Wednesday, 23 Jul 2008
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: சாதனைக்கு கிடைத்த வெற்றி- கருணாநிதி பேட்டி
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு பெற்றுள்ள வெற்றி, 4 ஆண்டுகாலம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும், சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதி வீட்டு முன்பு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
இதன்பின்பு முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதிலும் வருமாறு :
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?
நான்காண்டு காலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்கள் இவைகளுக்கு கிடைத்த வெற்றி இது என்ற மகிழ்ச்சி எனக்கு.
இந்த வெற்றியின் மூலம் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படுகிறதா?
மன்மோகன்சிங் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம், அவர்களுக்கு ஆதரவாக நம்பிக்கை இருக்கிறது என்ற அளவில் நிறைவேறி இருப்பதைக் கண்டு நாங்கள் அது சேதுசமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவு என்று சொன்னால் நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கை அது பாதிக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் இப்போது அதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவடையுமா?
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தில் எவ்வப்போது என்னென்ன பணிகளை நிறைவேற்றுவது என்பதற்கான காலவரையறை வகுத்திருப்பதையே நான் பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதற்கான அலுவலகமே, திறக்கப்பட்டு விட்டதும் ஏடுகளில் வந்துள்ளது. இவ்வளவிற்கும் பிறகு சிலர் அந்த திட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
ஒகேனக்கல் திட்டத்தை கர்நாடக அரசிலே உள்ள எடியூரப்பா சட்ட விரோதம் என்று சொல்லியிருக்கிறாரே?
அது சட்டவிரோதமல்ல, அனைத்தையும் ஆய்வு செய்து ஏற்கனவே அது முடிவு செய்யப்பட்டுவிட்டது.
இந்த வெற்றிக்குப் பிறகு இடதுசாரிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
நேற்று பா.ஜ.க. தலைவர் அத்வானி இந்த தீர்மானத்தின் மீது பேசிய பேச்சை அவர்கள் கூர்ந்து படித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அத்வானி பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று சொல்லியிருக்கிறார். இதில் இருந்து அவர்களை அடையாளம் கண்டுகொண்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.
இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் மத்திய அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
இருக்கிறது.
நீங்கள் டெல்லிக்கு செல்கின்றீர்களா?
நாளை செல்கிறேன்.
இடதுசாரி இயக்கங்கள் தமிழ்நாட்டில் இனி என்ன நிலை எடுப்பார்கள்?
தமிழ்நாட்டில் அதைப்பற்றி எந்த பிரச்னையும் இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை.
நாளை டெல்லி செல்லும்போது பிரமரிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி நேரில் பேசுவீர்களா?
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தனைபேரும் நேரில் பிரதமரை சந்தித்து மீனவர்கள் பிரச்னை பற்றி பேசியிருக்கிறார்கள். நானும் பேசுவேன்.
சோனியாகாந்திக்கும், பிரதமருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டீர்களா?
தெரிவித்துவிட்டேன்.
இந்த வெற்றிக்குப் பிறகு கனிமொழிக்கு மந்திரிசபையில் இடம் வேண்டும் என்று கேட்பீர்களா?
இப்படிப்பட்ட அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
பலகோடி ரூபாய்கள் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கியதாக அவையிலேயே காட்டியதைப்பற்றி?
அப்படியெல்லாம் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுவிட்டார்கள்.
இது ஜனநாயக படுகொலை இல்லையா? இதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுமா?
சபாநாயகரே விசாரணை பற்றி சொல்லியிருக்கிறாரே. பணம் வாங்கப்பட்டிருந்தால் அது ஜனநாயக கொலைதான்.









































