Saturday, 26 Jul 2008
பெங்களூரு: மேலும் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது
பெங்களூரு: பெங்களூருவில் கோரமங்களா போரம் மால் அருகே இன்றும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது செயலிழக்கச் செய்யப்பட்டது.
கோரமங்களாவில் போரம் வர்த்தக வளாகத்தின் எதிர்புறம் உள்ள ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல் அருகே இன்று காலை 11 மணிக்கு இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்றும் போரம் மால் அருகே ஒரு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் இன்றும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து ஒசூர் ரோட்டில் கோரமங்களா பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மடிவாளா சில்க்போர்ட் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. அதே போல எம்.ஜி. ரோட்டிலிருந்து மடிவாளா நோக்கி வரும் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இன்று கண்டுபிடிக்கப்பட்ட குண்டும் நேற்று வெடித்த குண்டு வகையைச்சேர்ந்ததுதான் என பெங்களூரு காவல் ஆணையர் சங்கர் பிதாரி கூறியுள்ளார்.
இன்றும் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகர் முழுவதும் சோதனைகள் நடந்து வருகின்றன. இதனால் பெங்களூருவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.









































