Tuesday, 7 Jul 2009
தோழி த்ரிஷா! : சிம்பு

த்ரிஷா எனக்கு தோழி மட்டுமே(!), அவருடன் காதல் இல்லை என்று சிம்பு வாய் திறந்திருக்கிறார்.
கெளதம் மேனன் இயக்கும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் இந்த ஜோடி ஒன்றிணைந்திருக்கிறது. இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுவும் மண்ணைத் தாண்டி விண்ணி்ல் வலம் வந்து கொண்டிருக்கிறது. இப்படப் படப்பிடிப்பின்போது இருவரும் அதிக நெருக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் செய்தியை த்ரிஷா ஏற்கனவே மறுத்துள்ள நிலையில் சிம்புவும் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
”த்ரிஷாவை நான் காதலிப்பதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது எனப் புரியவில்லை. பள்ளியில் படிக்கும்போதே த்ரிஷாவைத் தெரியும். அப்போது முதல், அவர் எனக்கு தோழிதான். சினிமாவுக்கு வந்த பின்பும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இருவரும் இணைந்து ‘அலை’ திரைப்படத்தில் நடித்தோம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் நடிக்கிறோம். எங்கள் நட்பு மேலும் வளர இந்தப்படம் காரணமாக உள்ளது. மற்றபடி இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. என்னுடைய வேலையை மட்டும் காதலிக்கிறேன்.
படப்பிடிப்புக்காக மால்டா தீவு சென்றோம். அங்கு மன்மதன்-2 மற்றும் வாலிபன் திரைப்படக் கதைகளை எழுதிவிட்டேன். அடுத்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்று சொல்கிறார் சிம்பு.
































