Sunday, 10 Aug 2008
கன்னடம் செம்மொழி அந்தஸ்து பெற தடையா?:
கர்நாடகா புகாருக்கு தமிழக அரசு மறுப்பு

சென்னை: கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவதில் தமிழக அரசுக்கு தனிக் கருத்து எதுவும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் மொழியைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இதனால் கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க தமிழகம் முட்டுக்கட்டைப் போடுவதாகக் கூறி கர்நாடகத்தில், தமிழக பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், ‘கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதை தடுக்க முயல்வது சரியல்ல’ என்று கருத்து கூறினார்.
இந்நிலையில் கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பதில் தமிழக அரசுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘செம்மொழி அந்தஸ்து வழங்க, மத்திய அரசு அதற்கென்று நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். அவருக்கும் தமிழக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பதை தமிழக அரசு எதிர்ப்பது போல் ஒரு நாளேட்டில் செய்தி வந்தது கண்டிக்கத்தக்கது.
ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து அளிப்பது நிபுணர்குழு அளிக்கும் பரிந்துரையின்படி மத்திய அரசு எடுக்கும் முடிவாகும். இதில் தமிழக அரசுக்கென்று தனியாகக் கருத்து ஏதும் இல்லை.









































