Friday, 10 Jul 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
அசுவதந்தி திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சம்
ஆடாதொடை(ADHATODA VASICA)
இது ‘மலபார்நட்’ என ஆங்கிலத்திலும் “Adhatoda vasica” எனும் அறிவியல் பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறது. இது, ‘அகன் தாசியே’ எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
மனிதன் பாம்பு, புலி போன்றவைகளுக்கு பயப்படுகிறானோ இல்லையோ, குளிர்ந்த காற்று, ஈரத்தைக் கண்டு பயந்துக் கொண்டுதான் இருக்கின்றான்.
மனிதனின் உடல் நலனைக் கெடுத்து, அவனுடைய அன்றாட செயல்பாடுகளைச் சீர்குலைத்து செயலிழக்க வைப்பதில் ஜலதோஷத்திற்கும், அலர்ஜிக்கும் தனி இடமே உண்டு. இதனைப் போக்கி, குணப்படுத்த பல மூலிகைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். “இருமல் மூலிகை” என்று பட்டப் பெயருடன் அழைக்கப்படும் “ஆடாதொடா” மூலிகையும் அவற்றில் ஒன்றாகும். இதனைப் பற்றி மருத்துவக் களஞ்சியத்தில் கூறப்பட்டு இருப்பதாவது.
ஆடாதொடையின் வேறு பெயராக ஆடாதொடை வாசிகா எனவும் அழைக்கப்படுகிறது.
இச்செடி தென்னிந்தியாவிலும், வங்காள தேசத்திலும் ஏராளமாய்ப் பயிராகின்றது. இதன் இலை, மாவிலை, நுணா இலைகளைப் போல 4 முதல் 9 அங்குல நீளமாகவும், 2 முதல் 3 அங்குலம் அகலமாகவும் இருக்கும். மேலும் 4 முதல் 10 அடி உயரம் வரை வளரும். மருத்துவ பயன்பாட்டுக்கு இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை உதவுகின்றன. கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இசிவு அகற்றும், கோழை அகற்றும், புழுக்களைக் கொல்லும், சிறுநீர் பெருக்கும் குணங்கள் உள்ளன.
சித்த மருத்துவம்
இலையின் குணம்
* வாயுநோய், பலவகை காய்ச்சல், வயிற்று நோய், இருமல், வாந்தி, விக்கல், சூலை நோய், அண்ட வாயு ஆகியவைகளைப் போக்கும். பாடகர்களுக்கு நல்ல குரல் ஒலியைத் தரும்.
* இலையின் சாறு 10 அல்லது 20 துளிகளை எடுத்து, தேனுடன் கலந்து கொடுத்தால் மேற்சொன்ன நோய்கள் நீங்கும். குறிப்பாக குருதியழல், இருமல், இளைப்பு நோய், சுரம், காமாலை தீரும்.
* இலையை மட்டும் குடிநீர் செய்து அதில் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.
* சுமார் 3 இலைகளைக் குறுக்காக அரிந்து இதனுடன் 1 ஏலக்காய் சேர்த்து 200 மி.லி. அளவு வெந்நீரில் 2-3 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 25 முதல் 50 மி.லி. வீதம் தினமும் 3 வேளைக்கு கொடுத்தால் இருமல், காய்ச்சல், குருதியழல் போகும்.
* 2, 3 கொழுந்து இலைகளைப் பொடியாகக் கத்தரித்து புதிய மண்சட்டியில் இட்டு, சிறிதளவு தேன் சேர்த்து எரித்தால் ஒருவிதமான வாசனை வீசும். அப்போது அதிமதுரம் 5 கிராம், திப்பிலி 3 கிராம், தாளிசபத்திரி 3 கிராம், சிற்றரத்தை 1 கிராம் எனப் போட்டு ஒன்றிரண்டாக நசுக்கி சேர்த்து 500மி.லி சுத்தமான தண்ணீர் விட்டு 100 மி.லி. யாகும் வரை சுண்டச் செய்து வடிகட்டி, காலை, மாலை 2 வேளைகள் கொடுத்து வந்தால் கோழைக் கட்டு அகலும். சளி வெளிப்படும். இருமல், இரைப்பு, காய்ச்சல் போன்றவை நீங்கும்.
* ஒரு பங்கு இலைக்கு 8 பங்கு நீர் சேர்த்து 8ல் 1 பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிய நீரை துணியில் தோய்த்து ஒத்தடமிட்டால் வீக்கம், சூலை, கீழ்பிடிப்பு முதலியவை குறையும்.
* இலையின் தனிரசத்தை அருந்தினால், இரத்தபேதி, சீதமும் இரத்தமும் கலந்து போகும் கழிச்சல் நோய் தீரும்.
* இலையை உலரவைத்து சுருட்டாக சுருட்டி புகை பிடித்தால் இரைப்பு நோய் தீரும்.
