Saturday, 4 Jul 2009
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா?; சட்டசபையில் அமைச்சர் பதில்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மத்திய மனித வள மேம்பாட்டு மந்திரி கபில்சிபல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று ஞானசேகரன் (காங்):- கேட்டார்.
அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
”மத்திய மந்திரி கபில்சிபல் தெரிவித்துள்ள கருத்து பற்றி தேசிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் நாட்டிலும் இதற்கு ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 6-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 10-ம்வகுப்பு பொதுத் தேர்வு என்பது மேல் நிலைப்படிப்புகளை தொடர முக்கியமான படிக்கல் போன்றது. பாலி டெக்னிக், ஐ.டி.ஐ., 12-ம் வகுப்பு படிப்பை தொடர இது தேவைப்படுகிறது.
மத்திய மந்திரி சொல்லி இருப்பது ஒரு கருத்துதான். மாநில அரசுகளுடன் கலந்து பேசி பின்னர் முடிவெடுக்கலாம் என்றுதான் அவர் கூறி இருக்கிறார். மத்திய அரசு மாநில அரசிடம் இதுவரை கருத்து ஏதும் கேட்கவில்லை. அப்படி கருத்துகேட்டால் தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முதல் வரையும் கலந்து ஆலோசித்து அதன் பிறகு மத்திய அரசுக்கு கருத்து தெரிவிக்கப்படும்”
இவ்வாறு அவர் கூறினார்.
































