Wednesday, 20 Aug 2008
ஓகேனக்கல்: பிரதமர் தீர்வு காண உதவவேண்டும்: எடியூரப்பா
தீர்வு ஏற்படாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: பசவராஜ்
சென்னை: ஓகேனக்கல் பிரச்னையைத் தீர்க்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் கூறினார். இதற்கிடையில் பெங்களூருவில் பேட்டியளித்த கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ், ஒகேனக்கல் பிரச்னையில் தீர்வு கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என எச்சரித்துள்ளார்.
கர்நாடக முதல்வராகப் பதவியேற்றப் பின் முதன்முறையாக நேற்று சென்னை வந்தார் எடியூரப்பா. சொந்தக் காரியமாக சென்னை வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
”கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே ஏற்பட்டுள்ள ஒகேனக்கல் பிரச்னையில் தலையிட்டு, தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடு்த்துள்ளேன்.
இரு மாநில முதல்வர்கள் முன்னிலையில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண உதவவேண்டும். ஒகேனக்கல் திட்டத்தில் சுமூகத் தீர்வு காணப்பபடவேண்டும். அண்டை மாநிலங்களுடன் நல்ல உறவு வேண்டும் என்று கர்நாடகா விரும்புகிறது” என்றார்.
ஒகேனக்கல் திட்டத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி பெறவேண்டும் என்றும், இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்தவேண்டும் என்றும் எடியூரப்பா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், எடியூரப்பாவின் இந்தக் கருத்தை நிராகரித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ஒகேனக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீ்ர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ்,
”ஒகேனக்கல் பிரச்னையில் கூட்டு சர்வே நடத்துவது, குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீரை பகிர்ந்து கொள்வது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு தமிழக அரசுக்கு அவகாசம் கொடுத்திருந்தோம். இந்நிலையில் தமிழக அமைச்சர் துரைமுருகன் கூட்டு சர்வே குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி யிருக்கிறார். இவ்விஷயத்தில் மத்திய அரசு அமைதி காப்பது கவலை அளிக்கிறது.
ஒகேனக்கல் விஷயத்தில் நிர்வாக ரீதியாக, அரசியல் ரீதியாக சுமூகத் தீர்வு ஏற்படாவிட்டால் கர்நாடகா தரப்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசு ஒத்துழைக்காவிட்டால் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்.
கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைப் பொறுத்தவரை கூட்டு சர்வே நடத்தும் வரை, தமிழக அரசு திட்டத்தைத் தொடங்கக்கூடாது என்பதே எங்கள் நிலை” என்றார்.









































