Friday, 3 Oct 2008
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தூங்கியது கிடையாது:
நல்லகண்ணு பேச்சுக்கு கருணாநிதி பதில்
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்ற இ.கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பேச்சுக்கு, இலங்கைத் தமிழர் பிரச்னையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்னையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது என்று முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரத மேடையில் ‘இலங்கைத் தமிழர்களுக்கு முன்பு ஆதரவளித்தேன் என்று பழைய பஞ்சாங்கத்தை முதல்வர் கருணாநிதி சொல்வது, ‘போன மாதம் வரை கற்போடு இருந்தேன்’ என்று சொல்வதைப் போல இருக்கிறது’ என்று வைகோ பேசியிருக்கிறாரே?
அவர் அதை பேசியிருப்பதை விட, ‘ஜனசக்தி’ பத்திரிகையில் அதை வெளியிட்டியிருக்கிறார்களே, அதற்காக பெரியவர் நல்லகண்ணு, இளையவர் பாண்டியனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசு இனியும் தூங்கக்கூடாது என்று தோழர் நல்லகண்ணு பேசியிருக்கிறாரே?
தோழர் நல்லகண்ணு இப்படி பேசியிருப்பது தான் ஆச்சரியத்தைத் தருகிறது. அவருமா இப்படி என்று? கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போதுதான் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக மத்திய அரசினை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்னையிலே மட்டுமல்ல, எந்தப் பிரச்னையிலும் தமிழக அரசு இதுவரையும் தூங்கியது இல்லை. இனியும் தூங்காது. இன்னும் சொல்லப்போனால் 23.4.2008 அன்று பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானத்தை நான் முன்மொழிந்த போது, இப்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்கள் சார்பில் யாரும் சட்டமன்றத்தில் பேசவே இல்லை என்பதற்காக அவர்கள் தூங்கிவிட்டதாக சொல்ல முடியுமா?
இலங்கைத் தமிழர்களுக்கென்று உண்ணாநோன்பு அறிவிக்கப்பட்டு நடைபெற்ற மேடையில் இலங்கைத் தமிழர் பிரச்னையை கருணாநிதி கொச்சைப்படுத்துவதா என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கிப் பேசியிருக்கிறாரே?
இலங்கைத் தமிழர் பிரச்னையை ஐ.நா.மன்றம் வரையில் போய் கொச்சைப்படுத்திப் பேசியவரே பண்ருட்டி தான் என்பதை யாரும் மறந்து விடவில்லை. அந்தப் பேச்சு என்ன தெரியுமா?
நாங்கள் அகதிகள் விஷயம்ம் வரைக்கும் நிறுத்திக் கொண்டோம். நாங்கள் இலங்கை அரசின் கொள்கைகளையோ, அல்லது இலங்கை அரசின் நடவடிக்கைகளையோ விமர்சிக்கவில்லை. உண்மையிலேயே நான் தெளிவுபடுத்த விரும்புவது இலங்கையின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடுமாறு சொல்லவோ அல்லது தலையிடவோ விரும்பவில்லை என்பது தான். இந்தியா எந்தப் பிரிவினை இயக்கத்தையும் ஆதரிக்க வில்லை. இப்படி பேசியவர்தான் இலங்கை பிரச்னையை நாம் கொச்சைப்படுத்தியதாகக் கூறுகிறார்.









































