தைவான் சென்று வந்தேன்
மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
தைவான் தேசியப் பல்கலைக்கழகத்தினுள் நான் நுழைந்தபோது இருட்டிவிட்டது. இப்பல்கலைக்கழகம் தைப்பே நகரின் மையத்தில் அழகுற அமைந்துள்ளது.
நுழைந்ததுமே பல அசத்தல்கள். என்னவென்றால் கடுமையான காவல் கட்டுப்பாடுகள்தாம் என்னை முதலில் ஈர்த்தன. இந்த இடத்தில் இதைக் குறிப்பிடுகையில் ஐயோ! வெளியே இருந்து காவல்துறையை அனுமதிக்காத சென்னைச் சட்டக் கல்லூரி நிர்வாகம் இப்படி உள்ளேயாவது தனியார் காவல் பிரிவை அமர்த்தியிருந்தால் ஓரளவாவது சேதங்களைத் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றியது.
பல்கலைக்கழக நுழைவாயில் மிக அகலமாக மிகப் பெரியதாக இருந்தது. இவ்வளவு பெரிய நுழைவாயிலுக்கு எப்படி வாயிற்கதவு போடுவார்கள்? ஒருவேளை உள்ளுக்குள் ஓடிவிடும் தள்ளுக்கதவாக இருக்கமாக்கும் என்று பார்த்தால் கதவுகளே இல்லை. இது எனக்குச் சற்றே வியப்பைத் தந்தது.
பாதுகாவலர்கள் இடுப்பில் ஒரு லத்திக்கம்பையும் ஒரு துப்பாக்கியையும் சொருகியிருந்தார்கள். துப்பாக்கி வைத்துக்கொள்ளுமளவிற்கா இங்கு நிலமைகள் மோசம்? கேட்க விரும்பினேன்; கேட்கவில்லை.
பாக்கெட்டில் எதற்கும் இருக்கட்டும் என்று பாஸ்போர்ட்டின் நகலினை வைத்திருந்தேன்.
அடுத்த அசத்தல் தரையில் நட்சத்திரங்களைப் பதித்ததைப் போல பளீர் பளீர் என்று ஒளியின் வெட்டுகள். தரையைப் பார்த்தால் தரையில் உள்ள கற்களில் வெள்ளித் துகள்களைப் பதித்ததுபோல் இருந்தது. ஒரு நிமிடம் வெட்கப்படாமல் முட்டி போட்டு அமர்ந்து தரைப்பகுதியைத் தடவிப் பார்த்தேன். அட! அது செயற்கையான விஷயமல்ல அந்தக் கல்லே அப்படி!
எத்துணையோ ஆயிரம் சதுரஅடிப் பரப்பளவிற்கு இந்தத் தரைக்கற்களைப் பதித்து சுற்றிலும் சக்தி வாய்ந்த விளக்குகளை வேறு பதிந்திருப்பதால் தகதகவென்று வெள்ளித் துகள்களைத் தரையில் வீசிவிட்டதைப் போல் ஜொலிக்கிறது.
அப்படியே மனம் இலயித்து நின்றுவிட்டேன். நகரவோ அந்தத் தரையை மிதித்துக் கடக்கவோ மனமே வரவில்லை.
இந்த வட்டத்தரையைச் சுற்றிலும் பூங்காவின் பாணியில் சில இருக்கைகள்; புல்வெளிகள்; சில புதுவகைத் தாவரங்கள். ஒரு பல்கலைக்கழக நுழைவாயிலா அது? உலக நாடுகளெல்லாம் உறுப்பினர் நாடுகளாக உள்ள ஒரு நிறுவனத்தின் நுழைவாயில் போலல்லவா இருக்கிறது.
இருவர் அங்குள்ள ஒரு கல்லில் அமர்ந்து கழுத்தில் கை போட்டபடி நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்க, இருவரும் நண்பர்களாக்கும் என்று பார்த்தால், ஒருவர் ஆண்; ஒருவர் பெண். கிட்டத்தட்ட இருவரும் ஒரே வகையான ஆடைகளை அணிந்திருந்ததால் முதலில் ஆண்கள் என்றே நினைத்தேன்.
