Monday, 28 Sep 2009
இதயங்களை இணைப்பது இறை உணர்வு மட்டுமே:
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்
மக்களின் இதயங்களை இணைப்பது இறை உணர்வு மட்டுமே என்று ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசினார்.
சென்னை மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று நடைபெற்ற ‘ஈத் பெருநாள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசுகையில்,இ
“கூடாரங்கள் வெவ்வேறாக இருக்கட்டும். இதயங்கள் இணைந்தால் போதும்’ என்று மத நல்லிணக்கத்துக்கு இலக்கணம் வகுத்தவர் நபிகள் நாயகம். அசைக்க முடியாத இறை நம்பிக்கையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பது இஸ்லாம்.
இறைநம்பிக்கை இல்லாதவர்கள் நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். இறைவனையே ஏற்க மறுக்கும், நம்பிக்கை என்பதே இல்லாமல் இருக்கும் இவர்கள் எதிர்மறைச் சிந்தனையாளர்கள். அப்படிப்பட்டவர்களால் சமுதாயத்தை ஒன்றுபடுத்த முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆங்கிலேயர்கள் கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியை இன்றைய ஆட்சியாளர்களும் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
அரசியல் ஆதாயத்துக்காக மனிதனை மதம் பிடிக்கச் செய்கிறார்கள். அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். அதில், அரசியல் ஆதாயம் தேடட்டும். ஆனால், நாம் ஒற்றுமையாக இருப்போம். நல்லிணக்கத்தை வளர்ப்போம்.
எனக்கு முன்பு பேசிய, டாக்டர் ஹபீப் முகம்மது, சொன்னது போல, தீயவர்கள் ஐந்து சதவீதம் தான். அதை எதிர்ப்பவர்களும் ஐந்து சதவீதம் தான். மீதி 90 சதவீதம் பேர் தீமை நடப்பதை கண்டும் காணாமலும் நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள். இப்படி இருப்பதும் ஒரு வகையில் தீமைக்கு சமம் தான். அதைத் தான் புனிதக் குர்ரான் கூறுகிறது.
நல்லது செய்ய நினைப்பதை அன்றே செய்திட வேண்டும் என்கிறது புனிதக் குர்ரான். ஏனைய மத நூல்களும் இதைத்தான் கூறுகின்றன. காரணம், நாளை என்பது நம்மிடம் இல்லை. வள்ளுவப் பேராசான் கூறுவது போல, உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
மனிதன் தான் நிரந்தரமானவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டாலே அவனது அகந்தையும், தான் என்கிற ஆணவமும் அழிந்து விடும். நம்மில் ஒருவர் கூட இந்த உலகுக்கு நிரந்தர விசாவில் வரவில்லை. இதைப் புரிந்து கொண்டாலே நமக்குள் கருத்து வேறுபாடுகளும், கோபதாபங்களும் அகன்று விடும். இதைத்தான் திருக்குர்ரானும் ஏனைய மத நூல்களும் நமக்கு உணர்த்துகின்றன. இதை நமது மதவாதிகள் மக்களுக்கு உணர்த்தினாலே மதமாச்சரியங்களும் மனமாச்சரியங்களும் மறைந்து விடும்.
மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் ஒருவரை வெறுப்பதையும், பழிப்பதையும் விடப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம் எதுவுமே இருக்க முடியாது. வேடிக்கை என்னவென்றால் ஜாதியின் பெயரால் பழிப்பவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தான். இங்கே நம்மில் எவராவது ஒருவர் விரும்பிப் பெற்றோமா நமது பிறப்பை? எனக்கு இந்த ஜாதியில், இந்த மதத்தில் பிறக்க வேண்டும் என்று மனுப் போட்டுப் பெற்றோமா? ஜாதியும், மதமும் கடைச்சரக்காக வாங்கியதா?
பிறப்பு என்பதே ஒரு விபத்து. சில நொடிப் பொழுது மாறியிருந்தால் நமது ஜாதியும், மதமும், நாடும், மொழியும், கூட மாறியிருக்கக் கூடும். அப்படி இருக்கும் போது, ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மனிதன் சண்டை போட்டுக் கொள்வதை விட முட்டாள்தனம் வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், ராமேசுவரத்திலிருந்து காசிக்குப் போகும் இந்து யாத்திரிகர் யாரிடமும் எந்த நவாபும், ராஜாவும் விசா, பாஸ்போர்ட் கேட்டதில்லை. அதேபோல, தாக்காவிலிருந்து அஜ்மீர் ஷெரீப் செல்லும் இஸ்லாமிய யாத்ரிகர்களை எந்த ராஜாவும் தடுத்ததில்லை. சமூக நல்லிணக்கம் என்பது இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடு. நமது ரத்தத்தில் ஊறிய உணர்வு.
இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், ஜைனர், பௌத்தர் என்ற வேறுபாடில்லாமல் இங்கே நாமெல்லாம் கூடியிருப்பது போல, இந்தியர்களாக நாம் எல்லா விழாக்களிலும் ஒன்று கூட வேண்டும். இதை எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். எல்லா பள்ளி வாசலிலும், கோயில்களிலும், மாதா கோயில்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். பிறகு, நம்மை அரசியல்வாதிகளும், மத வெறியர்களும் பிரிக்க முடியாது ” என்றார் வைத்தியநாதன்.
































