Wednesday, 20 Aug 2008
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வயது 150!:
மன்மோகன்-சோனியா-கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய மூவருக்கும் சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்ட வழங்க உள்ளது.
மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய தொடங்கி 150 ஆண்டுகளாகின்றன. இதை முன்னிட்டு இந்த மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து பல்வேறு கல்வித் திட்டங்களை பரிமாறிக் கொண்டன.
150ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்கலைக்கழக மானியக்குழுவும் இந்த பல்கலைக்கழகங்களுக்கும் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னைப் பல்கலைக்கழக 150வது ஆண்டுவிழா நிறைவு விழா செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடக்க உள்ளது. விழாவுக்கு தமிழக ஆளுநரும் சென்னைப் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை வகிக்கிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அவர்கள் 3 பேருக்கும் அவர்களின் அரசியல் மற்றும் பொதுநலச் சேவையை பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறது. பட்டங்களை ஆளுநர் பர்னாலா வழங்குகிறார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார்.









































