» Aairathil Oruvan : Movie review .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Tuesday, 19 Jan 2010

Aairathil Oruvan : Movie review

ஆயிரத்தில் ஒருவன் : திரை விமர்சனம்

aayirathil-oruvan.jpg

யிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மக்களுடன் தப்பிச் செல்லும் சோழ இளவரசனை கண்டுபிடிக்கும் கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்கள் படையெடுப்புக்குப் பிறகு, வியட்நாம் அருகிலுள்ள தீவு ஒன்றுக்கு மக்களுடன் ஓடுகிறான் கடைசி சோழன். அப்போது பாண்டியனின் குல தெய்வத்தையும் திருடிக்கொண்டு செல்கிறான்.

அவரையும் அந்த சிலையை தேடி ஆராயும் பலரில் தொல்லியல் ஆய்வாளர் பிரதாப்பும் ஒருவர். அவரும் நாடு திரும்பவில்லை. அவரைத் தேடி கண்டுபிடிக்க பாதுகாப்பு அதிகாரி ரீமாசென் தலைமையில் ரகசியப் படையை அனுப்புகிறது அரசு. அவர்களுக்கு வழிகாட்ட பிரதாப்பின் மகளும் இளம் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரியா செல்கிறார். இவர்களுக்கு உதவி செய்ய செல்லும் கூலிப்படையின் தலைவனாக கார்த்தி.

காடு, மலை, கடல், பாலைவனவெல்லாம் தாண்டி செல்கிறது இந்த படை. அவ்வளவு எளிதாகத் தன்னைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக வழியெங்கும் 7 ஆபத்துகளை உருவாக்கி வைத்திருக்கிறார் கடைசி சோழனாக வரும் பார்த்திபன். இதையெல்லாம் கடந்து சோழனின் இருப்பிடத்தை அடைகிறது ரீமாசென் தலைமையிலான படை. சோழனின் பிடியில் மூவரும் சிக்குகின்றனர். சோழ வம்சத்தைச் சேர்ந்த தூதர் எனச் சொல்லும் ரீமாசென் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதும், சோழனிடம் சிக்கியுள்ள பாண்டியச் சிலையை மீட்க வந்தவர் என்பதும் பின்னர் தெரிகிறது. அவருக்கு சிலை கிடைத்ததா? சோழனும் அவனுடைய மக்களும் என்ன ஆனார்கள்? கார்த்தி ஆண்ட்ரியா என்ன ஆனார்கள் என்பதும் மீதிக்கதை.

ஹாலிவுட் பட ரேஞ்சில் எடுக்கப்பட்டுள்ள கதையில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா மூவரின் ரொமாண்டிக் காட்சிகளும் உண்டு. மாயாஜாலமும் பின்னுகிறது.

முன்பாதியில் கலகலவென செல்லும் கதை பின்பாதி யில் குழப்பக்குட்டையாக தேங்கி நிற்கிறது. மக்களை துன்புறுத்தும் சோழ மன்னன் பார்த்திபன் நல்லவனா கெட்டவனா? வறுமையில் வாடி வரும் அவனுடைய மக்கள் அதுவரை தாக்குப் பிடித்தது எப்படி? இருண்ட குகைக்குள் நூற்றாண்டு காலமாக மக்கள் வாழ்ந்துகொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

ஆபத்துகளை கடந்து செல்லும் காட்சிகள் அற்புதம் என்றாலும், ஒரு போன் அடித்தால் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவார்கள் என்றால், அந்த ஆபத்துகளைச் சந்திக்காமலேயே அந்த இடத்திற்கு கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா குழுவும் வந்திறங்கிறங்கிருக்கலாமே?

கார்த்தி தனது நடிப்புத் திறமையை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறார். ரீமாசென்னும் தன்னுடை பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை. பார்த்திபனுக்கு வித்தியாசமான வேடம் என்றாலும் அவர் செய்யும் கொடூர சேட்டைகளை தாங்க முடியவில்லை.

பாடல்களில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பின்னணி இசையில் காணாமல் போய்விட்டார். ராம்ஜியின் ஒளிப்பதிவும், டி.சந்தானத்தின் கலையும் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.

வித்தியாசமான முயற்சித்தான் என்றாலும் ஆயிரத்தில் ஒருவனை குழப்பமில்லாமல் கொடுத்திருந்தால் ஆயிரத்தில் ஒரு அபூர்வ இயக்குநராக செல்வராகவன் மாறியிருப்பார்..

Related Posts Title


Leave a Reply