» Goa : Movie review .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Sunday, 31 Jan 2010

Goa : Movie review

கோவா : திரை விமர்சனம்

goa-movie.jpg

கோவா போவது இளைஞர்களின் கனவு. அப்படி கோவா போன மூன்று இளைஞர்கள் பற்றிய கதைதான் ‘கோவா’.

மதுரை பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் மூவரும் நண்பர்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி, வெளியூரு சென்று சினிமா பார்த்த குற்றத்திற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். மூன்று பேரும் மறுபடியும் ஊரை விட்டு ஓடுகிறார்கள்.

மதுரையில் நண்பர் ஒருவன் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதைப் பார்ப்பவர்கள், கோவா போய் தாங்களும் வெளிநாட்டுப் பெண்களைக் காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்று குருட்டுக் கணக்கு போடுகிறார்கள். அதன்படி கோவாவுக்குச் செல்கின்றனர்.

ஜெய், பாடகி பியாவை விரும்புகிறார். வைபவ், சிநேகாவிடம் சரண்டர் ஆகிறார். பிரேம்ஜி, வெள்ளைக்காரப் பெண்ணிடம் மனத்தை பறிகொடுக்கிறார். மூன்று பேரும தங்கள் காதலை ஜெயித்தெடுத்தார்களா என்பது மீதிக் கதை.

ஒரு மது - நடன மேடையில் தோன்றி விட்டு காணாமல்போகும் சிநேகா மீண்டும் எப்போது வருவார், யாருடன் ஜோடி சேருவார் என எதிர்பார்க்க வைக்கிறார். உல்லாச கப்பலுக்கு சொந்தக்காரரான அவர், பிரசன்னாவை அடித்துத் துரத்திவிட்டு வைபவ்வை திருமணம் செய்துகொள்வதும், கோபம் வரும் போதெல்லாம் வைபவ்வை அடிப்பதும்… சிநேகாவுக்கு வித்தியாசமான ரோல்தான்.

ஊர் அம்மன் கோயிலில் இருந்து லவட்டிக்கொண்டு வந்த தங்க கிரீடம் மற்றும் நகைகளை வைபவ் சிநேகாவிடம் கொடுப்பதும் பிறகு, அவற்றை மீட்க கப்பலுக்குள் நுழைந்து போராடுவதும் திகிலுடன் கலந்த திருப்பு முனைகள்.

ஜெய் - பியா, வைபவ் - சிநேகா ஜோடிகளை விட பிரேம்ஜி அமரன் - வெள்ளைக்காரப் பெண் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் விறுவிறுப்புடன் கதையை நகர்த்திய இயக்குநர் வெங்கட் பிரபு இடையில் கொஞ்சம் தடுமாறினாலும், கடைசியில் சுதாரித்துக்கொண்டு பிரமிப்பூட்டுகிறார். அவருக்குப் பக்கபலமாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனும் இருந்திருக்கிறார்கள்.

கோவா என்றாலே சரக்கு அடிப்பதும், சைட் அடிப்பதும்தானா என்று எழும் கேள்வியை அடக்காமல் இருக்க முடியவில்லை.

Related Posts Title


Leave a Reply