» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 26 Jun 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

நாகப்பட்டினம் திருக்கொட்டையூர் திருக்கோட்டீஸ்வரர்
சிவன் கோவில் தலவிருட்சம்
ஆமணக்கு
()

திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல் :
சண்டனைநல் லண்டர் தொழச்
செய்தான் கண்டாய் சதாசிவன்
கண்டாய் சங்கரன்தான் கண்டாய்

தொண்டர்பலர் தொழு தேத்துங்
கழலான் கண்டாய் சுடரொளியாய்
தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்

மண்டுபுல் பொன்னிவலஞ்
கழியான் கண்டாய் மாமுனிவர்
தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல்தவழ் கொடிமாடக்
கொட்டை யூரிற் கோடீச்
சரத்துறையுங் கோமான் தானே

கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றுவதைப் பார்த்து இருக்கிறோம். விளக்கு ஏற்ற பயன்படும் எண்ணெய் பலவிதங்களில் பலவாறாக காணப்பட்டாலும், கோயில்களில் விளக்கு ஏற்றுவதற்காகவே குறிப்பிடப்படுவது ஆமணக்கு எண்ணெயை மட்டும்தான்.

கோயில்களின் தெய்வீகத் தன்மைகளுடன் ஒட்டி அமைந்துவிட்ட இந்த எண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கொட்டையூரிலுள்ள திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோயிலில் இம்மரத்தைக் காணலாம். இங்குள்ள ஆமணக்குச் செடியில் “மூலவலிங்கம்” தோன்றியதாகக் கூறப்படுகிறது. இங்கு “கோடீஸ்வரர்” ஒரு கோடி லிங்கத்தைக் கட்டியதாகவும், அதனால் தான், இதற்கு அப்பெயர் வந்ததாகவும் ஐதீகம் கூறுகிறது.

இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து இருப்பதாலும், பொருளாதாரப் பலன்கள் அதிகளவில் இருப்பதாலும் தமிழக அரசு இதனை அதிகளவில் வளர்க்க பெரிதும் ஊக்கப்படுத்துகிறது.

விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளர்வதால் இன்று மிக அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றது.

எண்ணெய் வித்துக்கள் பலவகைகளில் காணப்படுகின்றன. அவற்றின் மருத்துவ குணங்களும் எண்ணிலடங்காதவை. ஆமணக்கு மிகச்சிறந்த எண்ணெய் வித்தாகும். இதிலிருந்து எடுக்கப்படுகின்ற விளக்கு எண்ணெயை யுனானி மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்றார்கள்.

ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன.

பொதுவாகவே, ஆமணக்குச் செடியை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவற்றை சிற்றாமணக்கு என்றும், பேராமணக்கு என்றும் கூறுவார்கள். செல்வாமணக்கு என்ற ஒரு வகையும் காணப்படுகின்றது. இந்த மூன்று வகைகளையும் சேர்த்து பொதுவாக ஆமணக்கு என்றுதான் கூறுவார்கள். இது தவிர, காட்டாமணக்கு, எலியாமணக்கு போன்ற பெயர்களில் குத்துச்செடி ஆமணக்குச் செடிகள் இருக்கின்றன. பேராமணக்கு பொதுவாக ஆற்றங்கரையோரங்களில் பயிரிடப்படுகின்றது. இதனை படுக்கையாமணக்கு என்றும் கூறுவார்கள்.

காணப்படுமிடம்
ஆமணக்குச் செடிகள் பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணலாம். இந்தியாவில் எல்லா இடங்களிலும் தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில் இவை மிக நன்றாக வளரும்.

தோற்றம்
ஆமணக்குச் செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும் ஒரு வகையான புதர்ச் செடியாகும். இதனை ஒரு சிறிய மரம் என்றே கூறலாம். பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும். இதன் தண்டுப் பகுதியில் வெள்ளையான வண்ணத்தினைப் போன்ற மாவு படிந்து காணப்படுகின்றன.

இதன் இலைகள் நீண்ட காம்புகளையுடையதாக இருக்கின்றது. இந்தக் காம்பின் அடியில் சுரப்பியும், கை வடிவத்தில் பிளவுபட்ட மடலும், அதில் பல் விளிம்பு பற்களும் காணப்படுகின்றன. ஆண், பெண் வகைகளில் இரு விதமான மலர்கள் இதில் காணப்படுகின்றன. ஆண் மலரில் மகரந்தத்தூள்கள் பல கற்றைகளாகவும், பெண் மலரில் சூல்பை மூன்று அறைகளையும் கொண்டு இருக்கின்றது. இதன் கனிகள் கோள வடிவத்தில் வெடிகனியாகக் காணப்படும். முட்கள் நிறைந்து இருக்கும். இதன் விதைகள் முட்டை வடிவத்தில் அடர்ந்த சாம்பல் நிறக்கோடுகளையும், புள்ளிகளையும் கொண்டது. இந்தச் செடியில் மருத்துவ குணங்கள் மிகவும் நிறைந்து பொருளாதாரப் பலன்களும் உள்ளன. இதில மலர்கள் ஆண்டு முழுவதிலும் பூக்கின்றன.

