Friday, 8 Aug 2008
திட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம்!: துரைமுருகன்
சென்னை: திட்டமிட்டபடி ஒகேனக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகத் தேர்தல் முடியும் வரை இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
கர்நாடகத் தேர்தல் முடிந்து பா.ஜ.க. தலைமையிலான அரசு பதவியேற்றப் பின்னர், மீண்டும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து இரு தரப்பிலும் பிணக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மின்துறை அமைச்சர் ஈசுவரப்பா, ஒகேனக்கல் பகுதி கர்நாடாகவிற்குள வருகிறது. எனவே திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசால் இயலாது என்று கூறியிருக்கிறார்.
அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் எடுயூரப்பா, ஒகேனக்கல் குறித்து மத்திய அரசு கூட்டுச ர்வே நடத்தவேண்டும் என்றும் இருமாநில எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதி யாருக்குச் சொந்தம் என்பது முடிவாக வேண்டும் என்றும் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”கர்நாடக மாநிலத்தைப் போல பரபரப்பான செய்திகளை வெளியிட நாங்கள் தயாரில்லை. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் திட்டமிட்டபடி அமலாக்கப்படும். தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் வழங்கப்படும்” என்றார்.









































