 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
எஸ்.பிரேம்சிங், காட்பாடி.
|
 |
புயல் சேதம் 1000 கோடி என்கிறாரே மேற்குவங்க முதல்வர்?
|
 |
பெரிதாகக் கேட்டு வைத்தால்தான் பாதியாவது கிடைக்கும். அதுவும் கூட்டணியில் இல்லாத, நல்லுறவு பராமரிக்காத அரசு என்றால் கால்வாசிதான் கிடைக்கும் என்பதை புத்ததேவ் பட்டாச்சார்யா புரிந்து வைத்திருக்கிறார். இயற்கை அளித்த இந்தக் கொடிய பரிசைக்கூட ஜீரணித்துக்கொள்ளலாம். ஆனால் வியன்னாவில் நடந்த ஒரு கொலைக்கு பஞ்சாபில் ஆயிரம் கோடிப் பொதுச் சொத்தை அழித்த பஞ்சாப் வன்முறையாளர்களின் செயலைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.
|
|
 |
 |
வெற்றிகொண்டான், திருச்சி-2.
|
 |
ஜெயலலிதா கொடநாடு போய்விட்டாரே?
|
 |
ஏன் வெளிநாடு போய்விட்ட மாதிரி வருந்துகிறீர்கள்? தனி ஈழம் வாங்கப் போராடுவேன் என்றும், தமிழகமோ மத்திய அரசைத் தீர்மானிக்கும் என்றும் நம்பிக்கையாக ஏமாந்துவிட்டார். இந்த ஏமாற்றத்தை ஆற்றிக் கொள்ள இடமாற்றம் தேவை. இடமாற்றம் மனமாற்றம் தரலாம். 2004க்குப் பிறகு அ.தி.மு.க. குறிப்பிடப்பிடத் தகுந்த வெற்றியைத் தமிழக அரசியலில் பெறவில்லை. காட்சிக்கு எளியவராக ஆகி, தன்னிச்சையான போக்குகளைக் கைவிட்டுச் சற்றே இறங்கி வந்தால்தான் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சாதிக்கலாம். பத்திரிகையாளர்களை மதியாத போக்கை ஜெயலலிதா தொடர்ந்து கடைப்பிடிப்பதால் மக்களிடையே இவரைப் பற்றிய நல்ல கருத்தையும் ஊடகங்கள் உருவாக்க மறுக்கின்றன என்பதும் மிகப் பெரிய மைனஸ் பாயின்ட்.
|
|
 |
 |
ஏ.செந்தில்நாதன், பழனி.
|
 |
பொழுது போகாத நேரங்களில் என்ன செய்கிறீர்கள்?
|
 |
நான் வக்கீலுக்குப் படிக்க முயன்றேன். முதலாண்டோடு சரி. ஆனாலும் பொழுது போகாதபோது வக்கீல் தொழில் செய்து வருகிறேன். புரியலையா? வீடு தேடி வரும் பிரச்னைகளுக்குப் பஞ்சாயத்து செய்து வருகிறேன்.
|
|
 |
 |
சி.ராமதாஸ், முகப்பேர்.
|
 |
ஊழலற்ற, நேர்மையான ஆட்சி தந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று முழங்கியிருக்கிறாரே, சோனியா?
|
 |
இத்தாலியில் பிறந்தவர்களும் நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்தாம் என்பது தெரிகிறது. அட, இத்தாலியில் கூட நமது நகைச்சுவை புத்தகங்களை வெளியிடலாம்.
|
|
 |
 |
தேனி சந்திரா, பட்டாபிராம்.
|
 |
மாம்பழங்களைப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் கார்பைடு கல்லால் என்ன கெடுதல் ஏற்பட்டுவிடப் போகிறது?
|
 |
பெரியவர்கள் எனில் வயிற்றப்போக்குக்கூட ஏற்படலாம். ஆனால் சில குழந்தைகளை இறக்கச் செய்யுமளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். வண்ணத்திற்கு மயங்கும் இந்த மக்களைக் கல் கொண்டு நன்கு ஏமாற்றுகிறது வியாபார உலகம். இலாபத்தை என்னவாக வேண்டுமானாலும் இவர்கள் நிர்ணயித்துக்கொள்ளட்டும். ஆனால் வியாதிகளை நிர்ணயிக்கும் உலகமாக வியாபார உலகம் ஆகிவிட வேண்டாம். கல்லால் பழுக்க வைக்கப்பட்டதோ என ஐயம் வந்தால் நன்கு கழுவிவிட்டாவது சாப்பிடுங்கள். பாதிப்பின் அளவு 10 சதவிகிதமாவது குறையும்.