ஆமணக்கு வேரின் மருத்துவ குணங்கள்
குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள். சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.

ஆமணக்கு இலை, விதை மற்றும் எண்ணெயின் மருத்துவ குணங்கள்
இதன் இலைகளைச் சாறு பிழிந்து, கொடுத்து வந்தாலும் இந்த இலைகளை அரைத்து மார்பின் மீது கட்டி வந்தாலும் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. இலைகளை நறுக்கி, அதில் சிற்றாமணக்கு நெய் விட்டு வதங்கிச் சூட்டுடன் வலியுடன் கூடிய கீழ்வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் இடலாம்.

இதன் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.

சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும். இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.

ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக் கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.

ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம்.

ஆயுர்வேத மருத்துவ நூல்களில் சிவப்பு, மஞ்சள், கருமை நிறத்தில் ஆமணக்கு காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

சொட்டு, சொட்டாக சிறுநீர் கழியும் போக்கிற்கு சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் மலர்கள் பயன்படுகின்றன. மேலும், இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.

ஆமணக்கு விதைகள் மிகுந்த நச்சுத்தன்மைகளைக் கொண்டவை. இரண்டு ஆமணக்கு விதைகள் மட்டுமே மரணத்தைக் கொண்டுவரப் போதுமானவை. ஆனால், இவற்றைக் கொதிக்க வைத்து எண்ணெய் வடித்தெடுக்கும்போது அதில் நச்சுக்கள் இருப்பதில்லை.

ஆமணக்குச் செடியின் விதைகளிலிருந்து எண்ணெய் வடித்து எடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் குடல் ஏற்றம், வயிற்று வலி, அல்சர் புண்கள், கண், மூக்கு, காது, வாய்ப் பகுதிகளில் உருவாகின்ற எரிச்சல்களைப் போக்கி குணப்படுத்த உதவுகின்றது.

இவை நமது உடலைப் பொன்னிறமாக்குகின்றது. குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கும் வயிறு கழியவும், பேதியைக் கொண்டு வரவும் இந்த எண்ணெயைக் கொடுப்பார்கள். பசியின்மையைப் போக்குகிறது.

அதிகமான சளித்தொல்லை இருந்தாலோ அல்லது இரைப்பு, இருமல் இவைகளால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ சிற்றாமணக்கு இரண்டு பங்கும், தேன் அரைப்பங்கும் சேர்த்து கலந்து கொடுக்கலாம். மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு அரைத்தேக்கரண்டி அளவு கொடுப்பார்கள். தேன் கலந்தும் கொடுக்கலாம்.

ஆமணக்கு எண்ணெயை தேன் அல்லது உப்பு கலந்த தண்ணீரில் சுக்கு நீர், சோம்புத் தீநீர், ஓமத்தீநீர், எலுமிச்சம் பழரசம் மற்றும் சர்க்கரை கலந்த நீர், பால், தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கலாம். தாய்மார்களின் மார்பக காம்புப் பகுதியில் புண், வீக்கம் அல்லது வெடிப்பு இருந்தால் இந்த எண்ணெயை துணியில் நனைத்துப் போடலாம்.

பலவிதமான தைலத் தயாரிப்புகளிலும் ஆமணக்கு எண்ணெய் கலக்கப்படுகின்றது. தொடர்ந்து மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடுவதால் அவர்களின் கண்கள் சிவப்பாகக் காட்சியளிக்கும். சிற்றாமணக்கு எண்ணெயையும், தாயப்பாலையும் கூட்டி, குழைத்து கண்களில் விடுவதால் கண்களில் காணப்படும் சிவப்பு நிறம் போய்விடுகிறது. தூசுக்கள், கற்கள் விழுந்து விடுவதால் கண்கள் சிவந்து போனாலும் இந்த எண்ணெயை விடலாம்.

நமது உடலின் மேல் தோல் உராய்ந்து இரத்தம் கிளம்பத் தொடங்கினால் இந்த எண்ணெயைத் தடவி, எரிச்சலைப் போக்கி குணப்படுத்தலாம். இதனால் அந்த இடம் முன்பிருந்த நிலையை அடையும்.

ஆமணக்கு நெய் மூன்று பங்கு, எண்ணெய் இரண்டு பங்கு, பசுவின் நெய் ஒரு பங்கு கலந்து கொடுப்பதன் மூலம் வலிப்பு நோய் தீரும். ஆமணக்கு நெய் இரண்டு பங்கு, எண்ணெய் மூன்று பங்கு அளவிற்குக் கலந்து கொடுத்து வந்தால் சளித் தொல்லையால் உண்டாகும் நோய்கள் நீங்கி குணம்பெறும்.

