சூர்யா, சரத்குமார், விவேக் உட்பட 8 பேர் சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சிவகங்கை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நடிகை, நடிகர்கள் எட்டு பேர், வரும் 19ம் தேதி ஆஜராக நீதிபதி ஜி.என்.சரவணக்குமார் உத்தரவிட்டார்.
சிவகங்கை பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் கார்த்திகேயன் மனைவி தமிழ்ச்செல்வி சார்பில் வக்கீல்கள் ஏ.குமரன், ஆர்.ராஜேஷ் கடந்த 27ம் தேதி தாக்கல் செய்த மனு:
சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘சில நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதாக’ தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட நடிகைகளின் பெயர்களை படங்களுடன், ‘தினமலர்’ வெளியிட்டது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. காவல்துறையினர் கொடுத்த தகவலின்படி செய்தி வெளியானது.இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி, சென்னை கமிஷனரிடம், ‘தினமலர்’ நாளிதழுக்கு எதிராக புகார் செய்தார். கமிஷனர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், ‘தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார்.’தினமலர்’ நாளிதழை கண்டித்து, சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7ம் தேதி நடந்த கண்டனக் கூட்டம் குறித்த செய்தி, “டிவி’ சேனல்களில் ஒளிபரப்பானது.
அந்த கூட்டத்தில் பல நடிகர்கள் பேசினர்.நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், சூர்யா, அருண் விஜய், சரத்குமார், சேரன், விவேக் ஆகியோர் பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிக கேவலமாக பேசினர். இதை ‘டிவி’யில் பார்த்த போது வேதனையாக இருந்தது.உறவினர்கள், நண்பர்கள் என்னிடம் போனில் பேசி இதுகுறித்து விசாரித்தனர். எனக்கு அவமானமாக இருந்தது. மேலும் நிகழ்ச்சியை, ‘சிடி’ ஆக தயாரித்து மற்றவர்கள் பார்க்க செய்துள்ளனர்.
நடிகர், நடிகைகளின் இந்த செயலால் எனது குடும்பத்தினருக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டது. அவர்கள் ஐ.பி.சி., 499 பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர்.எனவே, இம்மனுவை விசாரணைக்கு ஏற்று அவதூறு பேசிய நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரினார்.
இந்த மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட் நேற்றைக்கு (அக்., 30) ஒத்தி வைத்தார். நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், சூர்யா, அருண்விஜய், சரத்குமார், சேரன், விவேக் ஆகியோர் வரும் 19ம் தேதி சிவகங்கை கோட்டில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.