» Thunivae Thunai- Tamilvanan .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Monday, 23 Mar 2009

Thunivae Thunai- Tamilvanan

துணிவே துணை - தமிழ்வாணன்

6. உரிமைகள் பறிபோய் விடுமோ என்ற அச்சம் நீங்க….

வாழ்க்கையில் நமக்குப் பல கடமைகள் இருப்பது போலவே, உரிமைகளும் இருக்கின்றன.அந்த உரிமைகள் பறி போவதற்கான சூழ்நிலைகள் உருவாகுமாயின் அப்போதும் நம் உள்ளத்திலே அச்சம் பிறக்கிறது. உரிமைகள் என்னும்போது உடைமைகளும்கூட அதில் அடங்கும் என்று சொல்லலாம்.

உடமைகளைக் கள்வர்கள் கவர்ந்து செல்லலாம் அல்லது பகைவர்கள் வழக்காடிப் பறித்துக் கொள்ளலாம். ஒரு சில சமயங்களில், நெருப்பினாலும் வெள்ளத்தினாலும்கூட அவற்றிற்குச் சேதம் ஏற்படலாம். இம்மாதிரியெல்லாம் ஏற்படாதபடிக்கு, நம்மால் முடிந்த வரையில் அவற்றைப் பாதுகாத்துக் கொள்வது நம் கடமையாகும்.

அந்தக் கடமையை நாம் செவ்வனே செய்து வரும்போது, அதையும்மீறி அவ்வுடைமைகள் பறிபோய் விடுவதுண்டு. அவ்வாறு பறி போகுமாயின், அதுபற்றிக் கவலைப்படுவதால் அடையத் தகுந்த பயன் ஏதும் கிடையாது. அவை இன்னமும் பறிபோகாதிருக்கையிலே, எதிர்காலத்தில் பறி போய்விடுமோ என்று நாமாகவே கற்பனை செய்து கொண்டு அச்சம் அடைவது, அதனினும் பயனற்ற ஓர் அறியாமைச் செயலாகும். இந்த உண்மையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டால், அத்தகைய அச்சங்கள் நாளடைவில் நம் உள்ளத்தைவிட்டே ஒழிந்து போய்விடும்.

உரிமைகளும் ஒரு வகையான உடைமைகளே என்றாலும், இவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முறை முற்றிலும் வேறானதாகும். நமக்குள்ள ஒவ்வோர் உரிமையுடனும் கூடவே, ஒரு கடமையையும், ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாது. ஆகையால், ஒரு குறிப்பிட்ட உரிமையை நாம் இழக்காதிருக்க வேண்டுமானால், அதனோடு ஒட்டிய கடமையையும் நாம் கைவிடாது காக்க வேண்டும்.

தநதையினுடைய சொத்துகளிலே மைந்தனுக்கு உரிமையுண்டு என்றால், அவர் பட்ட கடன்களைத் தீர்க்க வேண்டிய கடமையும் அவனுக்கு உண்டு.அந்தக் கடமையை ஏற்றுக்கொள்ள விரும்பாதவன், அவரது சொத்துக்களின்மீது மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இப்படியே, மனைவியின்மீது கணவனுக்குச் சில உரிமைகள் உண்டு என்றால், அவள்பால் தனக்குள்ள கடமைகளையும் அவன் வழுவாது நிறைவேற்ற வேண்டும். ‘கடமையை நான் நிறைவேற்ற மாட்டேன். ஆனால், உரிமை மட்டும் எனக்கு வேண்டும்’ என்று எதிரிபார்ப்பது, எட்டாத கனிக்குக் கொட்டாவி விடுவது போலாகும்.

தந்தை-மகன், கணவன்-மனைவி என்ற பந்தங்களிலுள்ள கடமைகளையும் உரிமைகளையும் போலவே, உலகிலுள்ள எல்லாவகையான பந்தங்களிலும் உரிமைகளும் எப்போதுமே சற்று இனிப்பாகவும், கடமைகள் கசப்பாகவும் இருப்பது இயல்பு. அப்படியின்றி, உரிமைகளைப் போலவே கடமைகளும் எவனுக்கு இனிப்பாக இருக்கின்றனவோ, அவனுடைய எந்த உரிமைக்கும் எந்தக் காலத்தில் எவராலும் ஆபத்து விளைவிக்க இயலாது.

உரிமைகளுக்கு என்று நாம் தனியாகப் பாடுபட வேண்டிய அவசியமே கிடையாது. அப்படிப் பாடுபட்டாலும் அதனால் பலன் ஏற்படமாட்டாது. நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் சற்றும் முணுமுணுக்காமல் நாம் முகமலர்ச்சியோடு செய்து வருவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்து வந்தால், நம் உரிமைகள் தாமாகவே நம்மை வந்து அடைந்துவிடும்.

எனவே, தன்னுடைய உரிமைகள் பறிபோய் விடும்போல் தோன்றுகிற ஒரு சூழ்நிலை ஒருவனுக்கு ஏற்படுமாயின், இவன் ஏதோ ஒரு கடமையைச் செய்யத் தவறிவிட்டான் என்பதே அதன் பொருளாகும். இந்த உண்மையை உணர்ந்து தான் செய்யத் தவறிய அந்தக் கடமையை அவன் செய்து முடிக்க முற்பட்டால், தன்னுடைய உரிமை பறி போய்விடுமோ என்ற பயத்திலிருந்து அவன் அப்போதே விடுபட்டுவிடலாம்.

உரிமைகளுக்குக் கூறப்பட்ட இந்த நியதி, பதவிகளுக்கும் நூற்றுக்குநூறு பொருந்தி வரும். உரிமைகளுக்கு இருப்பதுபோலவே, ஒவ்வொரு பதவியை ஒட்டியும் சில பல கடமைகள் இயல்பாகவே அமைந்திருக்கின்றன. அந்தக் கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருக்கும் வரையில், எந்த மனிதனும் தன் பதவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே நேராது.

கடமைகளைச் செய்யத் தவறினால் பதவி கைநழுவிப் போய்விடுவதற்தான வாய்ப்புகள் உருவாகத் தொடங்கும். அப்போது அதைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆயிரம் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கையாண்டாலும், அவை பயன் அளிக்கமாட்டா. அத்தகைய குறுக்கு வழிகளில் சிந்தனையைச் செலுத்தாமல் நேர்மையான முறையில் கடமைகளைச் செய்வதுதான், அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி ஆகும்.

எனவே, பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்திற்கு ஒருவன் ஆளாகாது இருக்க வேண்டுமானால், அந்தப் பதவியோடு ஒட்டிய கடமைகளை நிறைவேற்றுவதில் அவன் அல்லும் பகலும் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும்.

உரிமைகளையும் கடமைகளையும் இழக்க நேருவது போலவே, நமக்கு மிகவும் பிரியமான ஒருவரது அன்பை அல்லது நட்பை இழந்துவிட நேருமோ என்ற ஐயப்பாடும் நம் உள்ளத்திலே அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். அந்த அச்சம் நமக்கு வராது இருப்பதற்கு உண்மையான அன்பு அல்லது நட்பின் இலக்கணத்தை நாம் செவ்வனே புரிந்து கொள்ள வேண்டும்.

Related Posts Title


Leave a Reply