Saturday, 21 Nov 2009
மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஸ்வைன் ஃப்ளூ ரோபோ!

உலகை மிரட்டி வரும் பன்றிக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை அணுகும் போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை ஊழியர்களும் அந்தக் காய்ச்சலுக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கிறது. எனவேஇ பன்றிக்காய்ச்சல் தொற்றிய நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது என்றாலே பெரும்பாலான மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களுடைய அச்சத்தைப் போக்கும் வகையில் ‘ஸ்வைன் ஃப்ளூ ரோபோ’ ஒன்றை ஜப்பானிய நிறுவனம் தயாரித்துள்ளது.
ஸ்வைன் ஃப்ளூ ரோபோ மூலம் மருத்துவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் குறித்து நன்றாகப் பயிற்சி தரலாம். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும், சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், அவர் இருப்பாரா இறப்பாரா என்பதை எல்லாம் மிகத் துல்லியமாக இந்த ரோபோ செயல்படுத்திக் காட்டுகிறது. மனிதனுக்கு சுரப்பது போலவே வேர்வை மற்றும் கண்ணீரையும் இந்த ரோபோ வெளிப்படுத்துகிறது. அறிகுறிகளையும் தன்னுடைய உடல் அமைப்பில் வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ற வகையில் அதன் மேற்புறம் மனிதத் தோல் போன்ற பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்த ‘செக்யூரிட்டி மற்றும் சேஃப்டி எக்ஃபோ’வில், கண்காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த ‘ஸ்வைன் ஃப்ளூ ரோபோ’ க்கு மருத்துவ நிறுவனங்களுக்கிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.
































