Friday 27 June 2008

2008/06/27 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஆர்.சீனிவாசன், வேலூர்.

வாசகர்களிடம் நீங்கள் வெற்றி பெற்றுவீட்டீர்களா?

Boss நீங்க pass என்று சொல்ல ஊரில் ஒருவர்கூட இல்லை. நானென்ன அழகிரி ரேஞ்சுக்கா இருக்கேன்? இப்படியெல்லாம் சொல்லி போஸ்டர் அடிக்க.


எம்.ரங்கநாதன், திருவள்ளூர்.

தி.மு.க. அரசு இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டதே?

அதுதான் ஏகபோகமாய் விளம்பரப்படுத்துகிறார்களே? விளம்பரங்களைப் பார்த்த பின்தான், அட! இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டதா என்று பலரும் வியந்தார்கள்? அப்படியொரு சாதனை! அதாங்க நன்கு சாதித்திருந்தால் அதை நாமாகப் பதிந்திருப்போம். நிறையச் சாதிக்காததால் அவர்களாக அதைப் பதிய வைக்கிறார்கள்.


கே.ராமன், மன்னார்குடி.

ரவுடிகளை ஏன் அரசாங்கம் விட்டு வைக்கிறது?

தேர்தல் காலங்களில் இவர்கள்தாம் சரியான வாக்கு வங்கிகள். இந்த வங்கிகளைப் போய் கபளீகரம் செய்வார்களா? மாவிலை, தோரணம் கட்டி இந்த வங்கிகளைப் பராமரிக்க வேண்டாம்.


என்.ஜெகன், மும்பை.

கர்நாடகத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது எதில் போய் முடியும்?

தென்னிந்தியாவில் பந்தக்கால் நட்டுவிட்டார்கள். இனி மற்ற மாநிலங்களிலும் அது பந்தக்கால் நடப்பார்க்கும் காங்கிரஸ், இனி ஒரு விவசாயக் கடன் தள்ளுபடிதான்!


‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

இன்று மண்ணாசை அதிகமா, பொன்னாசை அதிகமா?

மும்பையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு சதுர அடி விலை ரூபாய் ஒரு இலட்சத்து இருபதாயிரமாம். நடிகர் வினோத்கன்னா இப்படியொரு விலை கொடுத்து வாங்கிய பிறகும், யாராவது பொன்னாசை வைத்திருந்தால் அவர்களின் ஆசை மண்ணாசைதான்.


ஜி.நரசிம்மன், பம்மல்.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்திற்கு புதிய பா.ஜ.க. அரசு ஆதரவாக இருக்கும் என்று இல.கணேசன் கூறுகிறாரே?

சூரியனைக் கண்டு தாமரை மலர்ந்தால், தமிழகம் அழகாய்த்தான் இருக்கும். ஒகேனக்கலாவது தமிழகத்தை ஒரு தாமரைத் தடாகமாக்கட்டும். தமிழகம் ஒரு தாமரைத் தாடகம் என்றதால், உடனே இங்கு பி.ஜே.பி. ஆட்சிதான் என்ற முடிவுக்கு வராதீர். கெட்டாலும் நமக்குத் திராவிடக் கட்சிகள்தான்.


வி.குணசேகரன், விழுப்புரம்.

ஆகஸ்ட் 31இல் பாராளுமன்றத் தேர்தலை நடத்தத் தயார் என்கிறதே தேர்தல் ஆணையம்?

இன்றைய இளைஞர்களைப் போல் தேர்தல் ஆணையமும் ‘எங்களுக்கு வேலை கொடுங்கள்!’ என்கிறார்கள். ஆக, ஏதோவொரு விதத்தில் இந்தியாவில் வேலையில்லாப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் நினைத்தால் இப்போதே இவர்களுக்கு வேலை கொடுக்கலாம். நினைப்பார்களா? நினைத்துதான் கொடுப்பார்களா?


ஆர்.பாபு, சென்னை.

இன்றையக் காதலர்களின் அடிப்படைக் கொள்கை என்ன?

இன்றைய கட்சிகளைப் போலத்தான் இவர்களின் கொள்கைகளும். யார் அதிக இடம் கொடுக்கிறார்களோ? அவர்களுக்கே இவர்களின் ஆதரவு.


டி.அருளானந்தம், திருச்சி.

நான் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன், உங்கள் ஆலோசனை?

2011இல் நீங்கள்தான் முதலமைச்சரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்புறமாய் ஆரம்பியுங்கள். அது உறுதிப்படாமல் ஒரு கட்சி ஆரம்பிப்பது என்பது இந்த நாளில் வீண் முயற்சி?


எஸ். பார்த்திபன், ஜாபர்கான்பேட்டை.

சுப்பிரமணிய சுவாமியைப் பற்றி?

அவரால் ஆதரிக்கப்படாத கட்சிகளோ, எதிர்க்கப்படாத கட்சிகளோ இந்தியாவிலேயே இல்லை. அரசியலில் இவர் ஓர் அவதார புருஷர்.


ஜே.பீட்டர், சென்னை-84.

அரசியல்வாதிகள் என்றாலே அவர்கள் அடுத்தவர் விமரிசனங்களுக்கு ஆளாக வேண்டியதுதானா?

