Friday, 22 Aug 2008

Thangabalu attacks K’nataka CM

எடியூரப்பா தமிழகத்தின் இடையூரப்பா!: தங்கபாலு தாக்கு
 
சென்னை: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குழப்பம் விளைவிக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழகத்தின் இடையூரப்பா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழகத்திற்கு வந்திருந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீண்டும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழர்களின் உரிமைக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களின் குடிநீர் திட்டமான அத்திட்டம் தமிழக எல்லைக்குள் தமிழ்நாட்டிற்கு உரிமையான தண்ணீரில் நிறைவேற்றப்படும் திட்டம் என்பதை கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனவே இத்திட்டத்தை தமிழகம் நிறைவேற்ற கர்நாடகாவிடம் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. இரு மாநில எல்லைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தலையிடும் உரிமை அம்மாநிலத்துக்கு எள்ளளவும் கிடையாது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவரது கட்சிக்கு விசுவாசத்தை காட்டிக்கொள்வதற்காக தமிழக பிரச்னையில் இவ்வாறு தலையிடுவதற்கு முன் அவரது கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

பிரச்னை எதுவுமில்லாத தமிழக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பிரச்னையில் பிரதமர் தலையிடவேண்டும் என்றும், அதற்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் எடியூரப்பா மிரட்டல் விடுத்திருப்பது இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கே விடுக்கும் சவாலாகும்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இவ்வாறு தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூரப்பாவாக இருந்து செயல்பட்டு வரும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எ‌ன்று கூறியுள்ளார். 
 

Related Posts Title


Leave a Reply