Friday, 1 Aug 2008

2008/08/01 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

மதுரைகுமார், கோயமுத்தூர்.

வீட்டில் மின்சார வேலி அமைத்துள்ள விஜயகாந்தின் செயல் பற்றி?

உண்மை என்று உறுதியானால்தான் இதற்குப் பதில் சொல்ல முடியும். காட்டு விலங்குகளுக்கு அஞ்சியே மின்வேலி அமைக்கப் பெறும். விஜயகாந்தின் வீட்டிற்கு வருபவர்களை விஜயகாந்த் இப்படி மட்டமாக எடைபோட மாட்டார் என்றே நம்புகிறேன்.


சி.பீதாம்பரம், கொடுங்கையூர்.

பாராளுமன்ற உறுப்பினர் பேரங்கள் வெளிவந்தது எப்படி?

படிந்திருக்காது. கேட்டது கிடைத்திருக்காது. இதனால் கொதித்துப் போய் வெளியே சொல்ல முன் வந்திருப்பார்கள். யார் கண்டார்கள்?


கே.ஜெயங்கொண்டான், உடுமலைப்பேட்டை.

தி.மு.க. ஆட்சி எப்படியிருக்கிறது?

நீங்களோ அவர்கள் ஆட்சியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் நானோ, அவர்கள் சொன்ன அந்த ஐம்பது லட்சம் ஏக்கர் (தரிசு) நிலங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். மக்களுக்கு மறதி இருக்கலாம். பத்திரிகையாளர்களுக்கு மறக்காது.

‘டென்ஷன்’ பாலு, அமைந்தகரை.

சேமிப்பதில் அக்கறை இல்லாத நாம் முட்டாளா?

உங்களைப் பற்றிக் குறைத்து மதிப்பிடும் போது எப்போதும் ‘ஒருமை’யுடன் பேசுங்கள். ‘நாம்’ என்று சேர்த்துக் கொள்கிறீர்களே உரிமையோடு!


சு.மே.சுரேஷ், ஏகட்டூர்.

உங்களை கதாநாயகனாகப் போட்டு திரைப்படம் எடுத்தால் படம் பிச்சுக்கிட்டுப் போகும் என்கிறேன் நான்?

படத்தின் பேனர்களும் போஸ்டர்களும் நிச்சயம் பிச்சுக்கிட்டுப் போகும் என்கிறேன் நான்.

எம்.வசந்தமாலா, காரைக்குடி.

பாராளுமன்ற நடவடிக்கைகளைக் கவனித்தீர்களா?

வாழ்வில் இவ்வளவு ஆயிரம் ரூபாய்க் கட்டுகளைப் பார்த்ததே இல்லை!


எல்.ராபர்ட், வேலூர்.

இந்திய ஒலிம்பிக் வாய்ப்புகள் எப்படி, பிரகாசமாக உள்ளனவா?

துப்பாக்கி சுடுதல், குத்துச் சண்டை, டென்னிஸ், வில்வித்தை ஆகியவற்றில் சற்று நம்பிக்கை உள்ளது. ஏமாற்றம் அடையாமல் மனத்தைத் தயார்படுத்திக் கொண்டுவிட்டேன். உலக அளவில் ஏதேனும் கணினிப் போட்டிகளை நடத்தச் சொல்லுங்கள். நம்மவர்கள் பெரும்பாலானவற்றை அள்ளிக் கொண்டு விடுவார்கள்.


எம்.குப்புசாமி, பண்ருட்டி.

ஒரு நடிகையின் வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும்?

நிகழ்காலக் கணவரை விட நல்லவராய் இருந்தால் போதும்!


எஸ்.கமலநாதன், மதுரை.

மனைவி, அம்மா இவர்களில் யாருக்கு அதிகமாகப் பயப்பட வேண்டும்?

பதில் சொல்வதில் நான் சீனியராக்கும் என்று நினைத்தேன். கடைசியில், ஒரேயொரு கேள்வி கேட்டு எனது கையை முடமாக்கி விட்டீர்களே? எத்தனை நாளாய் இந்தக் கங்கணம்?


ஆர்.சாகுல்ஹமீது, தொண்டி.

ஓர் எழுத்தாளருக்கு எப்போது கோபம் வரும்?

