Hiroshima day!
இன்று ஹிரோஷிமா தினம்!

இன்று உலகின் மிகச் சோகமான தினம். அமெரிக்காவின் அகோர போர் பசிக்கு ஜப்பான் தேச மக்கள் இலக்கான நாள்… ஆம், இன்று ஹிரோஷிமா தினம்!
இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவால் இன்றைக்கும் சிரமப்படும் ஜப்பான் மக்களை வீதிகளில் பார்க்கலாம்.
அது ஓர் அழகான, இனிமையான, வாரத் துவக்கமான திங்கள்கிழமை. காலை எட்டு மணி பதினைந்து நிமிடங்கள். ஹிரோஷிமா (1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி) வானத்தில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் விமானங்களில் ஒன்று தரைக்குமேலே 2ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அந்த யுரேனிய எமனை (Little Boy ) தூக்கிப்போட்டது.
எங்கும் அடர்ந்தப் புகை, வெடிப்புச் சத்தங்களை மீறி மனித ஓலங்கள் கேட்டன. குழந்தைகள், பெண்கள் பெரியவர்கள் என்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த நொடியில் உயிரை விட்டனர். பின்னர், கதிர் வீச்சின் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை காலபோக்கில் 2,42,437 என்கிறது ஒரு தகவல்.
சும்மாவிட்டதா அமெரிக்கா. அடுத்த மூன்று நாட்களில் (1945 ஆகஸ்ட் 9) நாகசாகியில், யுரகாமி கதீட்ரல் மீது Fatman என்ற புளூட்டோனியம் குண்டைப் போட்டு பரிசோதித்தது.
அமைதியான, குற்றங்கள் குறைந்த அழகான நகரம் ஹிரோஷிமா.
இந்த அணுகுண்டு அனுபவம் நேர்ந்து 63 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஜப்பானியர்கள் காயங்களை மறந்துவிட்டு காற்றாய் எங்கும் முன்னேறிக் கொண்டேயிருந்தாலும் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ஹிபாகுஷா எனப்படும் மக்களை இப்போதும் அங்கு காண முடிகிறது.
மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலை அன்றைக்கு பெரிய ஹீரோயிசமாகவே அமெரிக்கா கருதியது. இன்றைக்கு வருந்துகிறதா என்பது வேறு விஷயம். ஆனால், இத்தனைப் பேரை ஒட்டுமொத்தமாக சாகடித்ததற்குக் காரணமாக ஒருவருக்குக்கூட எந்த தண்டனையும் இல்லை எனும்போது உறுத்துகிறது மனதில்.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் தேவையா என்று யோசிக்க இது ஒன்றே போதும்!
Related Posts Title
Tags: Atomic Bomb, Fatman, Hiroshima day, Japan, Nagasagi, ஜப்பான், நாகசாகி, ஹிரோஷிமா, ஹிரோஷிமா தினம்