Tuesday, 31 Mar 2009
திருமண பந்தத்தை உடைப்பவள் நான் அல்ல: ஷில்பா ஷெட்டி
காதலரை விரைவில் கைபிடிக்கிறார்

திருமண பந்தத்தை உடைப்பவள் நான் அல்ல என்று இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வாய் மலர்ந்துள்ளார். வருங்கால கணவர் ராஜ் குந்த்ராவுடனான என்னுடைய வாழ்க்கை அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபிறகே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நேரம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.
சமீபத்தில் ஐ.பி.என்., சேனலுக்கு அளித்த பேட்டியில் ஷில்பா இவ்வாறு கூறியுள்ளார்.
33 வயதான ஷில்பா ஷெட்டி நடிகையாக பிரபலமானதைவிட, பிரிட்டன் டெலிவிஷன் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானதுதான் அதிகம்.அப்போது சக நடிகையான பிரிட்டனைச் சேர்ந்த டிவி நடிகை ஜேட் கூடி (புற்றுநோயால் தாக்கப்பட்ட இவர் சமீபத்தில் மறைந்தார்) நிறவெறி காட்டி துன்புறுத்திய நிகழ்வு ஷில்பா ஷெட்டிக்கு அனுதாபம் தேடித் தந்ததுடன், அந்நிகழ்ச்சியில் வெல்லவும் செய்தது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்ததுதான் தொழில் அதிபரும், பிரிட்டனைச் சேர்ந்தவருமான ராஜ் குந்த்ராவுடனான காதல உறவு.
ஷில்பாவை சந்தித்தபோது தன் மனைவி கவிதாவை பிரிந்துதான் இருந்தார் ராஜ் குந்த்ரா.ஆனால், கவிதாவோ ஷில்பாதான் தன் கணவரை தன்னிடமிருந்து பிரித்ததாகக் குற்றம் சாட்டினார்.
கவிதாவின் குற்றச்சாட்டு தன்னை படுக்கையில் சாய்த்துவிட்டாகவும், தன்னை திருமண பந்தத்தை உடைக்கும் ஒரு நபராக சித்திரித்தது மிகவும் கீழ்ததரமான செயல் என்றும், இது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது என்றும் அப்போதே ரியாக்ஷன் காட்டியிருந்தார் ஷில்பா.
”என் மனத்தை தொட்டுச் சொல்லுகிறேன்.அன்றைக்கே ராஜ் மீது எனக்கு காதல் பிறந்துவிட்டது. அதை ராஜியிடமும் கூறினேன். ஆனால், அவர் முறைப்படி கவிதாவிடமிருந்து விவாகரத்து பெறும் வரை நாம் நண்பர்கள்தான் என்றும் தெளிவுப்படுத்தினேன்” என்று இப்போது சொல்கிறார் ஷில்பா.
தற்போது, ”திருமண வாழ்க்கையைத் தொடங்க இனியும் காத்திருக்க முடியாது” எனச் சொல்லும் ஷில்பா வரும் அக்டோபர் மாதத்தில் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்வார் எனத் தெரிகிறது.
அதற்கு அச்சாரமாக பிரிட்டன், சுர்ரே நகரில் வேபிரிட்ஜ் எனுமிடத்தில் ஏழு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பெரிய கட்டடத்தை இருவரும் வாங்கியிருக்கிறார்கள்.அதற்கு ராஜ் மகால் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.
”குடும்ப வாழ்க்கையில் இருக்கும் சுகத்தை அனுபவிக்க துடித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.இரண்டு குழந்தைகளாவது நிச்சயம் பெற்றுக்கொள்வேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் ஷில்பா,
”இப்போதே குழந்தைகளுக்கான அறைகளும் தயார். எங்களைச் சுற்றி சுற்றி குழந்தைகள் ஓடியாடுவதை நினைக்கவே இனிப்பாக இருக்கிறது. எங்கள் அறைகள் போக அவருடைய தாய், தந்தை வசிக்கவும் அறைகள் தயார். ஒரு நல்ல குடும்பமாக நாங்கள் வாழ்வோம்” என்று கொட்டி முடிக்கிறார் ஷில்பா.
































