Friday, 7 Nov 2008

2008/11/07 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.சபாபதி, சேலம்-2.

ஆனந்த் உலக சாம்பியன் ஆனது பற்றி….?

இந்திய மண்ணின் அரிய சொத்து அவர். சதுரங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு இந்தியா. இந்தப் பெருமை தக்கவைத்துக் கொள்ளப்பட இவரைப் போன்ற சாதனையாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனந்த் ஒரு தனி மனிதப் படை. இந்த நாடு அவருக்குத் தரப்படவேண்டிய உண்மையான முக்கியத்துவத்தை இன்னும் தரவில்லை என்றே நினைக்கிறேன்.


கே. ஜெயங்கொண்டான், விருத்தாச்சலம்.

உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவது இயல்புதான். அமீர், சீமான் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற டாக்டர் ராமதாசின் வாதம் சரியா?

ஏற்க முடியாது. உணர்ச்சிவசப்படுவதற்கு எல்லை உண்டு. பல கொலைகள் உணர்ச்சி வசத்தின் உச்சத்தில் நிகழ்வதுதான். பாவம் என இரக்கப்பட முடியுமா? சீமான் விவகாரமாகவே பேசுகிற மனிதர். அமீர் இதில் சிக்கியதுதான் வியப்பான விஷயம்!


டி. சுரேஷ், மும்பை.

மகாராஷ்டிர - பீகார் உறவு சீர் குலைவது போல் தெரிகிறதே?

துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கடத்தல், மிரட்டல் செய்த ஒருவரை பீகாரித் தலைவர்கள் ஆதரித்துப் பேசுவது அரசியல் நெருப்பை ஊதிவிடத்தான். நடக்கிற சம்பவங்களைப் பார்க்கும்போது இந்திய ஒற்றுமை உணர்வுக்கு அரசியல் தலைவர்களே வேட்டு வைப்பார்கள் போலிருக்கிறது.


பா.ராமன், குளித்தலை.

வைகோ கைதைக் கண்டித்திருக்கும் ஜெயலலிதா பற்றி…?

ஒரு பக்கம் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறார். அவர்களை ஆதரிப்பவரை அரசியல் இலாபத்திற்காக அனுசரித்துப் போகிறார். ஜெயலலிதாவிடம் முதல் முறையாக ஓர் அரசியல் முரண்பாட்டைக் காண்கிறோம்.


கே.நாதன், சென்னை.

என் தந்தை ராஜீவ் இறந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை எனகிறாரே, ராகுல்காந்தி?

நமது சட்டத்தின் முன் ஆண்டியும் ஒன்றுதான், அரசனும் ஒன்றுதான் என்றால் யாராவது கேட்கிறார்களா? இந்திய அரசியலமைப்பின் முன் எல்லோரும் சமம் என்பது ராகுல் சொன்னால்தான் தெரிகிறது. நாம் சொன்னால், அது காதுக்குள் பஞ்சு வைத்துக் கொண்ட கதைதான்!


பி.ராஜா, மணலி.

மூன்று நாள் மழைக்கே சென்னையின் மூச்சு திணறிவிட்டதே?

கிராமங்கள் மாதிரியல்ல சென்னை. ஏற்கனவே புகைகளால் அதற்குக் காச நோய்! இப்போது மழையால் அதற்கு ஜன்னி! விவரம் தெரிந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இதை ‘மெடிகிளைமில்’ கூடச் சேர்க்காது. மீறிச் சேர்த்தால் அந்த நிறுவனம் இன்னொரு பங்குச் சந்தைதான்!


ஆர்.வந்தனா, மைலாப்பூர்.

ஹிதேந்திரன் பெற்றோரின் தியாகத்தைக் கண்டு கொள்ளாத நீங்கள் இதய மற்றவர் என்று குற்றம் சாட்டுகிறேன்!

அப்படி அல்ல. சில நேரங்களில் மெளனமும் ஒரு வகைக் கருத்துதான். ஓட்டுநர் உரிமம் இல்லாத ஹிதேந்திரன் வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் என்ன? இம் மரணத்தில் பெற்றோருக்கும் பொறுப்பு இருக்கிறது அல்லவா? எத்தனை பேரைக் காப்பாற்ற ஹிதேந்திரனை நாம் பறி கொடுத்தோம்? இதற்கு முன் எத்தனையோ உடல் தானங்களும் இவற்றால் பல உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆனால் ஹிதேந்திரன் மரணமும் அவரது உடல் தானமும் தமிழகத்தில் உடல் தானம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை!
உதாரணமாக,

ஓவியர் மதன் தம்பி உடல் உறுப்புகள் தானம். சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாஸ்கர் கண் தானம்.