அந்த எழுத்தாளரின் படைப்பு திரும்பி வரும்போது, ‘மெனிமோர் ஹேப்பிரிட்டர்ன்ஸ்’ சொன்னால் கோபம் வரும். இதையே அச்சான இதழைக் காணும் போது சொன்னால் கோபம் வராது.


மா.எழில், தஞசாவூர்.

அமைச்சர்களுக்குப் பிடிக்காத அரசு ஊழியர்கள் பந்தாடப்படுகிறார்களே?

இப்போதெல்லாம் அரசாங்க ஊழியம் ஒரு பரமபத சோபன படம்தான். அதில் யாருக்கு எப்போது ஏணி வரும். யாருக்கு எப்போது பாம்பு வரும் என்று சொல்ல முடியாது.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

சென்னைக்கு இன்னொரு காவல்துறை ஆணையர் பதவி தேவையா?

அவசியம்தான். நகர் பெருத்து வீங்கித் தள்ளி விட்டது. குற்றங்கள் மலிந்துவிட்டன. பிரித்துக் கொண்டு பார்க்கும்போது உன்னிப்பும் பெருகும். குற்றங்கள் குறையும். ஜாங்கிட் அரசிற்குக் கிடைத்த நல்ல ஜாங்கிரி. குற்றங்களுக்கு எதிராகப் பொங்கி எழும் எரிமலை. புறநகரச் சமூக விரோதிகளின் வால்கள் இனி ஒட்ட நறுக்கப்பட இருக்கின்றன, பார்த்துக் கொண்டே இருங்கள்.


எஸ்.இருதயராஜ், வடபழனி.

சைக்கோ கொலையாளி காவற்காரர்களையே கொல்லக் காரணம்?

சைக்கோக்களின் செயல்களுக்கு யார் விளக்கம் தர முடியும், எப்படி இதை நியாயப்படுத்த முடியும்? ஒரே ஒரு சிறு நன்மை. இரவுக் காவற்காரர்கள் இப்போதெல்லாம் தூங்குவதே இல்லை!


எஸ்.மணி, விருத்தாசலம்.

அன்புமணி ராமதாசிடம் உங்களைக் கவர்ந்த விஷயம்?

சாத்தியமில்லாத விஷயம் என்றாலும் கூட புகையிலை இல்லாத இந்தியா என்கிற கோரிக்கை இருக்கிறதே அது!


ஆர்.நந்தகுமார், திருத்தணி.

புதிய இயக்குநர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்?

சுப்பிரமணியபுரம் பட இயக்குநர் சசிகுமாரைப் சொல்லலாம். சரக்கு உள்ளது. ஆனால் மிடுக்கு இல்லை. இரண்டும் பிடிக்கின்றன.


ஏ.அப்துல்ஹமீது, பள்ளப்பட்டி.

கச்சத் தீவுப் பிரச்னையில் தமிழக முதல்வர்களின் பங்களிப்பு என்ன?

கருணாநிதி காலத்தில் தாரை வார்க்கப்பட்டது. இதை மீட்பேன் என்று சொன்ன ஜெயலலிதா தம் பதவிக் காலத்தில் எதையும் சாதிக்கவில்லை. எனவே இருவரிடமும் பிழை இருக்கிறது.


மா.அருள்ராஜ், கவுந்தர்பாடி.

வயதுக்கு வந்த பெண்கள் சிலர் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்களே, ஏன்?

வாழ்க்கையை அவரச கதியில் அனுபவித்துப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம்தான். வீட்டை விட்டு ஓடும் பெண்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதைவிட வீதியில் நிற்க நேரிடுவதே அதிகம்.


க.கலையரசு, கீழச்சீவல்பட்டி.

கையில் பணம் கிடைத்தால் கண்டதையும் வாங்குகிறானே என் நண்பன்?

எவனொருவன் தேவையல்லாத பொருள்களை வாங்கிச் செலவு செய்கிறானோ அவன் மிக அவசியமான பொருள்களைக் கூட விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.


வி.அருள்நம்பி, கஞ்சனூர்.

நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற இயற்கை மருந்துகள் எவை எவை?

சுத்தமான நீர்! இயற்கையான காற்று! வியர்வை ஏற்படும் அளவுக்கு உழைப்பு! ருசி அறியாத பசி, இவைதாம் நோய்கள் வராமல் காக்கும் இயற்கை மருந்துகள். மனமது நிலையானால் மருத்துவங்கள் தேவையில்லை!

25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply