Sunday, 3 Jan 2010
துணிச்சல் : திரைப்பட விமர்சனம்

அருண் விஜய்யும் ஷிவா முன்ஜாலும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அதேசமயம் ஒருவரை ஒருவரை கொல்லவும் துடிக்கிறார்கள். இதற்கு காரணம், ரமணாவின் சதித்திட்டம். ஷிவாவை ஒருதலையாகக் காதலிக்கிறார் ரமணா. ஷிவா முன்ஜால் அருண் விஜய்யை திருமணம் செய்யப் போவதை அறிந்து, தன்னுடைய காதலுக்கு குறுக்கே வந்தவர்களை தீர்த்துக்கட்ட எண்ணி ஒரு சதித் திட்டம் தீட்டுகிறார். அதில் ஒரு பகுதிதான் அருண் விஜய்யும் ஷிவா முன்ஜாலும் ஒருவரை ஒருவர் கொல்ல எடுக்கும் முயற்சிகள். ரமணாவின் சதித்திட்டம் ஜெயித்ததா, அதைப் பின்னுக்குத் தள்ளி அருண் - ஷிவா காதல் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.
ஷிவாவை உருகி உருகி காதலிப்பதும், அவரை கொலை வெறியுடன் பார்ப்பதும், சண்டைக்காட்சிகளிலும் எதிரிகளை பந்தாடுவதும்… அருண் விஜய் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
அருண் விஜய்யை காதலிக்கும் போது அழகாக இருக்கும் ஷிவா முன்ஜால் கொலைகாரியாக மாறும்போது கோட்டை விடுகிறார். விட்டால் நடிப்பு என்ன விலை எனக் கேட்பார் போலிருக்கிறது.
ரமணா வில்லத்தனம் செய்கிறாரா அல்லது காமெடி கீமெடி செய்கிறாரா என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசை (ஏதோ) அமைத்துள்ளார். இளவரசு, கதா. கணேசனின் ஒளிப்பதிவு பரவாயில்லை.
சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள், சுவாதிகாவின் கவர்ச்சி இவற்றின் துணையோடு மசாலா படம் தரும் முயற்சியில் கொஞ்சமாகத்தான் வெற்றிப் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஏ.மஜீத்.
































