India betrayed Lanka Tamils, Thiruma
ஈழத்தமிழர்களுக்கு, இந்தியா துரோகம்: நாடாளுமன்றத்தில் திருமா., பேச்சு
விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்ட பின் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பேசினார்.
அவருடைய பேச்சு விவரம் வருமாறு:
”தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களை மக்களவையின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பாராட்டுகிறேன். இக்கால கட்டத்தை எளியோரின் காலம் எனக் கூற விரும்புகிறேன்.
குடியரசுத் தலைவர் உரையில் பெண் கல்விக்கான தேசிய இயக்கம், அடையாள அட்டை வழங்கும் திட்டம், குப்பம் இல்லா இந்தியா, தேசிய அளவிலான உணவு உறுதிச்சட்டம், சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத்திட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா போன்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியவையாகும்.
இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை பற்றியும், சேது சமுத்திரத் திட்டம், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கைத் தமிழர் மீதான இனப்படுகொலை பற்றி இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு என்ன வகையான ஆதரவினைத் தந்தது? என இந்திய அரசு வெள்ளை அறிக்கையில் குறிப்பிட வேண்டும். அதைப்போலவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான ‘தனி அமைச்சகம்’ உருவாக்க வேண்டும். மேலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான ‘தலித் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு’வின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மற்றும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி உள்பட அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.
எமது கட்சியும் தோழமைக்கட்சியான தி.மு.க.வும், ஈழத் தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக்கொண்டு தமிழ்ச் சொந்தங்களை பாதுகாக்க வேண்டும்”
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
Related Posts Title
Tags: betray, India, Parliament, Thirumavalavan, ஈழத்தமிழர்கள், தொல். திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்றம், விடுதலைச் சிறுத்தை கட்சி