Saturday, 4 Jul 2009
நாடோடிகள் - திரைவிமர்சனம்

சசிகுமார், விஜய், பரணி மூவரும் நண்பர்கள். இளைஞர்களுக்கே உரிய சந்தோஷச் சமாசாரங்களும் திரிகிறார்கள். சசிகுமார்
உறவுப் பெண்ணான அனன்யாவை காதலிக்கிறார். மகளை கட்டிக்க அரசு வேலையுடன் வர மாமனார் நிர்ப்பந்திக்கிறார். இதற்காக தேர்வுகள் எழுதுகிறார். விஜய் சசிகுமார் தங்கையை காதலிக்கிறார்.
சசிக்குமாரின் பழைய நண்பர் ரங்கா இவர்கள் வாழ்க்கையில் வந்து சேர திருப்பம். கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயலும் இவரை காப்பாற்றி காரணம் கேட்கின்றனர். காதல் தோல்வி என்கிறார்.
நாமக்கல் தொழில் அதிபர் மகளான காதலியை ரங்காவுடன் சேர்த்து வைக்க நண்பர்கள் கிளம்புகின்றனர். காதலியைக் கடத்தி ரங்காவுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். சண்டையில் விஜய் ஒரு காலை இழக்கிறார். பரணி காது செவிடாகிறது. சசிகுமார் காதலியை இழக்கிறார்.
மூவரும் ஜெயிலில் இருந்து திரும்புகின்றனர். நண்பன் காதலை நினைத்து தங்கள் இழப்புகளை மறக்கின்றனர். மீண்டும் பழைய வாழ்வை துவங்கும்போது காதல் ஜோடி ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு பிரிந்து அவரவர் வீட்டுக்கு போய் விட்டார்கள் என்ற செய்தி இடியாக வந்து தாக்குகிறது.
தங்கள் உழைப்பு, தியாகம் அத்தனையும் மதிப்பிழந்து போனது கண்டு துடிக்கின்றனர். இருவரையும் கடத்தி கொன்று விடலாம் என பரணி ஆவேசமாக கத்துகிறார். மீண்டும் ஒரு கடத்தலுக்கு தயாராவது பரபரப்பான கிளைமாக்ஸ்.
முறைப்பெண்ணை மணக்க வேலை தேடும் சசிகுமார் யதார்த்த நடிப்பில் பளிச்சிடுகிறார்.
தந்தை யோசனைபடி காதலிக்கும் விஜய் கலகலப்பூட்டுகிறார். காருக்கு அடியில் சிக்கி காலை இழந்து துடிக்கையில் அனுதாபப்பட வைக்கிறார். கஞ்சா கருப்பும், பரணியும் காமெடியில் பட்டையை கிளப்புகின்றனர். முகத்தை கோணி, சிரித்து துறுதுறுவென வரும் அனன்யா அனைவர் மனதில் ஒட்டிக் கொள்கிறார். அபிநயாவும் ஓகே.
நண்பர்களின் கலாட்டாவுடன் தொடங்கும் கதை காதலுக்கு உதவ நாமக்கல் சென்றதும் பறக்கிறது.
வித்தியாசமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை என புதுப்படையல் இட்டு, முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார் சமுத்திரக்கனி.
இசையில் சுந்தர்.சி. பாபுவும், ஒளிப்பதிவில் எஸ்.ஆர்.கதிரும் தங்கள் திறமையைக் காட்டி அசத்தியிருக்கிறார்கள்.
































