Thursday, 11 Sep 2008
உலக ஒரு நாள் கிரிக்கெட் அணியில் சச்சின், டோனி

இவ்வாண்டுக்கான சிறந்த உலக ஒருநாள் போட்டி அணியில் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் டோனி இடம்பிடித்தனர்.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான (2007 ஆகஸ்ட் முதல் 2008 ஆகஸ்ட் வரை விளையாடிய போட்டிகளை வைத்து) சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று துபாயில் நடைபெற்றது.
இந்தஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது மேற்கிந்திய அணியின் சந்தர்பாலுக்கும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது தென்ஆப்பிரிக்காவின் டாலா ஸ்டெயினுக்கும், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது மகேந்திர சிங் டோனிக்கும், சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை விருது இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லோட் எட்வர்ட் டுக்கும், சிறந்த வளர்ந்துவரும் வீரர் விருது இலங்கையைச் சேர்ந்த அஜந்தா மெண்டிசுக்கும், சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருது யுவராஜ் சிங்கிற்கும், சிறந்த நடுவருக்கான விருது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிமோன் டபெலுக்கும் கிடைத்தது. சிறந்த நடுவருக்கான விருதை சிமோன் பெறுவது இது 5ஆவது முறையாகும். சிறந்த உத்வேக அணிக்கான விருதை இலங்கை பெற்றது.
விருது தேர்வு பட்டியலில் இடம்பிடித்திருந்த சச்சின், இஷாந்த் சர்மா இருவருக்கும் விருது கிடைக்கவில்லை.
இவ்வாண்டு சிறந்த உலக டெஸ்ட் அணியில் இந்திய வீரர் சேவாக் இடம்பிடித்துள்ளார். சிறந்த உலக ஒருநாள் கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கரும் டோனியும் இடம்பிடித்தனர்.









































