Srilanka :Human bomb killed 29 including Ex Major General
மனித வெடிகுண்டு தாக்குதல்: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி உள்பட 29 பேர் பலி

அனுராதபுரம்: இலங்கை அனுராதபுரத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜனக பெரோரா உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தானதைத் தொடர்ந்து அங்கே விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. சமீபகாலத்தில் ராணுவத்தின் பலம் ஓங்கிவருவதாகவும், விடுதலைப்புலிகள் ஒடுங்கி வருவதாகவும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் தரப்பில் இதுகுறித்து ஒரு தகவலும் இல்லை.
விடுதலைப்புலிகளின் தலைமையிடமாகக் கருதப்படும் கிளிநொச்சியைக்கூட ஓரிரண்டு நாட்களில் பிடித்துவிடுவோம் என்று இலங்கை ராணுவம் கூறிவந்தது.
இந்நிலையில் வடகிழக்கு பகுதியில் உள்ள அனுராதபுரம் நகரில் நேற்று காலை 8.30 மணியளில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலக கட்டடம் நேற்று திறக்கப்பட இருந்தது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் காலையிலேயே திரண்டிருந்தனர். கட்டடத்தை கட்சியின் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுபப்பினரும், முன்னாள் ராணுவ தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரோரா திறக்க இருந்தார்.
8.40 மணியளவில் அக்கட்டட வளாகத்தில் நுழைந்த ஒருவன் மனித வெடிகுண்டாக மாறி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக வெடிக்கசெய்தான். இந்தக் குண்டுவெடிப்பில் ஜனக பெரோரா உள்பட 29 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் ஜனக பெரோராவின் மனைவியும் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் பதற்றம் பரவியுள்ளது.
ஜனக பெரோராவை கொல்வதுதான் இந்த குண்டுவெடிப்பின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் ‘ஆபரேஷன் கினி ஹிரா’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டு, விடுதலைப்புலிகள் முன்னேறி வருவதை தடுத்தவர். மேலும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு நிகராக ராணுவபடையை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர். தங்களுக்கு எதிரான, முன்னாள் தளபதியான ஜனக பெரோராவை தீர்த்துக்கட்டுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம். அந்த நோக்கம் இப்போது நிறைவேறிவிட்டது.
இந்த குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவிக்கையில்,
”தாங்கள் தோற்று வருவதை தாங்கமுடியாத விடுதலைப்புலிகள், இப்படியொரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுபோன்று மேலும் பல தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்துவார்கள் அதைத் தடுப்பதுதான் நமது முக்கிய பணி. நாட்டில் தீவிரவாத்தை அடியோடு ஒழிக்க எல்லாரும் ஓரணியாகத் திரண்டு போராடவேண்டும்” என்று கூறியுள்ளார்.