30 மில்லி ஆமணக்கு எண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ, இஞ்சிச் சாறு கலந்தோ கொடுத்து வந்தால், நான்கைந்து முறை பேதி உண்டாகும். பசியின்மை வயிற்று வலி ஆகியவையும் தீரும்.

யுனானி மருத்துவம்
ஆமணக்கு ஒரு யுனானி மூலிகையாகும். இதனை “இரண்ட்” என்றும் “அரண்ட்” என்றும் அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இந்த ஆமணக்கு விதைகளைக் கொண்டு சளித்தொல்லை, வயிற்று இறக்கம், ஜலதோஷத்தால் வரும் குறைபாடுகள், குடலேற்றம், நீர்க்கோப்பு வியாதிகள், ஆஸ்துமா, இருமல், வாத நோய்கள், மாதவிடாய்க் குறைபாடுகள், வீக்கங்கள், வலிகள் அதிகளவில் உருவாதல் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுத்துகின்றார்கள்.

இது வயிற்றை இளக்கி, பேதியை உண்டாக்கும். எனவே, தூங்குவதற்கு முன் இதனை உண்ணக்கூடாது.

இயல்பு

இது இரண்டாம் நிலையில் சூடு கொண்டவர்கள் எவ்வளவு பெரிய கட்டுமஸ்தான ஆளாக இருந்தாலும், அவரும் வாந்தி எடுத்து இளைத்து விடுவார். இதன் விதைகளும், விதைகளை ஒட்டி இருக்கின்ற ஓடுகளும் கூட பெரும் நச்சுத் தன்மை மிகுந்து காணப்படுகின்றது. இதனை பத்தரை கிராமிற்கு மேல் சாப்பிடுபவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று சில யுனானி மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

இதன் விதைகளும், விதைகளை மூடியுள்ள ஓடுகளும் கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளதால், இதனை மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்வது கூடாது. தப்பித் தவறி யாராவது ஒருவர் இதனைத் தவறுதலாக உட்கொண்டு விட்டால், அவரது உடலில் இருந்து விஷத் தன்மையை வெளியேற்றி, உடலை குணப்படுத்த யுனானி மருத்துவர்கள் கீழ்க்கண்ட மருந்துகளைத் தருகின்றனர்.

இதற்காக மூங்கிலுப்பு நாலரை கிராம் எடுத்து அதனை நன்றாக அரைத்து, சிகஞ்சபீன் ஒரு சொட்டு குளிர்ந்த நீரில் போட்டு கலந்து தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று தடவை குடிக்க கொடுக்கலாம். இதனால் நச்சுத்தன்மை போய்விடும்.

ஆமணக்குச் செடியின் வேரை அரைத்து, சாற்றை தலையில் வைத்துப் பூசினால் தலைவலி குணம் பெறுகின்றது. இதுபோல ஆமணக்கு இலைகளை ஜவ்வரிசி மாவில் அரைத்து கண்களில் பூசினால், கண்களில் ஏற்படும் வீக்கம் குணம்பெறுகிறது.

ஆமணக்குச் செடியின் வேரை அரைத்து சாறுபிழிந்து கொடுத்தால் மஞ்சள் காமாலை குணம்பெறுகிறது. ஆமணக்குச் செடியின் வேர், பூக்கள், விதைகள், இலைகள் மற்றும் பட்டைகளை ஒரு மண் சட்டியில் போட்டு வாய்ப்புறத்தை நன்றாக மூடி, அதை அடுப்பில் வைத்து சுட வைக்க வேண்டும். அவை எரிந்து சாம்பலான பிறகு, அதனை 12 கிராம் எடுத்து, அதில் 48 கிராம் பசுவின் சிறுநீரைப் போட்டு நன்றாக அரைத்துக் கொடுப்பதால் மண்ணீரல் வீக்கம் குணம் பெறுகிறது.

ஆண்மைக் கோளாறுகளைக் குணப்படுத்த ஆமணக்கு விதைகளையும், எள் விதைகளையும் சம அளவில் எடுத்து அரைத்து காய்ச்சி வடிக்க வேண்டும். இதனை, ஆண் உறுப்பின் மீது பூசுவதால் ஆண்மைக் குறைவு குணப்படுகின்றது. அதுபோலவே, இதன் வேரை அரைத்து வெது வெதுப்பான சூட்டில், விரைகளின் மீது பூசினால் விரை வீக்கம் குணம் பெறுகிறது.

பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் வீக்கங்களை குணப்படுத்துகிறது. இதன் இலைகள், விதைகள், மாதவிடாய் குறைபாடுகளைப் போக்குகிறது. மேலும், இந்த விதைகள் பெண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தவும் செய்கிறது.

மாதவிடாய் கழிந்தபின் ஒரு பெண், இதன் விதையைச் சாப்பிட்டால், அவளுக்கு அந்த ஆண்டு குழந்தை பிறக்காது. இரண்டு விதைகள் சாப்பிட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு கரு உருவாகாது. முழுமையாகவே குழந்தைப் பேற்றைத் தடுத்துக் கொள்ள தினசரி ஒரு விதைகளை வீதம் ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டு வருவதன் மூலம் வாழ்நாள் முழுவதும் குழந்தை பெறுவதைத் தடுத்துக் கொள்ளலாம்.

இது போலவே, ஆமணக்குச் செடியின் இளம் குச்சிகளை தாய்மார்களின் கர்ப்பப்பைகளின் மீது வைப்பதன் மூலம் சிசு உருவாவது தடைப்படுகிறது. ஆமணக்கு இலைகளை அரைத்துக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து விடும். அதுவே இதன் எண்ணெயை மார்பகங்களின் மீது பூசுவதால் பால் சுரப்பு அதிகரிக்கின்றது.

கர்ப்பப்பையில் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த ஆமணக்கு விதைகள், வேப்ப மர விதைகள் ஆகியவற்றைச் சரிசம அளவில் எடுத்து, நன்றாக அரைத்து, சாறு பிழிந்து, கோலிகளாகச் செய்து கொண்டு, அதனை கர்ப்பப்பையினிடத்தில் வைப்பதன் மூலம் கர்ப்பப்பை வலி குணம் பெறுகின்றது.

தொங்கிய மார்பகங்கள் விரைப்படையவும், கவர்ச்சியாகக் காட்சியளிக்கவும் ஆமணக்குச் செடியின் இலைகளைக் காடியில் அரைத்து மார்பகங்களின் மீது பூசலாம்.

இதன் வேர்களை உலர்த்தி, அதனைக் கஷாயமிட்டுக் குடிப்பதால் காய்ச்சல் குணப்படுகின்றது. தொழுநோய் போன்ற நோய்களின் தாக்கம் ஏற்பட்டால், ஆமணக்கு விதைகள் ஏழு கிராம் அளவு வீதம் தினசரி 40 நாட்களுக்கு உண்பதால் கட்டுப்படுத்தலாம்.

இதன் இலைகளை அரைத்து அழுகிய புண்களின் முது பூசலாம். இதன் வேரைக் கஷாயமிட்டுக் குடிப்பதால் இரத்தத்தில் இருக்கின்ற அசுத்தங்கள் போய் நலப்படுகின்றது.

மனிதன் கண்டுபிடித்த முதல் மருத்துவச் செடி இந்த ஆமணக்குச் செடிதான் என்று பலரும் நம்புகின்றார்கள். இதிலிருந்து மாத்திரைகளையும், சாறுகளையும் மருந்துப் பொருளாகத் தயாரிக்கப்படுகின்றது.

அடங்கியுள்ள வேதிப்பொருட்கள்
ஆமணக்குச் செடியிலிருந்து எடுக்கப்படுகின்ற எண்ணெயில் ரிஸினோலிக், ஐஸோரிஸினோலிக், ஸ்டியரிக், டைஹைட்ராக்ஸி ஸிடியரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கி இருக்கின்றன. இதன் விதைகளில் லைபேஸ், ரிசினைன் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இதன் இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் ரிசினைன் அல்கலாய்டுகள் இருக்கின்றன.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்
கும்பகோணத்திற்கு மேற்கில் அமைந்துள்ள திருக்கொட்டையூர் என்ற தலத்தில் திருக்கோயில் தலவிருட்சமாக ஆமணக்கு (கொட்டைச் செடி) வணங்கப்படுகிறது. திருக்கொட்டையூர் என்னும் ஊர் கும்பகோணத்துக்கு மேற்கில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு கோடீஸ்வரர், பந்தாடுநாயகி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் ஆமணக்குச் செடியாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆமணக்குச் செடியையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/06/19 காளி கோயில் தலவிருட்சம் அரளி

2009/06/12 திருவள்ளூர் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர் கோவில் தலவிருட்சம் அலரிச் செடி

2009/06/05 திருமாலிருஞ்சோலை திருமால் கோவிலின் தலவிருட்சம் அசோக மரம்

2009/05/29 திருக்காறாயில் திருக்கோயில் தலவிருட்சம் அகர் அகில் மரம்

2009/05/22 கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவில் தலவிருட்சம் அகத்தி மரம்

2009/05/15 கேது பகவான் கோவிலில் வணங்கப்படும் தர்ப்பை புல்

2009/05/08 ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும் அருகம் புல்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply