Thursday, 28 Aug 2008
சிரஞ்சீவிக்கு சிக்கல்!
நடிகர் சிரஞ்சீவியின் கட்சிப் பெயரான பிரஜா ராஜ்யத்தை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடந்த 26ஆம் தேதி பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்ய கடந்த 26 ஆம் தேதி விண்ணப்பித்தார்.
இதற்கிடையில் பிரஜா ராஜ்யம் பெயரில் கட்சிப் பெயரை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே பெயரில் கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில், ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 4 மாதங்களுக்கு முன்பே மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அவருக்கு பதில் கடிதமும் அனுப்பி உள்ளது.
எனவே சிரஞ்சீவியின் கட்சிப் பெயரையும் பிரஜா ராஜ்யம் என்று வைத்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி தர முடியாது. ஆனாலும் இதுபற்றி பரிசீலித்து அவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில் கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்ய சிரஞ்சீவி திட்டமிட்டிருக்கிறார்.
இதுகுறித்து கட்சி அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த சிரஞ்சீவி, ”முதலில் மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்ய ஆர்வமாக உள்ளேன்” என்றவர், தனக்கு எந்த அரசியல் தலைவரும் எதிரி கிடையாது என்றும், விரைவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.
