விமரிசனங்களுக்கு ஆளானால்தான் அரசியலில் அவர்கள் முழு வேக்காட்டுத்தனம். இல்லாவிட்டால் அவர்கள் அரைவேக்காட்டுத்தனம்தான். உங்களுக்கு ஃபுல் பாயில் பிடிக்குமா; ஆஃப்பாயில் பிடிக்குமா?


ஜே.ஆர்.ஆனந்தகணேஷ், பெங்களூரு-2.

சோறு சமைக்க அரிசி இரண்டு ரூபாய், அதற்கு குழம்பு வைக்க இருபத்தைந்து ரூபாய் என்கிறாரே விஜயகாந்த்?

சரி.விசாரிப்போம் என்று ஒரு தள்ளு வண்டிகாரரை அணுகினேன். கிலோ பீன்ஸ் நாற்பத்து நான்கு ரூபாய் என்றார். பாதி குப்பைக்குப் போவதே நாற்பத்து நான்கு என்றால், குப்பைக்கே போகாத பீட்ரூட், கேரட் எல்லாம் என்னவாக இருக்கும்? யோசித்தேன். விலையைக் கேட்கலாம் என்று பார்த்தால், கையில் ஒரு மெடி க்ளைம் கார்டு இல்லாமல் முடியாது போலிருக்கு. பாதுகாப்பாய் வீட்டிற்கு வந்தால் போதுமென்றாகிவிட்டது. விஜயகாந்த் சொல்வது சரிதான்.


எம்.கமலா, பொள்ளாச்சி.

கால்பந்தாட்டத்தில் ஆர்வம் உண்டா?

உதைத்துத் தள்ளுவேன். சுத்தமா இல்லீங்க. என்றைக்கு உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா பங்குபெறும் தகுதியை எட்டுகிறதோ அன்றுதாங்க ஆர்வம் வரும். குட்டிக் குட்டி விலாசமில்லாத நாடுகளெல்லாம் பங்கு பெற்றுக் கலக்கும்போது நாம் மட்டும் ஏன் இப்படி? இந்த ஏக்கமே என் ஆர்வத்தைக் குறைச்சிட்டுதுங்க!


கே.ராஜ்வேல், தூத்துக்குடி.

ஆசியக் கோப்பைப் போட்டிற்கு ஸ்ரீசாந்த் பங்கு பெறத் தேர்ந்தெடுக்கப் படாதது ஏன்?

இந்தக் குணக்கேட்டு இளைஞரை உள்ளூர் அணியில்கூடச் சேர்க்கக் கூடாது என்பேன். பெங்களூரில் தங்கியிருந்த ஓட்டலில் நிர்வாகத்தினருடன் சண்டை. விளக்கம் கேட்டிருக்கிறது கிரிக்கெட் வாரியம். அக்தரைப்போல் ஸ்ரீசாந்தும் முடக்கப்பட வேண்டியவரே?


டி.திலீப்குமார், உடுமலைப்பேட்டை.

20-20 ஓவர் போட்டி ஒரு நாள் போட்டிக்கு எதிரியா?

நிச்சயமாக 50 ஓவர் போட்டி இப்போது போரடிக்க ஆரம்பித்துவிட்டது. நாள்பூரா எவன்யா உக்கார்ந்து பார்ப்பான்? மூன்றரை மணி நேரத்தில் முடியறதுதான்யா சுவாரசியமாக இருக்கிறது என்கிறது ஒரு வெள்ளைக்குருவி.


கே.பார்வதி, திருச்சி.

திரையுலகத் தேர்தல்களில் என்ன பிரச்னை?

பல பிரச்னைகள். தமிழரல்லாதவர்கள் தலைமைப் பதவிக்கு வரக்கூடாது என்கிறது ஒரு கும்பல். தமிழ்த் திரையுலகில் இருந்தாலே போதும், தமிழ்நாடு முக்கியத்தகுதி என்று கேட்கிறது தமிழல்லாத ஒரு கும்பல். யானை கரைக்கு இழுக்கிறது. முதலை நீருக்கு இழுக்கிறது. நீதிமன்றம்தான் தீர்வு சொல்ல வேண்டும்.


என்.நாச்சியப்பன், பாண்டிச்சேரி.

சமத்துவக் கட்சியில் தம் மனைவி ராதிகாவுக்கு எந்தப் பொறுப்பும் தரப்படமாட்டாது என்கிறாரே சரத்குமார்?

அரசியலின் பாலபாடங்களுள் ஒன்று. வேண்டியவர்களை, உறவினர்களை, இரத்த சொந்தங்களை மிகப் பொறுப்பான பதவிகளுள் அமர்த்துவது. இதையெல்லாம் கலைஞரிடம் பாடம் பயின்ற சரத்குமாரே பின்பற்றாவிட்டால் எப்படி?


ஏ.அப்துல்ஹமீது, வேலூர்.

முஷாரப் நிலை என்ன?

தொல்லை தாங்க முடியாமல் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு மாறினார். ஜனநாயகம் என்பது இருமுனையும் கூர்மை கொண்ட கத்தி. அந்தக் கத்தி முதலில் கையைக் கிழித்தது. இப்போது வயிற்றையோ கழுத்தையோ பதம் பார்க்கத் துடிக்கிறது.

20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
Related Post

Leave a Reply