* இலை, வேர் சமஅளவுகளாக எடுத்து, அதற்கு தக்கபடி மிளகு சேர்த்து, ஊறல் குடிநீர் செய்து கொடுத்தால் இரைப்பு, உப்பிசம், ஈளை, இருமல், காய்ச்சல் தணியும்.
மெழுகு : இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு புதிய மண்பாண்டத்தில் விட்டு,மெழுகு பதமாய்க் காய்ச்சி, 2 முதல் 5 குன்றிமணி அளவு தனித்தோ அல்லது திப்பிலிப் பொடி சேர்த்தோ தினமும் 3-4 வேளை சாப்பிட்டால் சில வகைப் பிணிகள் போகும்.
* இலைச்சாறு 1 பங்கு, தேன் அல்லது இஞ்சிச்சாறு அரைப்பங்கு, இரண்டும் சேர்த்து மெழுகு போல பதமாக காய்ச்சி 2 முதல் 4 குன்றி மணி அளவு தினமும் 3 முறை கொடுத்தால் இரைப்பு, ஈளை, இருமல், இளைப்பு நோய் நீங்கும்.
பூ : பூவை வதக்கி, இருகண்களின் மீதும் வைத்துக் கட்டினால் கண் நோய்கள் தீரும்.
பட்டை : இதனைக் குடிநீர் செய்தாவது, பொடியாகச் செய்தாவது காய்ச்சல், இருமல், இரைப்பு, இளைப்பு ஆகிய நோய்களுக்குக் கொடுக்கலாம்.
வேர் : இதனால் இருமல், அழல் மந்தம், கடுமையான மூச்சு, கழுத்து வலி நோய்கள் போகும்.
* இதன் வேரையும், கண்டங்கத்திரி வேரையும், குடிநீரிட்டு அதில் திப்பிலிப் பொடியை சேர்த்து கொடுத்தால் இருமல் நீங்கும்.
* ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சீந்தில் கொடி, வகைக்கு சிறிதளவு எடுத்து, 16 பங்கு நீர் சேர்த்து 8ல் 1 பங்கு ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து தினமும் 2-3 முறை கொடுத்து வந்தால் இருமல், கோழைக்கட்டு, காய்ச்சல் தீரும்.
* ஆடாதொடை, திராட்சை, கடுக்காய் இவற்றின் குடிநீரில் தேனும் சர்க்கரையுங்கட்டி சாப்பிட்டால் கொடுமையான குருதியழல், இரைப்பு இருமல் தீரும்.
* ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர், சுக்கு, கொள்ளு இவை சேர்ந்த குடிநீரில் அல்லிக்கிழங்கின் பொடியைக் கூட்டிக் கொடுக்க இரைப்பு இருமல் தீரும்.
குடிநீர் : ஆடாதொடை, கண்டு பரங்கி, கையாந்தகரை சங்கன், காஞ்சொறிவேர்,அல்லிக்கிழங்கு, சுக்கு, மிளகு இவற்றைச் சேர்த்துத் தக்க நீர்விட்டு, அது 8-ல் 1 பங்காக வற்றுமாறு காய்ச்சி அதனைத் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் நீங்கும்.
பிற குறிப்பு : ஆடாதொடை ஓர் மருந்துச் செடியாகும். இதை ஹகீம்கள் முக்கியமாய் கெண்டை வாங்கல் வலி, நரம்புத்தடிப்பு, கரண வாதம், கொரண்டல் வாதம் இவற்றிற்குப் பயன்படுத்துகின்றனர்.
ஈழை காசம், மந்த காசம் இவற்றால் ஏற்படுகிற குளிர் சுரம் வராமல் தடுக்கவும், கஷாயமாகவும், லேகியமாகவும் செய்து கொடுக்கிறார்கள். அது கொஞ்சம் கசப்பாக இருக்கும்.
இதன் உலர்ந்த இலையின் குடிநீர், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் விழவும், கொடுக்கப்படுகிறது. இதன் பச்சை இலையை அரைத்து, ஆமணக்கு எண்ணெயில் குழப்பி கரப்பான் புண்களுக்கு மேல் பூச்சாகப் பூசினால் புண்கள் ஆறிப்போகும் என சித்த வைத்திய மூலிகை மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.
யுனானி மருத்துவம்
தோற்றம் : இது இருமலுக்கு மிகவும் பயனுள்ள மூலிகையாகும். இதன் அரபு பெயர் ‘ஹஷீஷதுஸ் சஆல்பீ’ (இருமல் மூலிகை) ஆகும். இது 1/2 கஜத்திலிருந்து 1 கஜம் வரை உயரமாக வளரும். இதில் கிளைகள் அதிகமாக இருக்கும். இதன் இலைகள் மாமர அலைகள் போன்று இருக்கும். ஆனால், அதைவிட லேசாகவும், மிருதுவாகவும் இருக்கும். இலை கசப்பாக இருக்கும்.
