 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
என்.குமார், பாண்டிச்சேரி.
|
 |
பெட்ரோல், டீசல் விலை ஏற்றங்களுக்கு எதிரான பந்த் தமிழகத்தில் பிசுபிசுத்துப் போனதே?
|
 |
எல்லாக் கட்சிக்காரர்களும் தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸை எதிர்க்கிறார்கள். சொல்லப் போனால் இவர்கள் பெட்ரோலில் கூட அரசியலைக் கலக்கினார்கள்.
|
|
 |
எஸ்.பி.ஸ்ரீநிவாஸ், காரைக்குடி.
|
 |
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர் அறுநூறு ரூபாயாமே?
|
 |
கொடுக்கலாம். பணம் பெரிதல்ல; அந்தப் பெட்டகம்தான் பெரிது.
|
|
 |
ஏ.கிருஷ்ணகுமார், வியாசர்பாடி.
|
 |
திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயர் கொடுத்த நகைகள் எங்கேயாம்?
|
 |
இது மாதிரியான ‘கோவிந்தா’க்கள் திருப்பதியில் அடிக்கடி எழுவதுண்டு. ஆனால் அன்றாட கோவிந்தாக்களில் இந்த கோவிந்தாக்களும் கலந்து போகின்றன. அதுபோல் கலந்து போகப்போகிற ஒரு கோவிந்தாதான், நீங்கள் சொல்லுகிற இந்த கோவிந்தாவும்!
|
|
 |
பி.முபாரக், செங்கல்பட்டு.
|
 |
உங்களை ஆச்சரியப்பட வைப்பது?
|
 |
வியாபாரிகளின் கடையடைப்புகளில் தனியார் கல்லூரிகள் கலந்து கொள்ளாதது ஏன் என்பதுதான் எனது இப்போதைய ஆச்சரியம். இவர்களுள் பலரும் வியாபாரிகள்தாமே!
|
|
 |
எல். விஜயா, சென்னை-72.
|
 |
எப்போதும் கண்ணாடி முன் உட்கார்ந்திருக்கும் பெண்களைப் பற்றி?
|
 |
ஓருசில வீட்டுக் கண்ணாடிகளில் ரசம் போயிருப்பது எதனால் என்கிறீர்கள்? இவர்கள்இப்படி மணித்துளிகளை வீணடிப்பது கண்ணாடிகளுக்கு தாங்கமுடியவில்லை என்பதால்தான்.
|
|
 |
எஸ்.ராஜன், ஆவடி.
|
 |
சென்னையில் படிக்கும் வட இந்திய மாணவர்கள் புரோக்கர் வேலையில் ஈடுபடுகிறார்களாமே?
|
 |
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்கள். கல்வி மன்னர்கள் தவறானவர்களாக இருப்பதால் மாணவர்களும் புரோக்கர்களாக இருக்கிறார்கள். முதலில் கழிவுநீரைக் களைய வேண்டும். பிறகு களைகளைக் கரையலாம்.
|
|
 |
எஸ்.பூபாலன், திருச்சி.
|
 |
தமிழகக் கட்சிகள் விஜயகாந்தை நம்புகின்றனவே?
|
 |
அவர்தான் தனது அளவுக்கு விரிவாக்கம் கொடுத்துவிட்டதே? அப்புறமும் ஏன் அந்த 2016 முதல்வரை (?) 2011இல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
|
|
 |
மு.மணிகண்டன், பெருமாள்புரம்.
|
 |
சென்னையில் காலையில் உங்களை டென்ஷன்படுத்துவது?
|
 |
ஆவிகளைவிட வேகமாக அலையும் அந்த ஃபீக் அவர் பிசாசுகள்! அதாங்க காலையில் பறக்கும் நம்ம ரோபோ இளைஞர்கள்.
|
|
 |
ஜே.சார்லஸ்ராஜ், வேலூர்.
|
 |
கன்னத்தில் குழி இல்லாதவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையா?
|
 |
அதற்கென்ன? கடவாய்ப் பற்களை எடுத்துவிட்டால் இப்போதே இரண்டு பக்கமும் குழிதான். அதுவும் இரட்டை அதிர்ஷ்டம்! என்ன எடுக்கவிடுவோமா?
|
|
 |
ஆர்.ராஜு, விருதுநகர்.
|
 |
இன்றைய அரசியல்வாதிகளுக்கு கிரிக்கெட்டைப் பிடித்திருக்கிறதே?
|
 |
பிடிக்காமல் இருக்குமா? பணத்தைக் கொடுத்ததுமே ‘அவுட்’ ஆக அவர்கள்தானே இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.
|
|
 |
எம்.காசி, திண்டுக்கல்.
|
 |
சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
|
 |
‘சாதி இரண்டொழிய வேறில்லை என்பதெல்லாம் சும்மா பம்மாத்து வேலைன்னு நினைக்கிறேன். ஓட்டுக்கு அலைகிறவர்கள் வேட்பாளர்கள், துட்டுக்கு அலைகிறவர்கள், ஏகப்பட்ட வாக்காளர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பில் நான் மிகவும் குழம்பிப் போயிருக்கிறேன்.
|
|
 |
ஜே.முகுந்தன், வாலாஜாபாத்.
|
 |
மத்திய மந்திரிசபையில் மாற்றம் வரப்போகிறதாமே?
|
 |
களைகள் அப்படியே இருக்கப் போகிறது. சும்மா பிடுங்கி வேறு இடத்தில் நடப்போகிறார்கள். அவ்வளவுதான்! இதனாெல்லாம் வயலொன்றும் மாறப்போவது இல்லை.
|
|
 |
கே.எஸ்.எல்.நாராயணன், வெங்கடேஸ்வரா நகர்.
