Posted on Tuesday 30 June 2009
இலங்கைத் தமிழர் பிரச்னை: அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் கோஷங்களை எழுப்பிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இலங்கைப் பிரச்னை தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பேச அனுமதி கேட்டனர். ‘இலங்கைத் தமிழரைக் காப்பாற்று’ என கோஷமிட்டனர். ‘சபை விதிகளுக்கு முரணாக கோஷங்களை எழுப்பும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற வேண்டும்’ என, முதல்வர் கருணாநிதி, சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
‘சபை விதிகளுக்கு முரணாக கோஷம் போடக் கூடாது. அமருங்கள்’ என, சபாநாயகர் ஆவுடையப்பன் எச்சரித்தப் பின்னரும் தொடர்ந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பவே அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேறினர்.
சுதர்சனம் - காங்: என்ன பிரச்னை என்று சொல்லாமல், ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் போட்டால் யாரைக் காப்பாற்றுவது? செங்கோட்டையன், பன்னீர் செல்வம் போன்றோரை காப்பாற்றுவதா? இவ்வாறு விதிகளை மீறி செயல்படுவது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி தீர்வு காண வேண்டும்.
(மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, மகேந்திரன், சிவபுண்ணியம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர்) கம்யூனிஸ்டுகள் பேசிப்பேசியே வீணாகப் போய்விட்டனர். ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் இது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது.
மணி - பா.ம.க: முக்கியமான பிரச்னைகள் குறித்த தீர்மானங்கள் சபையில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
(மீண்டும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, சிவபுண்ணியம் ஆகியோர் பேச எழுந்து நின்றனர்)
முதல்வர் கருணாநிதி: மூன்று பேரில் யார் பேசுவது என்று முடிவு செய்யட்டும்.
சபாநாயகர்: நான் தள்ளுபடி செய்த பிரச்னைகளை மீண்டும் எடுத்து இங்கே பேசக்கூடாது. சபை விதியை மீறாதீர்கள்.
சிவபுண்ணியம் - கம்யூ: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடம் என்ன பிரச்னை என்று ஒரு நிமிடம் கேட்டு பதிவு செய்துவிட்டு அதை எடுக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்து இருக்கலாம்.
சபாநாயகர்: அவர்கள் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு வந்து, விதிகளுக்கு முரணாக கோஷம் போடுகின்றனர். எதற்காக கோஷம் போட்டனர் என்றே தெரியவில்லை.
முதல்வர்: இப்போது உங்களுக்குள் ஒற்றுமை வந்துவிட்டதா?
பாலபாரதி - மார்க்சிஸ்ட்: சபையில் கருத்து சொல்லவும், வெளிநடப்பு செய்யும் எதிர்க்கட்சிக்கு உரிமை உண்டு. ஒரு கட்சியின் உரிமையை விமர்சிக்க காங்கிரசுக்கு என்ன உரிமை உள்ளது?
அமைச்சர் பொன்முடி: அ.தி.மு.க., ஆட்சியில், சபையில் இருந்து தூக்கிப் போட்ட சம்பவம் கூட நடந்தது. கோஷம் போட்டவர்களை வெளியேற்றுவது மரபு. அதைத் தான் பின்பற்றினர்.
பீட்டர் அல்போன்ஸ்: சபையை விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்ற உரிமை ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் உண்டு. அ.தி.மு.க., ஆட்சியில் எழுந்து நின்றாலே, “நீங்கள் எந்த விதியின் படி எழுந்து நிற்கிறீர்கள்’ என்று கேட்பர். அதற்கு ஒரு முறை, “தலைவிதியால் எழுந்து நிற்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன்.
நானும், பரிதி இளம்வழுதியும் சில நேரங்களில் வேஷ்டி அணியாமல் பேன்ட் அணிந்து வர வேண்டிய நிலை அப்போது ஏற்பட்டது. அவர்கள் ஏற்கனவே ஒத்திகை பார்த்துவிட்டு இங்கு நடந்துகொள்கின்றனர். அதை ஏற்கலாமா? அ.தி.மு.க.,வினர் இன்று அவையில் எழுப்பிய பிரச்னையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாலபாரதி கூறுகிறார். அப்படியென்றால் அவைக்கு வெளியே ஒரு கூட்டம் நடந்துள்ளது தெரிகிறது. (பீட்டர் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்)
அமைச்சர் அன்பழகன்: சபாநாயகர் யாருக்கு அனுமதி கொடுக்கிறாரோ அவர்கள் தான் பேச வேண்டும். பீட்டர் அல்போன்ஸ் பேச்சாளர் என்பதால், பேசிக்கொண்டே வந்துவிட்டார். கோஷம் போடுதல் போன்ற விதிமுறை மீறலை தினந்தோறும் செய்தால் ஒரு கட்சியை, அவையில் இருந்து ஒரு மாதம் வெளியேற்றலாம் என தீர்மானம் கூட நிறைவேற்றலாம்.
மணி கொடுத்த தீர்மானத்தை சபாநாயகர் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்கலாம். சபாநாயகர் அனுமதித்தால் அது குறித்து பேசலாம். (இதைத் தொடர்ந்து பா.ம.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளிநடப்பு செய்தனர்) இவ்வாறு விவாதம் நடந்தது.


































மார்க்சிஸ்டுளின் அலட்சியமே தோல்விக்கு காரணம்: பரதன்
இன ஒற்றுமை பற்றி கருணாநிதி பேசுவதா?: வைகோ
காயப்படுத்துபவரை விரோதியாக என்ன மாட்டேன்: கருணாநிதி