மாலை ஆறு ஆனால் உள்ளடங்கிவிடும் பெண்களின் விடுதிபோல் இல்லாமல் இருட்டி வெகுநேரம் ஆகியும் சல்லாபம் செய்யும் இந்த நெருக்கம் இங்கே ஏன்? இங்கே ஆண் பெண் பழகுவதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்பதை கட்டியங் கூறிய ஜோடி இது என்பதை என்னால் பின்னரே உணர முடிந்தது.
முதலில் கழிவறைக்குச் சென்றேன். ‘பக்’கென்றது. ஒரு மாணவர் எந்தவிதமான துண்டுத் துணிகூட உடம்பில் இன்றிக் கண்ணெதிரே குளித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் திரும்பிக் கொள்வாராக்கும் என்று பார்த்தால் சூடு சுரணையே இல்லாமல் என்னை அலட்சியமாகப் பார்த்தபடி அவர்பாடு குளித்துக்கொண்டே இருந்தார்.
நாம்தான் முகத்தைக் திரும்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கழிவறை சுத்தமாக இருந்ததே தவிர, மானம் காப்பாற்ற உதவுவதாக இல்லை. கதவுகள் அரைக்கதவுகளாக இருந்தன. இடுப்புப் பகுதி மட்டுமே மறைக்கப்படும். மற்றவை திறந்தவெளிதான்.
வெளியில் வந்தபிறகு மாணவ-மாணவிகளைக் கலந்தே காணப்பெற்றேன்.
உள்ளே திரிந்த சல மாணவிகளைப் பார்த்தபோது மாடல் அழகிகள் கெட்டார்கள் போங்கள்!
சுரேஷ்குமாரின் அறையைக் கேட்டு விசாரித்து நடந்தபோது இது எவ்வளவு பெரிய பல்கலையாக இருக்கிறது என வியந்தேன்.
சீனாவில் கண்டதைப் போலவே விளையாட்டுக் கூடங்களில் ஏகப்பட்ட கூட்டங்கள்.
உதை பந்திற்கும் கூடைப்பந்திற்கும் அதிகமான கிராக்கி இருந்தது. இரவு வெகுநேரம் வரை இந்த விளையாட்டுத் திடல்கள் பெருங்கூட்டத்துடன் இருக்குமாம்.
பார்க்கிறவர்களிடமெல்லாம் உதிரி உதிரியாகத் தகவல்களைத் திரட்டினேன். இந்த வளாகத்திற்குள்தான் எவரை என்ன கேட்டாலும் சரியாக ஆங்கிலத்தில் பதில் வருகிறது.
ஒளிவிளக்குகள் ஒலியை உமிழ திறந்தவெளி விளையாட்டு அரங்குகள் அனைத்தும் ஜே ஜே என்று கூட்டமாக இருந்தன.
விளையாட்டு அரங்குகளின் ஓரங்களில் உள்ள திண்ணைகளில் புல்வெளிகளில் பர்சுகள், கைக்கடிகாரங்கள், செல்பேசிகள் அப்படி அப்படியே கிடக்கின்றன. கேட்பார் இல்லை; சீண்டுவார் இல்லை.
பல்கலைக்கழகம் முழுக்க நான் கண்ட ஜீரணிக்க முடியாத ஒற்றுமை வகுப்பறை நேரம் முடிந்ததும் வெகுநேரம் வரை மாணவ - மாணவிகள் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருந்தும் ஒன்றாக விளையாடியதும்தாம்.
இவர்களிடையே இருந்த நெருக்கங்கள் மிக அநியாயம்.
தைவான் இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட ஒரு மேலைநாடுதான். கட்டுப்பாடுகள்; இடைவெளிகள்; கண்ணியங்கள் இல்லை. எல்லாம் காற்றில் பறக்கிற சங்கதிகள்.
