Friday, 5 Dec 2008
அழகிற்கு அணிசேர்க்கும் மூலிகைகள் - விஜயகுமாரி பாஸ்கரன்
கொத்துமல்லி
‘சைனீஸ் பார்ஸ்லி’ என்று அழைக்கப்படும் பச்சைக் கொத்தமல்லியும், அதன் விதைகளும் நாம் அனைவரும் நன்கறிந்த பொருள். நம் அன்றாட உணவின் அத்தியாவசியப் பொருளுங்கூட.
பண்டைக் காலந்தொட்டு வளர்க்கப்பட்டு வரும் முக்கிய மருத்துவத் தாவரங்களில் கொத்துமல்லியும் ஒன்று ஆகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வளரும் குறுஞ்செடியுமான இதன் இலை, விதை, தண்டு என அனைத்து பாகங்களும் இனிய மணம் கொண்டவை.
இந்தியாவில் பொதுவாக எல்லா மாநிலங்களிலும் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. இவ்விலைகளில் வைட்டமின் ‘சி’ மற்றும் வைட்டமின் ‘இ’ ‘ஏ’ மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
முழுத் தாவரமும் மண்மூட்டும் பொருளாகக் காணப்படுகிறது. கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டதாயிருக்கும். மேலும், அதிக நுரைக்கும் தன்மையும், மிருதுவாயும், பச்சை நிறமாகவும் இருக்கும்.
இலைகளின் சாறு தோலின் மீது தோன்றும் சிவப்பு திட்டுகளைக் குணப்படுத்தும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. உடல் வெப்பம் மற்றும் தாகத்தினைத் தீர்க்கும். ஜீரண உறுப்புகளைத் தூண்டக் கூடியது. வாய்வு மற்றும் வயிறு உபாதைகளைத் தீர்க்க வல்லது.
கீரை வகைகளில் அதிக அளவு இரும்புச்சத்து உடையது கொத்தமல்லிதான். கொத்தமல்லி நீர் மூட்டுகளில் ஏற்படும் எரிச்சல், வயிற்றில் ஏற்படும் ரணம் ஆகியவற்றைத் தடுக்கும். கொத்தமல்லி இலை நீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதனால் அம்மை நோயால் கண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று யுனானி மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொத்தமல்லி கீரையை, வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர புதிய இரத்தம் ஊறும். கண்கள் குளிர்ச்சியுடன் பார்வை தெளிவு பெறும்.
கொத்தமல்லி கீரையின் சாறை சருமத்தின் கொரகொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து மாலையில் குளித்து வர தோல் தடிப்பு மாறி சொரசொரப்பின்றி சருமம் வழவழப்பாகும்.
உடலில் தோல் தடித்து சொரசொரப்பாகவும், கருப்பாகவும் இருந்தால் கொத்தமல்லி இலைகளை எடுத்து தோல்பகுதியின் மீது வைத்து நன்கு தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து வந்தால் தடிப்பும், கருப்பும் நீங்கிவிடும்.
கொத்தமல்லி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, வதக்கிய விழுதை எடுத்து, வீக்கம், கட்டி இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டி வர, வீக்கம் வடிந்து, கட்டி பழுத்து உடைந்து விரைவில் ஆறிவிடும்.
கொத்துமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டதாயிருக்கும். வாசனைப் பொருட் தயாரிப்பில் கொத்தமல்லி விதைத் தைலம் பயனுள்ள உட்பொருள், மணம் கூட்டுவதில் கொத்துமல்லித் தைலம் தன்னுடைய நறுமணத்தை மற்ற தைலங்களைவிட அதிக காலம் நிலைக்கச் செய்யும் தன்மையுடையது. இதன் இனிய நறுமணம் மற்ற வாசனைப் பொருட்களுடன் இயல்பாக இணைகிறது.
மல்லி விதைகளுடன் சமபங்கு சந்தனம், நெல்லி வற்றல் கலந்து சுத்தமான நீரில் ஊற வைத்து காலையில் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வர ரத்தக் கொதிப்பு, தலைசுற்றல், மயக்கம் நீங்கும்.
முதன் முதலாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட வகைகளில் கொத்தமல்லியும் ஒன்று.
மிதமிஞ்சி மதுபானம் அருந்துவதால் ஏற்படும் போதையைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. கொத்தமல்லி கஷாயத்தால் பித்தப்பிணிகள், நீர்க்கோவை, தொண்டையில் உண்டாகும் புண் முதலியன குணமாகும். விதையை நீர் விட்டரைத்து தலைவலிக்கு பற்றிடலாம். சந்தனத்துடன் சேர்த்தரைத்து பித்தத் தலை வலிக்குப் பற்றிடலாம். வாயிலிட்டு மெல்ல வாய் துர்நாற்றம் நீங்கும். சந்தனத்துடன் கொத்தமல்லி விதையினை அரைத்துப் பூச பித்த தலைவலியும், தனியாக அரைத்துப் பற்றிட தலைவலி, மண்டையிடி முதலியனவும், கிளறிக் கட்ட நாள்பட்ட புண், பிளவை முதலியவை நீங்கும்.
அழகுக்கூடும்…
அழகுக் குறிப்புகள்
2008/10/31 வேப்பிலை (மார்கோசா, வேம்பு)
2008/10/17 கற்பூரவல்லி, ஓமவல்லி - விஜயகுமாரி பாஸ்கரன்
2008/09/12 அழகுக் குறிப்புகள் - புவனா
2008/09/05 அஜீரணத்தைத் தவிர்க்கலாமே!
2008/08/29 அலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்
2008/08/15 புகைப்பிடிப்பவர்களுக்கு
2008/08/08 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்
2008/08/01 நடிகர்களின் ஆரோக்கியக் குறிப்புகள்
2008/06/13 உடற்பயிற்சி கூடங்கள்
2008/06/06 ஆண்களும் அழகு செய்து கொள்ளலாமே!
2008/05/16 தலைமுடிக்குச் சாயமிடுதல் (டை)
2008/05/09 மணப்பெண் ஆவதற்கு முன்
2008/05/02 தலைமுடிப் பாதுகாப்பு
2008/04/25 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 4
2008/04/18 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 3
2008/04/11 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 2
2008/04/04 புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள் - 1
2008/03/28 அழகுக் குறிப்புகள் - தமிழ்வாணன்
