|
|
 |
 |
அப்துல் ரஹிம், முசிறி.
|
 |
வடகொரியாவை அமெரிக்கா தாக்கும் என்கிற அச்சம் நிலவுகிறதா?
|
 |
இல்லை. வடகொரியா திமிரெடுத்து அலைகிறது. இதன் ஆணவத்தையும் தன்னிச்சைப் போக்கையும் தட்டிக் கேட்கத்தான் சரியான ஆள் இல்லை. உலகின் நாட்டாமையான அமெரிக்கா தலைப்பாகை கட்டிக் கொண்டு, வடகொரியாவின் இராணுவ நடவடிக்கைகளை ஜப்பானின் உதவியுடன் கட்டுப்படுத்தப் பார்க்கும். இதை வடகொரியா ஏற்காது. இது போர் என்கிற அளவிற்கு மோசமாகிவிடாது என நம்புகிறேன்.
|
|
 |
 |
எம்.முருகன், விக்கிரவாண்டி.
|
 |
கணவன் வரும்வரை சாப்பிடாமல் இருக்கும் பெண்கள் இன்றும் இருக்கிறார்களே?
|
 |
ஒரு காலத்தில் நானும் இப்படித்தான் நினைத்தேன். அதற்காகச் சில வீடுகளில் மூக்கையும் நுழைத்தேன். நுழைத்தபிறகுதான் தெரிந்தது. ஆண்கள் போய்தான் அங்கே எல்லாமும் சமைக்க வேண்டியிருந்தது என்பது.
|
|
 |
 |
ஆர்.ராகவன், சென்னை-92.
|
 |
ஜாதகப் பொருத்தம் பார்த்தும் பல திருமணங்கள் வெற்றிகரமாக இல்லையே?
|
 |
முதலில் பார்க்கவேண்டியவை மாமியார், மருமகள்களின் ஜாதகப் பொருத்தங்கள்!
|
|
 |
 |
ச.மெய்யநாதன், ராமநாதபுரம்.
|
 |
முதல் பயிற்சி ஆட்டத்திலேயே தோற்றுப் போன இந்திய அணி 20/20 உலகக் கோப்பையைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்?
|
 |
வெற்றியில் நிதானப்படாத மனம் தோல்வியில் நிதானப்படலாம் அல்லவா? வெற்றி மமதை (தலைக்கனம்) தரவல்லது. தோல்வி அப்படி அல்ல, காலடிகளைக் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்லித் தரும் நல்லாசிரியன் தோல்வியே. உதை வாங்கியது நன்மைக்கே என்பேன். சொல்லப்போனால் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோற்கவேண்டும் என்று மிக விரும்பினேன் (அடப்பாவி மனுஷா! என்கிறீர்களா?)
|
|
 |
 |
டி.வி.சந்திரன், ஆவடி.
|
 |
உங்களின் கன்னி மேடைப் பேச்சு எப்படியிருந்தது?
|
 |
காலுக்குக் கீழே லேசான பூகம்பம். கை கால்களில் கதகளி. இவை மட்டுமா? தலைக்கு மேலே சுத்தி தொங்குவதாகவும் உணர்ந்தேன்.
|
|
 |
 |
எம்.ராஜா, பம்மல்.
|
 |
இப்போது வரதட்சணை கேட்கமாட்டேன்கிறார்களே?
|
 |
படித்தவர்கள் அல்லவா? புத்திசாலியாய் நடந்துகொள்கிறார்கள். வரதட்சணைக்குப் பதில் கல்யாணத்திற்குப் பிறகு மாமனாரிடமோ, மனைவியிடமோ கிரெடிட் கார்டுகளை கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். இது வரதட்சணையை விட கொடுமையாச்சே?
|
|
 |
 |
பே.திருமாமுருகன், மதுரை-1.
|
 |
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா?
|
 |
சுபாஷ் சந்திரபோஸ் மரணம் பற்றிய ஊகம்போல் இதைத் தொடர்கதையாக்காதீர்கள். பிரபாகரன் உயிருடன் இல்லை. எஞ்சியுள்ள புலிகள் ஆயுதம் களைவது பற்றிய தீர்மானத்தில் இருப்பதே இதற்குப் போதுமான சான்று!