உள் விளையாட்டரங்குகளைப் பார்ப்பது என முடிவு செய்து அங்கெல்லாம் சுற்றினேன்.
இவற்றுள் ஓர் அரங்கில் மட்டும் நடனப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது.
காட்டுக் கூச்சலாக இரைச்சல். சுமார் 20 மாணவ - மாணவிகள் ஒரே நேரத்தில் இரு நடனப் பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான் ஒரு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து ஓரமாக அமர்ந்துகொண்டேன்.
நான் தைவான் தேசியப் பல்கலைக்கழகத்திற்கு வந்தது சுரேஷ்குமாரையும், சில தமிழ் மாணவர்களையும் சந்திக்க, இதைச் செயல்படுத்தாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியா?
நீங்கள் கேட்பது சரி. நான் ஒரு முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்ற வகையில் பயண நேரத்தைக் கேட்டு அறிந்துகொண்டு அதைவிடக் கூடுதலாக அரைமணி நேரத்தை நிர்ணயித்து என் அறையிலிருந்து புறப்பட்டேன். ஆனால் எதிர்பார்த்ததைவிடப் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்ததால் சீக்கிரமே போய்விட்டேன்.
வெகு முன்னதாக நுழைந்து தமிழ் நண்பர்களுக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பிவில்லை. எனவேதான் இந்த முன்வலம்.
நடனப்பயிற்சியில் ஆசிரியர் மாணவர் நல்லுறவு அருமை. வெகு நட்புணர்வோடு சொல்லித் தருகிறார்கள்.
ஒரு மாணவர் மாணவி இணைந்து ஆடியபோது உங்களுக்குள் நெருக்கும் போதாது; இன்னும் இறுகக் கட்டியணைக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததோடு, தன் மாணவியை இறுக்கி அணைத்தும் காட்டினார். அந்த மாணவி இதற்கெல்லாம் வெட்கப்பட்டதாகவே தெரியவில்லை. நெளிந்தவன் நான்தான்.
திரையுலகில் தொழில் ரீதியான நடனக் கலைஞர்கள் மத்தியில் இந்த நெருக்கம் காணப்பட்டால் அது வியப்பில்லை. ஆனால் மாணவன் மாணவி என்கிற பருவத்தில் ஓர் எல்லைக்கோடு வேண்டுமல்லவா? இதைப்பற்றியெல்லாம் இங்கு எவரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
நடனப் பாணி மிக நன்றாக இருந்தது. சிறு இசைத் துண்டை மட்டும் திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டி அதில் தெளிவு வந்ததும் அடுத்த இசைத் துண்டுக்குப் போகிறார்கள். வெகுநேரம் இங்கு இருந்து இரசிப்பது மிகக் கடினம். புறப்பட்டேன்.
கடிகாரத்தைப் பார்த்தேன். சுரேஷ்குமாரின் விடுதி அறையை நோக்கி நடந்தேன்.
அப்போதுதான் ஓர் இந்திய மாணவரும் ஒரு தைவான் மாணவியும் கிட்டத்தட்ட காதலர்களைப்போல் நெருக்கம் காட்டி நடந்ததைக் கவனித்தேன்.
இவர்களை மடக்கி எப்படியாவது பேட்டி காணவேண்டும் என்று தோன்றியது. இதுவரை நான் பார்த்ததெல்லாம் தைவானிய ஜோடிகள்தாம். இதுமட்டும்தான் வித்தியாசமான ஜோடி.
இவர்களை மடக்கி நிறுத்துவது நாகரிகமாகாது. சரி. சுரேஷ்குமார் உதவியுடன் இவர்களைப் பேட்டி காணலாம் என்றால், நான் சுரேஷ்குமாரைப் பார்த்து அழைத்து வருவதற்குள் இந்த ஜோடி தப்பித்துவிடும்.
என்னதான் செய்யலாம்?
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…