Srilanka: Editor of ‘Sudar Oli’ journal held
இலங்கை: சுடரொளி இதழ் ஆசிரியர் கடத்தி கைது
கொழும்பு: இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையான சுடரொளியின் ஆசிரியர் நடேசப் பிள்ளை வித்யாதரன் ராணுவத்தால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராகச் செய்திகள் வெளியிட்டு வரும் பத்திரிகையாளர்கள் அங்கே கடத்தப்பட்டு கொல்லப்படுவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்ப் பத்திரிகையான சுடரொளி மற்றும் உதயன் ஆகியவற்றின் முதன்மை ஆசிரியர் வித்யாதரனை ராணுவம் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
கொழும்பில் விடுதலைப் புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதல் நடவடிக்கைளுடன் உள்ள தொடர்பு குறித்து சந்தேகித்தே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் வித்தியாதரனை கைது செய்திருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா கூறியுள்ளார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான கல்கிசையில் உள்ள ‘மகிந்த’ மலர்ச்சாலையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வித்தியாதரன் சென்றபோது, வெள்ளை நிற வேன்கள் மூன்றில் வந்தவர்கள் வித்தியாதரனைக் கடத்திச் சென்றதாக த்தகவல்கள் வெளியாகின். .
ஆனால் இதை மறுத்துள்ள இலங்கை காவல்துறை, அவர் கடத்தப்படவில்லை. விசாரணை செய்வதற்காகவே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கைது செய்ததாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் வித்தியாதரனை கடத்த முயன்றபோது அவர் சத்தம் போட்டார் என்றும், அவரைக் காப்பாற்ற ஓடி வந்தவர்களை வேன்களில் இருந்த மர்ம நபர்கள் தாக்கிவிட்டுச் சென்றனர் என்றும் கடத்தல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக வித்தியாதரனின் உறவினர்கள் கல்கிசை மற்றும் வெள்ளவத்தை காவல் நிலையங்களிலும் புகார் கொடுத்துள்ளனர்.
இன்று காலை 10 மணியளவில் கடத்தப்பட்டதாக அறியப்பட்ட வித்யாதரனை கைது செய்துள்ளதாக 12 மணி அளவில் அறிவித்தது இலங்கை காவல்துறை.
Related Posts Title
Tags: Sudar Oli, Uthayan, Vidhyadharan, உதயன், சுடரொளி, நடேசப் பிள்ளை, விடுதலைப் புலி, வித்யாதரன் கைது