Tuesday, 19 Aug 2008
ஆதாரமற்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது!:
மர்மயோகி திரைப்படம் குறித்து கமல் விளக்கம்

சென்னை: மர்மயோகி திரைப்பட தொடக்கவிழா விரைவில் நடைபெறும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் மர்மயோகி. இந்தத் திரைப்படம் தொடர்பாக கமல்ஹாசன் நேற்று ஓர் அறிக்கை வெளிட்டார். அதில் அவர்,
‘சமீபகாலமாக மர்மயோகி திரைப்படம் பற்றி பல புனை சுருட்டுகள் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன. மர்மயோகி பற்றிய பெரும்பாலான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாக இருப்பது எங்களைப் பொருத்தவரை ஆரோக்கியமான விளம்பரமில்லை.
ஆதாரமற்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது என்பதே என் தாழ்மையான கருத்து. நவீன கார்ப்பரேட் யுகத்தில் பத்திரிகை வாயிலாக வியாபாரம் பேசுவது தொழில் ஒழுக்கமல்ல.
பல மில்லியன் டாலர்கள் செலவில் தயாராகம், பன்மொழித் திரைப்படமான மர்மயோகி உலக தரத் திரைப்படமாகவும் உங்களுக்கு பரிமாறப்பட வேண்டும் என்பதில் ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட் சாய்மீரா குரூப்பும் பேரார்வத்துடன் இயங்கி வருகின்றன.
மர்மயோகி திரைப்படத் தொடக்கவிழா பற்றி விரைவில் அறிவிப்போம்’ என்று கூறியுள்ளார்.
மர்மயோகி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.









