குளித்தலையைச் சேர்ந்த மளிகை வியாபாரி தமிழ்ச் செல்வன் சிறுநீரகம், கண்கள் தானம்.

ராதா கிருஷ்ணன் என்பவர் கண், சிறுநீரகம் தானம் என்று தானங்கள் தொடர்கின்றன.


டி.சந்திரன், அம்பத்தூர்.

ஒரு பேச்சாளர் என்பவர் எப்படியிருக்க வேண்டும்?

இன்றைய கிரிக்கெட்டில் ‘டுவென்டி டுவென்டி’ மாதிரி இருக்க வேண்டும். எடுப்பாக ஆரம்பிக்க வேண்டும். வேகமாகக் கொண்டு செல்ல வேண்டும். சிக்ஸர்களாக முடிக்க வேண்டும்.


பா. சுந்தரம், திருவள்ளூர்.

இலவசங்களுக்கு விவஸ்தையே இல்லையா?

சென்னை மாநகராட்சிப் பள்ளி - மாணவிகளுக்கு ‘இலவச சானிடரி நாப்கின்’ கொடுத்ததைச் சொல்கிறீர்களா? இதைக்கூட இங்குள்ளவர்கள், இந்தியாவிலேயே ‘முதன் முறையாக’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்களே, அதுதான் எனக்கு விவஸ்தையாகப்படவில்லை.


ஜி.எஸ்.ரவி, சென்னை-32.

சுப்ரீம் கோர்ட்டில் 48 ஆயிரம் வழக்குகளும், சென்னை ஐகோர்ட்டில் 4.34 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறியிருக்கிறாரே?

அமைச்சர் சொல்வதைப் பார்த்தால், நாட்டில் நிறைய ஆவணக் காப்பகங்கள் இருப்பது போல் தெரிகிறது. இவை செல்லரிக்கும் வரை ‘செல்’லில் இருப்பவர்கள் செல்லிலேயே இருக்க வேண்டியதுதான்! நமது ‘லா’க்களுக்கு நாம் ‘லாலா’ பாடுவோம்!


சி. குணசேகரன், திண்டிவனம்.

டி.ராஜேந்தரின் கேள்விகளுக்குக் கலைஞர் பதில் சொல்ல மாட்டேன்கிறாரே?

ஒரு நாளில் அவருக்கு (எத்தனையோ தரப்புகளிலிருந்து) எத்தனையோ கேள்விகள் வருகின்றன. இவருடையதை சாய்ஸிலேயே விட்டுவிடுகிறார்!


எம்.ராமன், நெமிலி.

தமிழக காங்கிரசார் தி.மு.க. அரசைக் கடுமையாகச் சாடுகிறார்களே?

பார்த்தார்கள், பார்த்தார்கள் ஜீவனாம்சம் வாங்குவதைவிட பென்ஷனுக்காவது முயற்சி செய்யலாமே என்று இறங்கிவிட்டார்கள். எல்லாம் சாது மிரண்டால்… சரித்திரம்தான்!


டி.சிவானந்தம், சென்னை.

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்கள் எப்போது நீங்கும்?

நமது பால் பாக்கி, தயிர் பாக்கி மாதிரி இந்த பாக்கிகளும் தீரா. உலக வங்கி என்கிற தயிர்க்காரி இருக்கும் வரை, நம் வீட்டுச் சுவர்களில் நாம் கோடுகளைக் கிழித்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்!


எஸ்.வி.சர்மா, திருச்சி.

அண்ணா நூற்றாண்டையொட்டி விடுதலையான கைதிகள் குறித்து இன்னமும் விவகாரம் நிலவுகிறதே?

வரும் தேர்தலில் இவர்கள்தாம் கள்ள ஓட்டுக்களைப் பெயிலில் எடுக்கப் போகிறவர்கள் என்று நினைக்கிறது எதிர்க்கட்சிகளின் தரப்பு. இல்லையில்லை என்கிறது ஆளுங்கட்சியின் தரப்பு. நாம் இதில் எந்தத் தரப்பு?


