறார்கள். சேப்பாக்கம் மைதானம் மற்றும் வீரர்கள் தங்கும் ஓட்டல்களில் கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
2-வது டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மொகாலியில் (டிச.19-23) இங்கிலாந்து பாதுகாப்பு அதிகாரி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
Tags: cricket, cricket, England, India, ஆலோசகர் ரெக் டிகாசன், இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், சேப்பாக்கம் மைதானம், டெஸ்ட், மும்பை தீவிரவாதி, மொகாலி, ஹக் மோரிஸ்
Friday, 28 Nov 2008
மும்பை கொடூரம்: அலறும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் ஆடிவரும் வெறியாட்டம் விளையாட்டையும் பாதித்துவிட்டது. இந்திய அணியுடன் 7 ஒருநாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட்டுகளிலும் விளையாட இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மும்பை கலாட்டாவைத் தொடர்ந்து கிரிக்கெட் பயணத்தை கைவிட்டு சொந்த மண்ணுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளது.
வீரர்களின் பாதுகாப்புக் கருதி மீதியுள்ள 2 ஒருநாள் போட்டிகளை இங்கிலாந்து அணி ரத்து செய்துவிட்டது. டெஸ்ட் தொடரில் ஆட இங்கிலாந்து அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.
இவ்விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசி வருகிறது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. செயலர் சீனிவாசன் கூறுகையில், ”இங்கிலாந்து போர்டின் விருப்பத்துக்கு ஏற்ப ஒருநாள் தொடரை ரத்து செய்துள்ளோம். கவுகாத்தி மற்றும் டெல்லி போட்டிகள் நடக்காது. மும்பையில் நடக்கவிருந்த இரண்டாவது டெஸ்டில் ஆட இங்கிலாந்து அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து அவர்களுடன் பேசி வருகிறோம்” என்றார்.
இங்கிலாந்து போர்டின் நிர்வாக இயக்குநர் ஹக் மோரிஸ் கூறுகையில், ”எங்களுக்கு இங்கிலாந்து வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். மும்பை தீவிரவாத சம்பவத்தைத் தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யவிருக்கிறோம்” என்றார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடர் தொங்கலில் உள்ள நிலையில், டிசம்பர் 3 முதல் 10 வரை மும்பை மற்றும் சென்னையில் நடப்பதாக இருந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.









































