» 2008/07/04 Junior Kelvi Pathil .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday 4 July 2008

2008/07/04 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.

பிரதமர் இலங்கை செல்லக்கூடாது என்று வைகோ எதிர்க்கிறாரே?

இலங்கைப் போரில் தமிழர்களின் இழப்பு அதிகமாகி வருகிறது. இதற்கு அரசியல் தீர்வுதான் சரியான தீர்வாகும். நம் பிரதமரின் விஜயம் இலங்கை அரசால் நன்கு விரும்பப்படும்போது, அது நிகழத்தான் வேண்டும். இன்றையச் சூழலில் இதுதான் நன்மை செய்ய முடியும். தள்ளியிருந்து வேடிக்கை பார்க்கச் சொல்லும் வைகோவின் சிந்தனை வேடிக்கை இரகத்தைச் சேர்ந்ததே!


எஸ்.அருள்வேல், திருமுல்லைவாயில்.

தாய், தாரம் இவர்களில் யாருடைய அன்பு நமக்கு அதிகம்?

தாய் என்பவள் ஒரு எடைக்கல் தராசு. மனைவி என்பவள் ஒரு எலெக்ட்ரானிக் தராசு. எடைக்கல் தராசில்தான் நிறை எப்போதும் கூட இருக்கும். எலெக்ட்ரானிக் தராசில் எடை கூடுகிறதா என்று மனைவி பார்த்துக் கொண்டேயிருப்பார். கூடினால் உடனே அதைச் சரிசெய்து துல்லிய எடைக்குக் கொண்டு வந்துவிடுவார்.


ஆர்.விஜயன், வடபழனி.

பெண்களுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா?

கல்யாணத்திற்கு முன் செல்லம் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டு கல்யாணத்திற்குப் பிறகு அதிகப்படுத்தலாம். முதலில் செல்லம் கொடுத்தால் வாழாமல் கெடுவாள். திருமணத்திற்குப் பிறகு அதிகச் செல்லம் கொடுத்தால் வாழ்ந்து கெடுவாள்.


ஜி.சேஷகிரிராவ், சென்னை-60.

முஷாரஃப்பின் அதிகாரம் எதுவரை?

மாசக் கணக்கோ, வாரக்கணக்கோதான்! கார வடையே அடுத்தநாள் ஊசிப்போகிறது. அப்படியிருக்க இந்த அதிகாரமெல்லாம் எத்தனை நாளுக்கு?


ஜி.கார்த்திகேயன், திருவண்ணாமல்.

மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் ?

அதிக வித்தியாசமெல்லாம் இல்லை. முன்பு மனிதன் பிறருக்காக வாழந்தான். மிருகம் தனக்காக வாழ்ந்தது. இப்போது மனிதனும் தனக்காகவே வாழ ஆரம்பித்துவிட்டான்.


கே.நாராயணசாமி, குளித்தலை.

ராஜ் டி.வி.யும் முழுநேரச் செய்திப் பிரிவை ஆரம்பித்திருப்பது பற்றி?

ராஜேந்திரன் சகோதரர்கள் சாதிக்கிறார்கள். செய்தி சேனல்கள் எத்தனை வந்தாலும் அதை வரவேற்கிறவன் நான். மக்களை அழச் செய்யும் அழுமூஞ்சித் தொடர்களால் பயனில்லை. செய்தி சேனல்களோ கண்களைத் திறக்கச் செய்பவை.

என்.ராஜேஷ், சென்னை-1.

நிம்மதியாக இருப்பவர்களில் யாராவது குறிப்பிடுங்களேன்?

காவல்துறைத் தொல்லையைத் தவிர்த்துவிட்டால் நடைபாதை வாசிகள் எல்லோரும் இந்தப் பட்டியலில் வருகிறார்கள். அவர்களுக்குக் கவலையின் கரு இல்லை. அதனால் அதற்கான முட்டைகளும் அவர்களிடம் உருவாவது இல்லை. மாட மாளிகைவாசிகளைவிட இவர்கள் நிம்மதியாக இருப்பது வியப்புதான். எல்லாம் மனசில் இருக்கிறது; வாழ்கையைப் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.


கே.முருகானந்தம், திருவேற்காடு.