பி.ஸ்ரீராம், பொழிச்சலூர்.

சந்திராயன்-1 இன் வெற்றி?

இது தமிழனைத் தலை நிமிர வைத்திருக்கிறது. அன்று ஒரு அண்ணாதுரை தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிட்டுத் தமிழகத்தைத் தலை நிமிர்த்தினார். இன்று ஒரு அண்ணாதுரை சந்திராயனையே சந்திரனுக்கு அனுப்பி இந்தியாவைத் தலை நிமிர்த்தியுள்ளார். எப்படியோ அண்ணா நூற்றாண்டின்போது அந்தப் பெயர் நன்றாகவே! விளங்குகிறது.


ஜே.ரத்தினம், தருமபுரி.

ஈரோடு மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளி இனாமாக 70,000 ரூபாய் பிடிபட்டுள்ளது பற்றி?

சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு இது தலை தீபாவளியாக இருக்காது. கடைசித் தீபாவளியாக இருக்கும். கொட்டும் மழையில் இந்த இனாம் நமுத்துப்போகும் என்று அவர் நினைத்திருப்பார். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையால் இது தீவிரவாதிகளின் வெடிகுண்டு போல அதிகச் சேதாரத்துடன் நேரத்திற்கு வெடித்திருக்கிறது.


வி.மணி, சென்னை-25.

விஜயகாந்தை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

அவரை நான் ஃபாலோ பண்ண முடியவில்லை. ஆனாலும் தமிழ்வாணனை அவர் பின்பற்றுவதால் ஹலோ சொல்கிற அளவிற்கு நெருங்கியிருக்கிறார். ஆமாங்க! தமிழ்வாணனுக்குத் துணிவுதான் துணை! இந்த விஜயகாந்துக்கும் அந்தத் துணிவே துணைதான் துணை!


ஜே.கார்த்திகேயன், விழுப்புரம்.

பல பிரச்னைகளிலும் மன்மோகன்சிங் ஏன் மவுனமாக இருக்கிறார்?

மறைந்த பிரதமர் நரசிம்மராவ் 24 மொழிகள் தெரிந்தவர். அவரே அத்தனை மொழிகளிலும் மெளனமாக இருந்துவிட்டுப் போனார். இந்த மன்மோகன்சிங் எத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருக்கப் போகிறார்? நாம் பேசி என்ன ஆகப் போகிறது? தானாகச் சரியாகட்டும் என நினைக்கிறாரோ என்னவோ!


மெ. கதிரவன், நாகப்பட்டினம்.

இரவில் சரியாகத் தூக்கம் வரமாட்டேங்குதே?

உங்களை மாதிரி ஆட்களைத்தான் அமலாக்கப் பிரிவிலும் வருமான வரித்துறையிலும் தேடிக்கிட்டிருக்காங்க. அங்கே போனால் வேலை நிச்சயம்! ட்ரை பண்ணுங்க, ட்ரை அண்ட் ட்ரை அகெய்ன்! இந்த இரண்டு துறைகளும்தான் தூக்க நேரத்திலும் முழிச்சிக்கிட்டு இருக்கு.


ஓ. சார்லஸ், திண்டிவனம்.

ஓபாமாவுக்கு ஆபத்து வருமா?

பதவி வருமுன்பே ஆபத்து வருவதுதான் அதிர்ச்சியாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவியில் வெள்ளையர் அமர்ந்தால் ஆபத்து குறைவு. கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்றால் ஆபத்து அதிகம். அமெரிக்காவை உய்விக்க வந்த ஒபாமாவுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்.


வி. பிரதாப்சந்திரன், பெங்களூர்.

கரும்பு விலை உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழக அரசால் ஏற்கப்படுமா?

ஏற்கப்பட்டே ஆகவேண்டும். கரும்புக்குப் பாடு அதிகம். 2000 ரூபாய் வழங்கினால் விவசாயிகள் கரும்பு பயிரிட ஆர்வமுடன் முன்வருவார்கள். இல்லாவிட்டால் மாற்றுப் பயிரைப் பயிரிட்டு கரும்புப் பஞ்சத்தை உருவாக்கிவிடுவார்கள். தமிழக அரசு இப்போது உயர்த்தியுள்ள விலையெல்லாம் ஒரு விலையே அல்ல!

31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply