Friday, 5 Sep 2008

2008/09/05 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

சி.மணி, காஞ்சிபுரம்.

என் கேள்விகளுக்குத் தங்களிடம் பதிலில்லை எனத் தெரிந்தும் தொடர்ந்து எழுதி வரும் என்னைப் பற்றி?

‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பதனை நித்திரையிலும் கைவிடாத நீங்கள் இந்த முறை முத்திரை பெற்றுவிட்டீர்கள். மற்ற வாசகர்கள் என் சார்பில் ‘ஓ’ போடுவார்கள். சரியா?


ஆர்.ரவி, செங்கல்பட்டு.

காமராஜர் சாலையைப் பாதுகாக்கக் கூட இன்று பலருக்கு யோக்கியதை இல்லை என்கிறாரே கலைஞர், அவர் யாரைச் சொல்கிறார்?

எல்லாம் அந்த ‘பவன்’ சிற்றுண்டியாளர்களைத்தான். டிபன் மட்டுமே சாப்பிடக் கட்சி அலுவலகம் வருகிறவர்கள், கோட்டையை என்ன கேண்டீன் என்று நினைத்துக் கொண்டார்களா என்கிற கோபத்தைத்தான் மாம்பல மேம்பாலத்தில் அப்படிக் காட்டியிருக்கிறார். ஸாரி! அப்படி கொட்டியிருக்கிறார்.


ஆர்.மாணிக்கவாசகம், திருச்சி.

பார்த்த படத்தைத் திரும்பப் பார்க்கும் பழக்கம் உண்டா?

இளவயதில் உண்டு. நடிகர் திலகத்தின் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறேன். அது காலத்தின் அருமை தெரியாத வயது. தமிழ்வாணன் எடுத்த படம் என்பதால் ‘காதலிக்க வாங்க’ படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். குறைகளைக் கண்டுபிடித்து நீக்கச் சொல்வதற்காக. அண்மைப் படங்களில் தசாவதாரத்தை மட்டும் திரும்பப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, பல இடங்கள் புரியவில்லை என்பதற்காக!


சி.பெத்தபெருமாள், உடுமலைப்பேட்டை.

கல்பாக்கங்கள் தொடருமா?

அரசியலைக் கேட்கிறீர்களா, அணுஉலைகளைக் கேட்கிறீர்களா? ஒரு மோசமான சமுதாய மோதலைத் திருமாவளவன் அழகுறத் தவிர்த்துவிட்டார். ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் கைகலந்தால் தமிழகம் இரணகளமாகிவிடும். இருவரும் உள்ளங்கலந்தால் உயர்வுகள் உறுதியாகும். இதனை உணர்ந்த திருமா உடனே முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவிதம், சாப்பிட்டுவிட்டுக் காசு கொடுக்காமல் தகறாரு செய்ய விரும்பும் சில விடுதலைச் சிறுத்தைகளின் தலையில் வைக்கப்பட்ட நல்ல குட்டாகும்!


கே.முருகானந்தம், திருவேற்காடு.

அடுத்தவர்களைப் போல் நாம் ஆக முடியவில்லையே என்று பொறாமைப்படுகிறவர்களைப் பற்றி?

இவர்களுக்கு நமது ‘ஜீன்’களைப் பற்றிய அறிவு இல்லை என் நினைக்கிறேன். ஒருவரது ‘ஜீன்’ மாதிரியே இன்னொருவரது ஜீன் இருக்காது. அது தெரிந்தால் இந்தப் பொறாமையே இல்லை.


டி.புஷ்பராஜ், புதுச்சேரி.

பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் வந்துவிடுமா?

சுதந்தர தினத்தன்று கோட்டையில் கலைஞர் தனது அட்சயப் பாத்திரத்திலிருந்து அள்ளிவிட்டதைப் பார்த்தால், அப்படித்தான் தோன்றுகிறது. கலைஞருக்குத்தான் டிஜிட்டல் மூளையாச்சே?


அ.அப்துல்காதர், வேலூர்.

மூன்று பதக்கங்கள் முதல்முறையாய், பெருமை அல்லவா? கண்டுகொள்ளவில்லையே நீங்கள்! ஏன்?

நீங்கள் கிளறினால்தானே? பதக்கப்பட்டியலின் கடைக்கோடியில் இருந்த இந்தியாவை ஐம்பதாவது இடத்திற்கு உயர்த்திய இருவெண்கலக்காரர்களுக்கும் (சுசில்குமார், விஜேந்தர்குமார்) இதய நன்றி. சீன உபாயங்களைப் பின்பற்றி நாமும் லண்டன் 2012இல் அதிகப் பதக்கங்களைப் குவிக்க வேண்டும். விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கி, அரசியல் நீக்கி, வீரர்களைத் தட்டிக்கொடுத்தால் சாத்தியம். எங்கே,ஆட்சியாளர்களுக்குப் பதவியைக் காப்பாற்றி கொள்வதே பெரிய ஒலிம்பிக் போட்டிபோல் உள்ளதே!


கே.செந்தில்நாதன், பழனி.

தி.மு.க.வில் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பங்கு என்ன?

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் இல்லாமல் உலகில் ஏதாவது ஓர் அணு உள்ளதா? அதுபோல்தான் இவர்கள். தி.மு.க., என்ற அணுவிற்கு இந்த மூவரும்தான் இப்போது புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்கள்.


அ.சாம்பசிவம், கும்பகோணம்.

ஒருவர் இன்று அரசியலில் மிளிர என்ன செய்ய வேண்டும்?

அய்யா மாதிரி மக்கள் மத்தியிலும் இருக்கலாம்; அம்மா மாதிரி எஸ்டேட்டிலும் இருக்கலாம். அரசியலுக்கு இன்று விவஸ்தையே இல்லை. ஒன்று டிஷ் டி.வி., இன்னொன்று கேபிள் டிவி. எப்படியோ சீரியல்கள் ஓடினால் போதும். இது மக்கள் நினைப்பு.


ஏ.ஜேக்கப், கடலூர்.

பணம் பாதாளம் மட்டும் பாயுமா?

பாராளுமன்றம் வரையிலும் பாயும். வழி தெரியாவிட்டால் வழிகாட்டிட அமர்சிங்கை அழையுங்கள். அவர் அதற்காகவே படைக்கப்பட்டவர்.


எம்.டேவிட்தம்புராஜ், பொள்ளாச்சி.

மேலை நாட்டவர்களிடம் வியக்கும் விஷயங்களுள் ஒன்றைச் சொல்லலாமா?

முன்கூட்டியே திட்டமிடல். அமெரிக்கத் தமிழ் நண்பர் ஒருவர் செப்டம்பர் விழாவிற்கு நீங்கள் வரமுடியுமா என்று கடந்த மாதம் கேட்டார். குறுகிய அறிவிப்பாக இருக்கிறதே! என்றேன். இல்லை நான் சொல்வது செப்.2009இல் என்றார் பாருங்கள். சில கணங்கள் எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.


சி.இளவேனில், கரூர்.

அரசியல் ஆருடங்கள் ஏதும்?

காங்கிரஸ் இயல்பான தேர்தலைச் சந்திக்காமல் முன்கூட்டியே அறிவிக்கும். இது ஜனவரியாக இருக்கலாம்.


ஆர்.விஜயா, கோயமுத்தூர்-1.

அண்மையில் யார் மீதாவது கோபம் வந்தது உண்டா?

ஆமாம். இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் மீது. இலங்கைக்குப் பேட்டுடன் பறந்துபோய் இவரை விளாசுவிளாசு என்று விளாசிவிட்டு வரவேண்டும். இவர் வீசும் பந்துகளைச் சொன்னேன்! அனுபவ ஆட்டக்காரர்கள் கூட இவர் பந்துவீச்சில் மெஸ்மரிசத்தால் கட்டுண்டவர்களைப் போல ஆவது ஏன் என்பது புரியாதபுதிர்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

சீனத்தின் பின்னால் போவது வெட்கக்கேடானது என்று ஆர்க்காட்டார் கம்யூனிஸ்டுகளைத் தாக்கியிருப்பது பற்றி?

ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னார் ஆர்க்காட்டார். கம்யூனிஸ்டுகளின் உண்மை நிறத்தைத் தோலுரிக்கும் பேச்சு இது. வரும் தேர்தலிலாவது கம்யூனிஸ்டுகளின் உண்மை நிறங்களை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.


ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.

ஒரே குசேலன் படப்பேச்சாக உள்ளதே?

ரஜினியின் படம் தோல்வி என்றாலும் அது பேசப்படும். ‘ரஜினியை முன்னிலைப்படுத்தாதீர்கள். இவர் இப்படத்தின் நாயகன் அல்ல. பசுபதியை ஒரேயடியாக மறைக்காதீர்கள். இது நல்லதல்ல’ என்று நான் சொன்னதற்கு சிலர் என்னிடம் வருத்தப்பட்டார்கள்; கோபப்பட்டார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள். குசேலன் படம் ஐந்து பேர்களை மட்டும் கண்ணன்களாக்கிப் பலரைக் குசேலன்களாக்கிவிட்டது என்பதே உண்மை.


பா.மருதமுத்து, ஸ்ரீரங்கம்.

பிள்ளையாரைக் கடலில் கரைக்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும்?

மும்பைக்காரர்களின் பழக்கமிது. களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போடும் பழக்கம் எப்படியோ நுழைந்தது. இப்படிச் செய்ய இந்து மதத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. மும்பையில் கிணறுகள் குறைவு. இடப்பற்றாக்குறை. பார்த்தார்கள். கடலில் போட்டார்கள். மும்பை, பணக்காரர்களின் நகரமா, அவரவர் இதில் தங்கள் ‘சக்தி’யக் காட்ட ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் சுற்றுப்புறச் சூழல் உணர்வு அதிகம் இல்லை. எனவே இது ஒரு பெரிய இயக்கமாகவே ஆகிப்போனது. சென்னையில் ஒரு பிரிவினரை எரிச்சலூட்டவே இப்பழக்கம் மிகைப்படுத்தப்பட்டது. இன்றோ இது மிதமிஞ்சிப் போனது. இதைக் கண்டிக்க அரசியல்வாதிகளுக்கோ அதிகாரிகளுக்கோ பயம், வண்ணம் பூசப்படலாம் என்று. ஓட்டு வங்கி பாதிக்கப்படலாம்; இருக்கைகளுக்கே ஆபத்து வரலாம் என்கிற அச்சம். நம் கடலை நாமே பாழாக்கலாமா? ஆன்மிகவாதிகள் இறங்கி வரட்டும்.


சிவ.முத்துக்கருப்பன், கோவை-2.

நடிகர் சிரஞ்சீவியின் கட்சி எப்படியிருக்கும்?

தனது பெயரில் உள்ள சிரஞ்சீவி தனது கட்சியிலும் இருக்கும் என நம்புகிறார். வாழ்த்துவோம் அவரது நம்பிக்கையை.


மு.விவேகானந்தன், காரமடை.

வரும் தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று வைகோ சொல்லிவிட்டாரே?

அன்ரிசர்வ்ட் கோச்சில் டவல் போட்டுவிட்டார். இனி வண்டி கிளம்பும் வரை நம்பி பிளாட்பாரத்தில் இருக்கலாம்.


டி.பிரகாசம், புதுக்கோட்டை.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்கிறார்களே, உண்மையா?

உண்மைதான்! எ.கா: பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இது மேலும் உறுதியாகிவிட்டது.


டி.வசந்தமாலா, கரூர்.

நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள டி.வி. போதுமா?

டி.வி. கூடத் தேவையில்லை. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை தினசரி ஒரு நடை போய்வாருங்கள். அன்றைய ‘டாப் டென்’ நடப்பு அன்றைக்கே தெரியும்.

29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


One Response to “2008/09/05 Junior Kelvi Pathil”

  1. ARUN

    SUPER…….,

Leave a Reply