கோயிலே கதியென்று இருக்கும் பெண்களைப் பற்றி?

‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்றிருந்தால், கணவனும் அத்தகைய தகுதிகளை வளர்த்துக் கொண்டால் கோயில்களுக்கு அதிகம் வேலையில்லை.


ஏ.வினைதீர்த்தான், மதுரை.

ஆசியக் கோப்பை நமக்குத்தானே?

அனுபவமும் இளமையும் கலக்கப்பட வேண்டும். ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி இளைஞர்களை அதிகம் நம்புகிறது. கவிழ்த்தாலும் கவிழ்ப்பார்கள்; ஜெயித்துக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். தோனி, பாகிஸ்தானிடம் பங்களாதேஷில் பறிகொடுத்த மணி மகுடத்தை மீட்டே ஆகவேண்டும்.


அ.பாண்டியன், தஞ்சாவூர்.

கம்யூனிஸ்டுகள் அணுஒப்பந்தத்தில் அடங்கமாட்டேன் என்கிறார்களே?

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை ரஷ்ய, சீன அனுதாபிகள் எப்படி வரவேற்பார்கள். வரும் தேர்தலில் இவர்களை வீட்டிலமர்த்தி ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடிய அரசியல் சூழலை ஓட்டுப் போடும் மக்கள்தாம் உருவாக்க வேண்டும். வேறு வழி இல்லை.


எஸ்.அலமேலு, பண்ருட்டி.

மருத்துவப் படிப்பிற்குக் கடந்த ஆண்டுக் கட்டணமே என்பது நல்ல முடிவுதானே?

தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் கெட்டிக்காரத்தனமானவை. வித்தியாசத் தொகையை எப்படியும் ஊசி போட்டு மயக்கமருந்து கொடுத்து வாங்கி விடுவார்கள்!


ஜே.பொன்ராஜ், சென்னை.

சென்னையில் குடியிருப்பு என்றாலே அது குப்பைக்கூளங்களின் மேடு என்றாகி வருவது பற்றி?

மக்களால் மக்களுக்காக மக்களே தருகிற இலவச நோய் பரப்பும் மையங்கள்தாம் இவை! தயவு செய்து மாநகராட்சியை மட்டும் குறை சொல்லாதீர்கள்.


பி.பொன்னுரங்கம், திருவாரூர்.

‘அவர்களுக்கென்ன கணவன், மனைவி என இரண்டு சம்பாத்தியங்கள்’ என்பவர்களைப் பற்றி?

அவர்கள் பார்வையில் இவர்கள் பொருள்களாய்க் குவிக்கிறார்களே என்கிற பொறாமை. எனது பார்வையில் அன்பை அடகு வைத்துவிட்டுப் பணத்தை மட்டுமே குவிக்கிறார்களே என்கிற ஆதங்கம்.


என்.கோவிந்தன், ஈரோடு.

இன்று காதலர்கள் பெருகிவிட்டார்களே?

வேலை இன்மையைப் போல் இன்று காதலும் மிக மோசமாகிவிட்டது. பல பெண்களின் இதயங்களிலும் இப்போது இந்த வேகன்ஸிதான் அதிகம் தெரிகிறது.


பா.செல்வேந்திரன், தர்மபுரி.

2 பேர் இறந்ததற்கு பத்துமடங்கு காவல்துறையினர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டது நியாயமா? சொல்லுங்கள்?

நீங்கள் அரூர் சரகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட காவல் துறையினரின் நெருங்கிய உறவினரோ என்று உங்கள் கேள்வி எண்ண வைக்கிறது. பல காவல் நிலையங்களுக்குக் கள்ளச் சாராய வியாபாரிகள் கப்பங் கட்டுகிறார்கள். இதை ஒழிக்கும் காவல் தலைமையின் செயல்பாட்டை என்னால் கடுமையாக விமரிசிக்க முடியவில்லை. ஒருவர் இறந்தாலும் உங்களைக் கூண்டோடு தண்டிப்போம் என்கிற இந்த எச்சரிக்கை மணி அவசியம் என்றும் மனத்திற்குப் படுகிறது.


ஆர்.குணசேகரன், புதுக்கோட்டை.

நிறைவேறாத சின்ன ஆசை ஏதும்?

கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் இரயிலில் பயணிக்க வேண்டும் என்பது. இரயில் நிலையங்களின் அழகிற்காகவே ஒருமுறை பயணிக்க வேண்டும் போலிருக்கிறது. வரவர நமது சென்னையும் மேலை நாடாகி வருகிறது. (எச்சில் துப்புவதைத் தவிர்த்து!)


வி.பிரசாத், கரூர்.

மனைவியை இழந்த ஆண்களைவிடக் கணவனை இழந்த பெண்கள் மனநிம்மதியோடு இருக்கிறார்கள் என்கிற சமீபத்திய ஆய்வு பற்றி?

ஜீரணிக்கவே முடியாத கருத்து!


எம்.ராஜன், தஞ்சாவூர்.

உங்களுக்குப் புரியாத புதிர் ஏதும்?

டெலிசீரியல்களைப் பார்த்து பெண்கள் ஏன் அழுகிறார்கள் என்பது இதுவரை எனக்குப் புரிந்த பாடில்லை. சீரியலில் நடிப்பவர்கள் பல்லாயிரங்களை வாங்கிக் கொண்டு அழுகிறார்கள். அதைப் பார்ப்பவர்களோ ஓரிரு ரூபாயைக் கொடுத்துவிட்டு அழுகிறார்கள். இது ஏன்? காசையும் கொடுத்துவிட்டு ஏன் அழணும்?


எஸ்.கண்ணன், ஊத்துக்கோட்டை.

தமிழகத்தில் தி.மு.க.வும், கம்யூனிஸ்டும் எப்படியிருக்கின்றன?

கொஞ்ச காலம் வறுத்த சேமியா மாதிரி ஒருவரோடு ஒருவர் ஒட்டாமல் இருந்தார்கள். இப்போதோ வேகவைத்த நூடுல்ஸ் மாதிரி குழைந்து காணப்படுகிறார்கள்.


எம்.காசி, தூத்துக்குடி.

உங்கள் பதில்கள் பல நேரம் பணிவாக இருக்கிறது என்கிறாரே என் நண்பர்?

ஏழையாயினும் தாழ உரைக்கிறேன் என்கிறாரா? ஒரு ஏழையின் அருமை இன்னொரு ஏழைக்குத்தாங்க தெரியும்.


எம்.குப்புசாமி, நொளம்பூர்.

அன்பு மனைவிக்குத் தினமும் பூ வாங்கித் தரலாமா?

யார் அந்தப் பூக்காரி என்கிற கேள்வி வராதவரை ஒ.கே!


ஜி.லோகநாதன், திருச்சி.

வீட்டில் ஒரு ஆண் யார் பக்கம் இருக்க வேண்டும்? அம்மா பக்கமா? மனைவி பக்கமா?

அம்மா பக்கமிருந்தால் மனைவிக்குப் பிடிக்காது. மனைவி பக்கம் இருந்தால் அம்மாவுக்குப் பிடிக்காது. மவுனமாய் இருந்தாலோ இருவருக்குமே பிடிக்காது. பாவம் இந்த ஆண்கள். நியாயம் பக்கம் சாயுங்கள். வெளி ஆட்களாவது ஆதரவு தருவார்கள்.


எஸ்.சபேசன், குரோம்பேட்டை.

அரசாங்க வேலை என்பது கடின வேலையா?

அந்த அலுவலகத்தில் உள்ள சில செயற்கைச் கோள்களின் சேவையைப் பொறுத்தது. அரசாங்க அலவலகங்களில் செயற்கைக் கோள்களா? திகைப்பீர்களே? அதாங்க, கோள்மூட்டிகள்! தனியார் நிறுவனத்திற்கும் இது பொருந்தும் என்கிறீர்களா? அதுவும் சரி!


என்.சாரங்கபாணி, சென்னை-19.

இன்று நா காக்க வேண்டியவர்கள் யார்?

எல்லாப் பயணிகளுமே இன்று நா காக்க வேண்டியவர்கள்தாம். அதைக் காக்காதவர்கள், ஏறும்போது சிவமே என்று ஏறி, இறங்கும்போது அடக்கேவலமே என்று இறங்க ஆரம்பிப்பார்கள்.

27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
Related Post

Leave a Reply