 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
எம்.நல்லையா, பாண்டிச்சேரி.
|
 |
இலங்கைத் தமிழர்கள் யாரை ஆதரிப்பது?
|
 |
ராஜபக்சே,பொன்சேகா சாராத தமிழர்களை ஆதரிப்பது நல்லது. ஆனால் இலங்கையின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இலங்கைத் தமிழர்களிடம் நற்பெயர் எடுக்கத் தவறிவிட்டனர். விடுதலைப்புலிகள் ஈழத்தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை எங்கே இயங்கவிட்டார்கள்?
|
|
 |
எஸ்.சாகுல்ஹமீது, மதுரை.
|
 |
ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னுமோர் ஆஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு உண்டா?
|
 |
தேர்வுப் பட்டியலில் ‘கப்பிள்ஸ் ரிட்ரீட்’ என்கிற இவரது இசையமைப்பில் உருவான படமும் இருக்கிறது. பெறட்டும். தமிழன் இசையிலாவது உயரிய அங்கீகாரத்தைப் பெற்றபடி வளரட்டும்!
|
|
 |
எஸ்.செல்வி, மன்னார்குடி.
|
 |
சர்க்கரை விலை குறையும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
|
 |
விளைச்சல் மிகுந்து, மத்திய அரசின் கொள்கை தெளிவாகி சற்று இறக்குமதி செய்தால் சர்க்கரை விலை குறைய வாய்ப்பு அதிகம்! சர்க்கரை விலை குறைக்கப்படாவிடில் மத்திய அரசு சில கசப்பான பாடங்களைப் பெற வேண்டி வரும்!
|
|
 |
எம்.எஸ்.செந்தில்குமார், திருவேற்காடு.
|
 |
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான எல்லாத் தாக்குதல்களும் இனவெறி சார்ந்தவை அல்ல என்கிறாரே ரகுமான்?
|
 |
யாரோ சொல்லிக் கொடுத்ததைப் பேசுகிறார். நிச்சயமாக இத்தாக்குதல்கள் இனவெறி சார்ந்தவையே. மிகச் சில எப்போதும் கையில் கரன்சிக் கற்றைகளை வைத்திருக்கும் பழக்கமுள்ள இந்தியர்களை இலக்காகக் கொண்டவை என்பது உண்மையே!
|
|
 |
‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.
|
 |
சச்சினின் 44வது செஞ்சுரி?
|
 |
முக்கியமான கட்டத்தில் வந்திருக்கிறது. இவரது கட்டை போடும் ஆட்டம் பயன் உடையதுதான் என்பது அண்மையில் மறுபடி நிரூபணம் ஆகியுள்ளது.
|
|
 |
எஸ்.ராஜேந்திரன், உடுமலைப்பேட்டை.
|
 |
தெலுங்கானாவைப் பிரிக்கும் வேலைக்கு 28ஆம் தேதியைக் கெடு வைத்திருக்கும் சந்திரசேகர ராவ் பற்றி…?
|
 |
மத்திய அரசின் சொதப்பலை இனியும் சகித்துக் கொள்ள முடியாதவராகிவிட்டார். தருகிறோம்; மாட்டோம்; ஆகட்டும் பார்க்கலாம் என்று மத்திய அரசா இப்படி மாற்றி மாற்றி நிலைப்பாடு எடுப்பது? வடிவேலு பாணியில் சொன்னால், “ரொம்பச் சின்னப் பிள்ளைத்தனமா இருக்கே!”
|
|
 |
ஆர்.கிஷோர்சிங், பெங்களூரு.
|
 |
அமர்சிங் விலகியது சமாஜ்வாதி கட்சிக்குப் பாதிப்பா?
|
 |
அமர்சிங் ஒரு மகா அரசியல் சாணக்கியர். சமாஜ்வாதி கட்சி அமைப்பின் மூளையை நீக்கிவிட்ட கதைதான். அமர்சிங்கிற்கு மிகப் பலமான பரிவாரம் உள்ளது. இவை நீங்கும்போது கட்சி மேலும் பலவீனப்படும். அமர்சிங்கை அரவணைத்துச் செல்லத் தெரியாத முலாயம் சிங் பெருந்தவறு செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
|
|
 |
டி.விக்டர், வேலூர்.
|
 |
இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் மேட்ச் பார்க்கிறீர்களா?
|
 |
சுவையான கட்டங்களை மட்டும். இந்தக் கடைக்கோடி அணியைத் தோற்கடிக்கவே இந்தியா இந்தத் திணறு திணறுகிறதே! டெஸ்ட்மேட்ச்சின் முதலிடத்தை இந்தியாவில் சில காலமாவது தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை மெல்ல அகன்று வருகிறது!
|
|
 |
டி.மனோகரன், பாபநாசம்.
|
 |
ஜோதிபாசுவை எண்ணுகையில் உங்கள் நினைவலைகளில் உதிப்பவை என்ன?
