Saturday, 24 Jan 2009
அது என்ன குடியரசு தினம்?
சுதந்திர தினம் என்றால் எல்லாரும் பதில் சொல்லிவிடுவோம். ஆங்கிலேயனின் அடிமைத்தளையில் இருந்து நாம் மீண்ட நாள் என்று (ஆகஸ்ட் 15).
குடியரசு என்றால்? சுதந்திர தினத்தைப் பற்றி அறிந்த நம்மில் பலருக்கு இதுபற்றி தெரியாது என்றே சொல்லலாம்.
உலக நாடுகள் எல்லாம் தாங்கள் சுதந்திரம் பெற்ற நாள் ஒன்றை மட்டுமே கொண்டாடிவரும் நிலையில், நாம் மட்டும் நம் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை இரு தினங்கள் (ஜனவரி 26 - குடியரசு தினம், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்) கொண்டாடி வருகிறோம்.
இதற்கு பலமான பின்னணி உண்டு.
முதலில் குடியரசு என்றால் என்ன என்று பார்ப்போம்.
குடியரசு என்பதற்கு குடிமக்களின் ஆட்சி என்று பொருள். அதாவது மக்களாட்சி. மக்களே தங்கள் விருப்பத்திற்கு தங்களை மேய்ப்பவர்களை (தலைவர்களை) தேர்ந்தெடு்த்து, அவர்கள் மூலம் தங்களைத் தாங்களே ஆண்டுக் கொள்வது. வேண்டாம் என்றால் தூக்கி எறிந்து, தேர்தல் மூலம் வேறு ஒருவரை நியமிப்பது. இதைத்தான் நமது அரசியல் சாசனம் அழுத்தம்திருத்தமாக சொல்கிறது. டாக்டர் அம்பேத்கர் உள்பட இந்திய மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் அமைப்புச் சட்டம் (constitution)தான் உலகிலேயே நீளமானது என்கிறார்கள்.
சரி மன்னராட்சிக்கு முடிவுக்கட்டி, ஆங்கிலேயனையும் துரத்திவிட்டு 1947, ஆகஸ்ட் 15இல் சுதந்திரமும் பெற்றுவிட்டோம். பிறகு எதற்கு இரண்டரை வருடங்கள் கழித்து 1950 ஜனவரி 26 அன்று குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த இரண்டரை ஆண்டுகள் அரசியல் சாசனம் முழுமை பெற எடுத்துக்கொண்ட காலகட்டமாகும். அப்புறம் ஜனவரி 26 ஏன்?
இங்குதான் காந்திக்கு நேரு செய்த கைமாறு வருகிறது.
1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ‘பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான லட்சியம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதனைச் செயல்படுத்த ‘எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரிகொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்’ என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியதாம்
அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொப்பளித்த சுதந்திர தாகமும் ஒருங்கிணைந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அந்தச் சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் தொடங்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார்.
தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான் குடியரசு தினம். சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளைக் குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்தது.

































January 24th, 2009 at 9:46 am
Nalla Pathivu…Useful informations about INDIAN REPUBLIC DAY ON JAN 26th EVERY YEAR….THANKS A LOT TAMILVANAN.COM
January 25th, 2009 at 6:43 am
nangal leenavin vasagargal endru sollikolvathil mendum perumai kolgirom,sudanthira theyagigalin theyagathini potra suthanthera dinam,athan vitha irunda nam desa pithavin sevayai potri antha magathma pugaz pada kudiyarasu dhinam-arumayana seithe-en gandhi magane nee marikka padavillai engal oveoruvar selgalilum un vasme
January 26th, 2010 at 2:57 am
ippadi seithgalai tharuvathu nalla muyarchi,thodara en vazhthukkal