Monday, 28 Jul 2008
சென்னை அண்ணா மேம்பாலத்தை, 3 இரயில்களை தகர்க்க சதி:
சென்னையில் 3 தீவிரவாதிகள் கைது

சென்னை: தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக மொத்தம் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு நேரவிருந்த மிகப்பெரிய ஆபத்து முறியடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.
ஆயினும் தமிழகம் முழுக்க எச்சரிக்கை உணர்வுடன்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.
பெங்களூரு, அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தீவிர தீவிரவாதிகள் வேட்டையில் இறங்கிய காவல்துறை நெல்லையில் வைத்து அப்துல் கபூர் என்ற தீவிரவாதியை நேற்று முன்தினம் கைது செய்தது. அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பிற்கான உதிரிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், கபூர் தெரிவித்த தகவல்படி திருநெல்வேலியைச் சேர்ந்த ஹீரா என்கிற செய்யது காசிம்(27), பழனியைச் சேர்ந்த உமர் (24), மண்ணடியைச் சேர்ந்த காதர் (25) ஆகிய மூவரையும் சென்னையில் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மண்ணடியில் இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர்.
இந்தச் சதி காரணமாக தெளபீக் உள்ளிட்ட சிலரை காவல்துறை தேடிவருகின்றது.
தலைமறைவாக இருக்கும் தெளபீக்தான் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதாக காவல்துறை கருதுகிறது. கூட்டாளிகள் மாட்டிக்கொண்டதையடுத்து அவன் வெளிநாட்டுக்கு தப்பிக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
பிடிபட்ட தீவிரவாதிகளிடம், தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஆகஸ்டு 15க்கு முன்பாக சென்னை அண்ணா மேம்பாலத்தை குண்டுவைத்து தகர்க்கவும், சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்து புறப்படும் மூன்று ரயில்களை தகர்க்கவும் சதித்திட்டம் தீட்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.
சென்னை மற்றும் தமிழகம் முழுக்க இவர்களின் கூட்டாளிகளை தேடுவதில், வெடிபொருள்களை கண்டறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.









