|
 |
மனைவியிடம் கொடுத்த பணத்திற்கு கணக்குக் கேட்க முடியவில்லையே?
|
 |
‘கார்கோ’ சோதனை மூலம்கூட வரவழைக்கமுடியாத உண்மையை நீங்கள் மறப்பதே நன்று.
|
|
 |
வி.சுதாகர், பட்டாபிரம்.
|
 |
மேலவைக்கு பட்டதாரிகள் தொகுதியில் போட்டியிடுவீர்களா?
|
 |
நான் அந்தக் காலத்து எம்.ஏ., இந்தக் காலத்து பி.ஏ.க்கள் என்னை மதிப்பார்களா? மொத்தத்தில் எனக்கு அரசியல் பிராப்தம் இல்லை. அதனால் கமிஷன் மண்டியில் எப்போதும் எனக்கு இடமில்லை.
|
|
 |
எம்.அருணாசலம், சென்னை.
|
 |
கைரேகை கூட கிடைக்காமல் நடக்கும் இன்றைய திருட்டுகள் பற்றி?
|
 |
இன்றைய திருடர்களிடம் துறை மேலாண்மை மிகுந்து இருக்கிறது. இதைத்தான் தொழில் சுத்தம் என்கிறார்களோ?
|
|
 |
எம்.பாலு, கடலூர்.
|
 |
சென்னை எப்போது சிங்காரச் சென்னையாகும்?
|
 |
அதன் எல்லா சாலைகளிலும் எப்போது ஸ்கேட்டிங் பழகுகிறோமோ அப்போதுதான் அது சிங்காரச் சென்னை! தங்க விதியைக் கொடுத்துவிட்டேன். இனி நீங்களே விடை சொல்வீர்கள்.
|
|
 |
சி.எஸ்.ஏ., சென்னை-600 118.
|
 |
வயது போனவர்களும் செல்போன் வைத்திருக்கிறார்களே?
|
 |
முன்பெல்லாம் சொல்லுக்கு மதிப்பு இப்போதோ செல்லுக்குத்தான் மதிப்பு என்பதைப் பல் இல்லாதவர்களும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இலவச சிம்கார்டாவது வாங்கி ஐந்து ரூபாய்க்காவது ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்கிறார்கள்.
|
|
 |
ஆர்.கிருஷ்ணன், தூத்துக்குடி.
|
 |
உங்களுக்கு பீட்சா பிடிக்குமா?
|
 |
பிய்ச்சா பிடிக்காது. முழுசான்னாதான் பிடிக்கும். ஏற்கெனவே எனக்குக் கொழுப்பு அதிகம் என்கிறார்கள். அதில் இது வேறா?
|
|
 |
ஏ.அப்துல் ஹமீது, வேலூர்.
|
 |
எடியூரப்பாவைப் பிடிக்குமா?
|
 |
தமிழகக் கோயிலுக்கு ஒரு கோடி கொடுக்கிறார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் எவ்வளவு கருத்து வேறுபாடுகளின் நடுவேயும் நட்புப் பாராட்டுகிறார். திருவள்ளுவர் சிலையைத் திறக்க வழிவகை செய்த முதல் கர்நாடக முதல்வர் என்கிற வகைகளில் சபாஷ்பா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!
|
|
 |
எஸ்.டேவிட், திருநெல்வேலி.
|
 |
விஜயகாந்த் குழப்பமாக இருக்கிறாரே?
|
 |
இல்லையே! தெளிவாக இருக்கிறாரே! மக்களுக்கு நன்மை செய்யுமுன் தம் நன்மை; தம் கட்சியின் நன்மை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிற விஜயகாந்திற்கு இக் குற்றச்சாட்டுப் பொருந்தாது.
|
|
 |
எம்.சுந்தர், சிவகங்கை.
|
 |
தோனி 200 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது பற்றி?
|
 |
வாருங்கள், பேசாமல் பேனாவை ஓரங்கட்டி வைத்துவிட்டு கிரிக்கெட் பேட்டைக் கையில் எடுத்துக் கொள்வோம் என்கிறீர்களா? நல்ல விக்கெட் கீப்பர்; நல்ல பேட்ஸ்மேன். நல்ல கேப்டன் எனறு எல்லாவற்றிலும் ஜொலிக்கிறார். உலக கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் ஓர் இந்தியர் என்பதும், இக்தொகையைக் கொடுக்கக் கூடிய சக்தி இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதும் நாம் பெருமைப்பட வேண்டிய விஷயங்களே!
|
|
 |
ஆ.வெற்றிகொண்டான், திருச்சி.
|
 |
அமெரிக்க வால் ஸ்டரீட் ஜர்னல் தமிழக அரசைப் புகழ்ந்திருக்கிறதே?
|
 |
அமெரிக்கப் பாராட்டைச் சாதாரணமாகக் கொள்வதற்கில்லை. இதில் தமிழக மக்களின் பங்களிப்பு மிக அதிகம். வெகு காலம் பிழைத்துக் கிடந்தால் கொள்ளுப் பேரன் பேத்தி கூடப் பிறந்து விடுகிறார்கள். பார்த்து விடலாம். இதில் பாட்டி தாத்தாவின் பங்களிப்பு என்ன பெரிதாக இருக்க முடியும். பெற்ற மக்களுக்கே பெருமை போய்ச் சேரும்!
|
|
 |
நடிகர் எஸ்.செந்தில்குமார், திருவேற்காடு.
|
 |
விஜய் பணத்தைத் திரும்பத் தருவாரா?
|
 |
ரஜினி என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும்! ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் வற்புறுத்தி வாங்குவதில் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதில் திரையரங்கு அதிபர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. ஆக Another Rajini in the making!
|
|
 |
|
|