Tuesday, 5 Aug 2008
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கலவரம்:
2 காவல்துறையினர் அடித்துக் கொலை

ஸ்ரீநகர்: அமர்நாத் கோயில் நில விவகாரம் தொடர்பாக காஷ்மீரில் வன்முறை தீவிரமடைந்துள்ளது. ஜம்முவில் 2 காவல்துறையினர் அடித்துக் கொல்லப்பட்டனர். காவல்நிலையங்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.
அமர்நாத் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தை காஷ்மீர் அரசு திரும்ப பெற்றதைத்தொடர்ந்து, ஜம்முவில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. மற்றொரு பிரிவினர் ஸ்ரீநகரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்துவரும் இந்தப் போராட்டம், வன்முறை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
ஜம்முவில் நேற்று ஜோரியான் பகுதியில் உள்ள காவல்நிலையத்தையும் ஜீப்பையும் வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். கூட்டத்தை விரட்ட காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அப்போது 2 காவல்துறையினர் தனியாகச் சிக்கிக் கொண்டனர். அவர்களை அந்தக் கூட்டம் அடித்தே கொன்று விட்டது. மற்ற காவல்துறையினர் விட்டால் போதும் என்று தப்பி ஓடினர். நிலைமையை சமாளிக்க அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
சம்பா மாவட்டத்தில் 1.5 கிமீ நீளத்துக்கு தண்டவாளத்தை பிளந்து விட்டனர் போராட்டக்காரர்கள். இதனால் இரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கதுவா மாவட்ட நகராட்சி அலுவலகம், இரயில்வே காவல்நிலைம் மற்றும் அக்னூர் நகரில் உள்ள காவல்நிலையத்தையும் வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள ஜம்மு, உத்தம்பூரில் நேற்று 3 மணி நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்தப் பிரச்னைக்கு தீர்வுக் காண, பிரதமர் தலைமையில் சர்வகட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.









