பூக்கள் வெண்மையாய் அழகாய் ஒன்றோடு ஒன்று சேர்ந்து காணப்படும். பூக்களின் கழுத்துப்பகுதியில் தேன் போன்ற இனிப்பான திரவம் இருக்கும். கிளைகள் வெண்மை நிறம் கொண்டதாக இருக்கும். இதன் பழங்கள் இரண்டு பாகமாக பிரிந்திருக்கும். ஒவ்வொரு பாகத்திலும் அரஹர பருப்பு அளவில் இரண்டு விதைகள் இருக்கும்.
வளருமிடம் : இது அதிகமாக இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாகாணத்திலும் மற்றும் வங்காளத்திலும் உற்பத்தியாகிறது. இது கடினமான கல் நிறைந்த பூமியில் வளரும்.
வகைகள் : இது இரண்டு வகைப்படும். 1. முள் உடையது பியா பான்ஸா, 2. முள் இல்லாதது பான்ஸா (ஆடாதொடா)
இயல்பு : உஷ்ணம் - வறட்சி (முதல் நிலை) சிலர் உஷ்ணம் என்றும், சிலர் குளிர்ச்சி - ஈரம் என்றும் கூறுகின்றனர். பூக்கள் ஈரமானத் தன்மை உடையது என்று கூறப்பட்டுள்ளது.
பயன்படும் உறுப்புகள் : இலை, வேர், பூக்கள்.
பண்புகளும், பயன்களும் : சளியை வெளியேற்றும் காரணத்தால் ஆஸ்துமா மற்றும் இருமல் நோய்க்குப் பயன்படுகிறது. நுரையீரலுக்குள் காற்றுச் செல்லும் பாதையைத் தூய்மையாக்குகிறது.
கிருமிகளைக் கொல்கின்ற காரணத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான், இருமல் போன்ற நோயைப் போக்க இதன் வேர்ப்பட்டையைக் கஷாயமாக்கிக் கொடுப்பார்கள். காசநோய்க்கு இதன் இலைகள் அல்லது வேர்ப்பட்டையைக் கஷாயமாக்கிப் பயன்படுத்துவார்கள்.
மேலும், இந்த நோய்க்கு இதன் பூக்களைக் கொண்டு சர்பத் அல்லது குல்கந்து தயாரித்து பயன்படுத்துவார்கள். வயிற்றுப் பூச்சிகளைச் சாகடிக்கப் பயன்படுகிறது. இதன் இலைகளைத் துணியில் வைத்தால் பூச்சிகள் வராது.
இதன் கஷாயம் ஜுரங்களைப் போக்கப் பயன்படுகிறது. துர்நாற்றம் கொண்ட சளியை வெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது.
இரத்தத்தைச் சுத்தம் செய்யும் காரணத்தால் தொடை நோய், சொறி, சிரங்கு, நமைச்சல் போன்ற நோய்க்கு பயன்படும். மூக்கிலிருந்து இரத்தம் வருவதைத் தடுக்கிறது.
இதன் புதிய இலைகளின் சாற்றைத் தேனில் கலந்து பயன்படுத்துவார்கள். உலர்ந்த இலைகளைப் பவுடராக்கி தேனில் கலந்து பயன்படுத்துவார்கள். பூக்களைக் கொண்டு குல்கந்து தயாரித்துப் பயன்படுத்துவார்கள்.
தீய விளைவுகள் : உடல் குளிர்ச்சி குணம் உள்ளவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
தணிக்கும் முறை : இத்துடன் மிளகு மற்றும் தேன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
தீர்க்கும் நோய்கள் : ஆஸ்துமா, இருமல், சளி, கக்குவான், காசநோய், வயிற்றுப்பூச்சிகள், சொறி, சிரங்கு, நமைச்சல், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
சிறப்புக் குறிகள் : ஆஸ்துமா மற்றும் இருமலுக்குப் பயன்தரும். மாத விலக்கைப் பிரியச் செய்யும்.
அளவு : இலை மற்றும் வேர் பவுடர் 2 அல்லது 3 கிராம்.
கஷாயம் : 5 கிராம் முதல் 12 கிராம் வரை. (ஆடாதொடாவை எரித்து அதன் சாம்பலிலிருந்து உப்பு எடுக்கப்படுகிறது. இது ஆஸ்துமா மற்றும் இருமலுக்கு பயனுள்ளது).
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்
திருக்களர் சிவன்கோயில் தலவிருட்சமாக ஆடாதொடை வணங்கப்படுகிறது.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/07/04 திருச்செங்காட்டாங்குடி ஆத்திவனநாதர் கோயில் தலவிருட்சம் அத்தி மரம்
2009/06/26 நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோவில் தலவிருட்சம் ஆமணக்கு
2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி
2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி
2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்
2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்
2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்
2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்
2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்
2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்
2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