|
 |
கம்யூனிசக் கொள்கைகளுக்கு உயர்மதிப்பும் செறிவும் ஊட்டிய உண்மையான கம்யூனிஸ்ட். சிற்றுருவமாக இருந்துகொண்டு அனைத்து மத்திய அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். பதவிகளுக்காக எந்த விஷயத்தையும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர். இளைய தலைமுறைக்கு வழிவிட்டு, ஒதுங்கிக் கொண்ட பெருந்தன்மையாளர். 23 ஆண்டுக் காலத்தில் சோம்பிக் கிடந்த மேற்கு வங்கத்திற்கு சுறுசுறுப்பு ஊட்டியவர். குறைபாடுகளும் உடையவர். அவை இந்த நேரத்தில் வேண்டாமென்று பார்க்கிறேன்!
|
|
 |
வெற்றிகொண்டான், திருச்சி.
|
 |
அழகிரி அடுத்த சட்டமன்றத்தில் 200 இடங்களைப் பிடிப்போம் என்று நம்பிக்கையாகப் பேசுகிறாரே?
|
 |
தினமணியின் கேலிச் சித்திரம்தான் நினைவிற்கு வருகிறது. ஏன், மீதமிருக்கும் 34 இடங்களுக்கு செலவழிக்கப் பணமில்லையா?
|
|
 |
ஏ.அப்துல்ஹமீது, தேனி.
|
 |
கூகுல் அமைப்பு அருணாசலப் பிரதேசத்தை சீனாவினுடையது என்கிறதே?
|
 |
மத்திய அரசு இத் தவறைச் சுட்டிக் காட்டியுள்ளது. இனித் திருத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன். சீனாவின் பிரசார பீரங்கியாக கூகுல் எப்போது மாறியது?
|
|
 |
பி.செபாஸ்டியன், கீழ்ப்பாக்கம்.
|
 |
அ.தி.மு.க.வினரே ஜெயலலிதா வீட்டின்முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன்?
|
 |
அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல்களில் ஏகப்பட்ட அரசியல்; உட்பூசல்கள்; முறைகேடுகள். ஜெயலலிதா, கருணாநிதி அளவிற்கு அடிமட்டத் தொண்டர்களால் எட்ட முடியாதவர். எனவே அவரது கவனத்தை ஈர்க்கவிட்டு வாசலுக்கே போய்விட்டார்கள். கட்சிக் கட்டுபாட்டிற்குப் பெயர் போன அ.தி.மு.க.வில் ஜெயலலிதா காட்டும் மெத்தனத்தாலும், புறக்கணிப்புகளாலும் மிதமிஞ்சிய ஓய்வுகளாலும் அளவு கடந்த தனிமைகளாலும் நிலைமைகள் மோசமாகி வருகின்றன.
|
|
 |
வி.பிரகதீஷ், சென்னை.
|
 |
இந்திய அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கை?
|
 |
வரி என்ற பெயரால் பால் கொடுத்தவனைப் பட்டினி போடுகிறது. பால் குடித்தவனுக்குப் பக்க பலமாக இருக்கிறது.
|
|
 |
ஆர்.மகேஸ்வரன், திருத்தணி.
|
 |
நண்பர்களை நம்பி திரைப்படத் தயாரிப்பில் இறங்கலாமா?
|
 |
நடிக்கமாட்டார்களே..? அப்படியானால் இறங்குங்கள். பொதுவாகவே நம் நண்பர்கள் பலரும் (சிறந்த) நடிகர்கள்.
|
|
 |
பி. பூபதி, அரக்கோணம்.
|
 |
அறிவை கடனாகக் கொடுக்கலாமா?
|
 |
எதுவுமே கடனாக வேண்டாம். கடனாகக் கொடுத்தால் அவை திரும்பாது. எனவே அதை ஒரு மானியமாகக் கொடுங்கள். மானியமாகக் கொடுத்தால் உங்களுக்கும் மதிப்பு! கூடவே திருப்தியும்கூட!
|
|
 |
எஸ்.சங்கரபாண்டியன், மதுரை.
|
 |
ப.சிதம்பரம் பதவி ஏற்ற பிறகு தீவிரவாதமும் குண்டு வெடிப்புகளும் குறைந்துள்ளனவே!
|
 |
தற்செயலானதா அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்பது விவாதத்திற்குரியது. இந்தப் பரந்து விரிந்த தேசத்தின் மிக நீளமான கடற்கரை எல்லை கொண்ட நம் நாட்டில் தீவிரவாதிகள் நுழைவதும் அநியாயம் புரிவதும் எளியவை. தீவிரவாதிகளுக்கு இந்தியாவை விட இப்போது பாகிஸ்தான்தான் இலக்கு என்று படுகிறது.
|
|
 |
எஸ்.குமரன், கொளத்தூர்.
|
 |
உங்கள் வீட்டில் உங்களுக்குப் போட்டி யார்?
|
 |
எங்கள் வீட்டில் இசை நாற்காலிகள் இல்லை. இருக்கிற எல்லா நாற்காலிகளும் இசைக்காத நாற்காலிகளே!
|
|
 |
|
|