|
|
 |
 |
எஸ்.சந்தோ, திருப்பூர்.
|
 |
வைகோ மட்டுமாவது ஜெயித்திருக்க வேண்டும்! என்ன சொல்கிறீர்கள்?
|
 |
தமிழக, தமிழர் உணர்வுகளைத் துணிந்தும் அழகுறவும் சொல்லக்கூடிய ஒரு குரலுக்குப் பாராளுமன்றக் கதவு அடைக்கப்பட்டதில் எனக்கும் வருத்தம்தான். புலிகள் செய்வது எல்லாம் சரி என்று தட்டிக்கொடுத்தது தவறு. தீவிரவாதம் சரிவராது என்று அறிவுறுத்தாதது தவறு. தமிழ் ஈழத்தை முன்னிறுத்தும் வாதம் தமிழகத்தில் எடுபடாது என்று இந்த அரசியல் கற்றுக்குட்டி சொன்னதைப் பலர் நம்பத் தயாரில்லை. பாவம் புலிகளுக்காக கரடியாகக் கத்தி, ம.தி.மு.க. பெற்றதெல்லாம் 3.7 இலட்சம் ஓட்டுகள் மட்டுமே!
|
|
 |
 |
எஸ்.இருதயராஜ், தேவகோட்டை.
|
 |
லாலு அனைத்தையும் சாதித்து முடித்துவிட்ட பிறகு மம்தாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
|
 |
இரயில்களை நேரத்திற்கு வரவும் நேரத்திற்குப் புறப்படவும் செய்தால் தேவலை. 700-800 பேர்கள் பயணிக்கிற ஒரு இரயில் ஒரு மணி நேரம் தாமதம் என்றால் 700-800 மணி நேரம் லேட் என்று கணக்குபோடுகிறவன் நான். மனித உழைப்பு நேரத்தை இரயில் பெட்டிகள் முடக்குவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
|
|
 |
 |
ஆர்.தியாகராஜன், திருவாரூர்.
|
 |
கலைஞர் சமீப காலமாக மறைமுறைமாகத் தாக்கும் பத்திரிகையாளர்கள் யார் யார்?
|
 |
துக்ளக் சோ, இந்துராம், தினமணி வைத்தியநாதன். அதுவும் வெற்றிக்களிப்பில் ரொம்பத்தான் சாடுகிறார்.
|
|
 |
 |
எம்.கணேசன், தஞ்சாவூர்.
|
 |
உங்களை மதிக்காதவர்கள்?
|
 |
என்னை மதிப்பவர்கள் என்னை கவுரவிக்கிறார்கள். என்னை மதிக்காதவர்கள் என்னை எனக்கு உணர்த்தி வருகிறார்கள். சில சமயம் கவுரவத்தோடு எனக்கு நிதானமும் தேவைப்படுகிறது.
|
|
 |
 |
டி.தமிழ்மணி, சென்னை.
|
 |
நண்பர்களோடு ஓட்டலுக்குப் போகும் பழக்கம் உண்டா?
|
 |
தனியாகப் போனா நாமதாங்க பில் கொடுக்க வேண்டியிருக்கும்.
|
|
 |
 |
சி.தசரதன், சிதம்பரம்.
|
 |
உழைப்பு இருந்தும் பலர் முன்னேறாததற்குக் காரணம்?
|
 |
இவர்கள் கதவுகளைக் கண்டுபிடிக்காமல் சுவர்களைத் தட்டிக் கொண்டிருப்பதுதான். சுவர்களைத் தட்டினாலா திறக்கும்?
|
|
 |
 |
பி.கண்ணன், ஈரோடு.
|
 |
நம் அரசியல் தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீர்களா?
|
 |
இல்லை! நம் தலைவர்களின் தரம் மிகத் தாழ்ந்து வருவதால் நமது நாட்டிற்காகத்தான் பிரார்த்தனை செய்வேன்.
|
|
 |
|
|
June 16th, 2009 at 9:42 pm
railkalin kaalathaamatham kurithu thangalin pathil padithen avasara maagavum avasiyamaagavum sinthikkavendiya ontru nammavagali aayulil paathi bussukku kathiruppathilum railway stationil thoonguvathilume mudinthu vidukintrathu