Tuesday, 23 Dec 2008
திருமங்கலம்: மு.க. அழகிரி பல்டி: லதா அதியமான் மனுத் தாக்கல்

மதுரை: அமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரியுடன் தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் திறந்த ஜீப்பில் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் லதா அதியமான்.
அவர் நேற்று தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவருடைய அண்ணன் மு.க. அழகிரி மற்றும் தொண்டர்கள் சகிதம் திருமங்கலம் தொகுதி வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர், திருமங்கலம் தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்குச் சென்று அங்கு உதவி தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இறுதிநாளான நேற்று தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் உள்பட 19 பேர் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இவற்றையும் சேர்த்து மொத்தம் 36 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை மதுரையில் உள்ள நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்கிறது. மனுக்களை வரும் 26ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலையே இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜனவரி
9ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
மு.க. அழகிரி பல்டி…
தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது உடன்வந்த மு.க. அழகிரி நிருபர்களிடம் பேசுகையில்,
கண் அறுவை சிகிச்சை காரணமாக தேர்தல் பணிக்குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
கண் அறுவை சிகிச்சையை தள்ளி வைத்துவிட்டதாகவும், தனது தம்பி மு.க. ஸ்டாலினின் அன்புக்கட்டளையும் இதற்கு காரணம் என்றார் அவர். தானும் தம்பியும் சேர்ந்துழைத்து மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக லதா அதியமானையும் வெற்றிபெறச் செய்து, அந்த வெற்றியை தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் தருவோம் என்றும் கூறினார்.
அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இதே கருத்தைக் கூறினார்.
































