Wednesday, 13 May 2009
மக்கள் மகத்தான வெற்றியைத் தருவார்கள்: கருணாநிதி நம்பிக்கை

தமிழக முதல்வர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார். காலை 9.05 மணிக்கு அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். அவருடன் தயாளு அம்மாள், அமைச்சர் மு.க. ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், தயாநிதி மாறன், முரசொலி செல்வம் ஆகியோர் உடன் வந்தனர்.
9.07 மணிக்கு தன் வாக்கை பதிவு செய்த முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
வெற்றி உறுதி.
40 இடங்களில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள்?
மிகப்பெரும்பான்மையான அளவில் வெற்றி பெறுவோம்.
மக்கள் எத்தகைய வெற்றியை அளிப்பார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
மகத்தான வெற்றியை அளிப்பார்கள்.
அகில இந்திய அளவில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இது வரை நடந்த முடிந்த தேர்தல்களையொட்டி உங்களுடைய கணிப்பு என்ன?
டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி நீடிக்குமா?
நிச்சயமாக.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
”இந்த முறையும் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் மலரப்போகிறது என்பதால் தான் பல்வேறு கட்சிகள் இப்போதே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்துகின்றன.
அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகள் அதிகமாக இருந்தாலும் எங்கள் அரசு அதிக அளவில் சாதனை செய்துள்ளது.
நான் எல்லா தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளேன். எங்கள் சாதனைகளுக்காக மக்களுக்கு எங்களை ஆதரிக்கும் மனநிலை உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பு உணர்வுதான் உள்ளது. எனவே எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்” என்றார்.
































