Sunday, 21 Feb 2010
முதல்வர் மேடையில் முழக்கம் : மன்னிப்பு கேட்க அஜீத் மறுப்பு

‘முதல்வர் பாராட்டு விழாவில் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
‘பாசத்தலைவருக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் எடுத்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் திரைப்படத்துறை கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித்,
“நான் திட்டமிட்டு பேசவில்லை. என் மனதில் தோன்றியதை பேசினேன். அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் உண்மையைத்தான் சொன்னேன். இதை சினிமா உலகில் பலர் ஏற்றுக்கொண்டனர். சிலர் மட்டும் வேறுமாதிரி நினைக்கிறார்கள். நாட்டில் ஒவ்வொரு மக்களும் ஒரு அமைப்பில் இருக்கிறார்கள். அதே போல சினிமா உலகினரும் ஒரு அமைப்பில் இருக்கிறார்கள். இதிலும் பல பிரச்னைகள் இருக்கிறது. முக்கியமான அரசியல் பிரச்னைகள் வரும்போது அதை அரசும், அதற்குள்ள அமைப்புகளும் தீர்த்து கொள்ளும். அதற்காக நாம் சிறப்பான அரசியல் அமைப்புகளை பெற்று உள்ளோம். நமது சினிமா சகோதரர்களுக்குள் உள்ள பிரச்னைகளை நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
முக்கிய பிரச்னைகளில் சினிமா சம்பந்தப்பட்டவர்களும் தலையிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் நினைக்கின்றனர். மற்றொரு பிரிவினர் இது சினிமாகாரர்களின் வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். இதற்குள் நாங்கள் சிக்கி இருக்கிறோம். நடிகர் ஒருவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தால் அவரை தடுக்கிறார்கள். அவரை பரிகாசம் செய்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? உடனே பிராந்திய உணர்வை கிளப்புகிறார்கள். சொந்த மண் எது? மண்ணின் மீது பற்றுதல் இருக்கிறதா? என்று பிரச்னை ஏற்படுத்துகிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும்போது அவர் சிலவற்றில் குரல் கொடுக்கலாம். அவரை ஏன் தடுக்க வேண்டும்?
சொந்த மண் பிரச்னை எல்லா இடங்களிலும் கிளப்பப்படுகிறது. ரசிகர் ஒருவர் சினிமா பார்க்க அல்லது விளையாட்டுக்களை பார்க்க செல்லும்போது அவர் அருகில் இருப்பவர் யார்? அவர் என்ன நிறம்? என்ன மதம் என்ற எந்த கேள்வியும் எழுவது இல்லை. அதுதான் இந்த கலையின் சக்தி. நடிகர், விளையாட்டு வீரர் யார்? என்று ரசிகர்கள் பாகுபாடு பார்ப்பது இல்லை. எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று பார்ப்பது இல்லை. ரசிகர்கள் பல பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். பல மொழிகளை பேசுபவராக இருக்கலாம் ஆனால் அவர்கள் விளையாட்டு, சினிமா மூலம் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்னைகளை பார்க்கும் போது மீண்டும் கேமரா முன்பு நிற்க வேண்டுமா? என்று மனதில் தோன்றுகிறது. சுதந்திரத்தை தடுப்பது போல இருக்கிறது. நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தால் சமூகத்தை பாதிக்கும் என்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதே நடிகர் அரசியலுக்குள் நுழைந்தால், செல்வாக்கை பயன்படுத்தினால் உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கிறார்கள்.
நான் தமிழனாகவே வளர்ந்தேன். தமிழனாகவே என்னை கருதுகிறேன்.
நான் எனது 50வது படமாக தயாநிதி அழகிரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்துக்கு பிறகு கார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று அஜித் கூறியிருக்கிறார்.

































February 23rd, 2010 at 10:51 pm
நான் தமிழனாகவே வளர்ந்தேன். தமிழனாகவே என்னை கருதுகிறேன்,hats of ajith gee,super words come from ur heart keep it up thala