Friday, 18 Jul 2008

2008/07/18 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஏ.பீதாம்பரம், கொடுங்கையூர்.

குடும்ப நல நீதிமன்றங்களின் தேவை அதிகரித்து வருவது எதை காட்டுகின்றன?

ஆண்களின் ஆதிக்க உணர்வையும், பெண்கள் கையில் பொருளாதாரத்தைக் கொடுத்து சுதந்திரத்தையும் அளித்தால் அது எங்கு போய் முடியும் என்கிற எல்லைக் கோ(ர்)ட்டையும்!


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

பாரதிய ஜனதா சுறுசுறுப்பாகிவிட்டதுபோல் தெரிகிறதே!

ஏதோ இரண்டு மோதி இரத்தம் வடியும்போது ஏதோ ஒன்று அதைச் சுவைக்க முன் வருமாமே, அந்தக் கனவு தான் ஞாபகத்திற்கு வருகிறது!


ஆ.பாபு, நெமிலி.

பெட்ரோல் விலையைச் சமாளிக்க மக்கள் இனி இரயில்களிலும், பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்கிறாரே, ப.சிதம்பரம்?

நாடாளுமன்றத் தேர்தலே வரவில்லை. அதற்குள் சிவகங்கை தொகுதி முடிவு தெரிந்து போச்சே! சம்பந்தா சம்பந்தாமில்லாத பதில் என்கிறீர்களா? இல்லை சம்பந்தம் இருக்கிறது!


எல்.நித்யா, சென்னை-60.

மகளிர்க்கு எபபோது முப்பத்து மூன்று சதவிகித இடஒதுக்கீடு கிடைக்கும்?

நாட்டிலுள்ள எல்லா கட்சிகளும் அ.இ.அ.தி.மு.க. மாதிரியாக வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம்! அங்கே பாரும், முப்பத்து மூன்று சதவிகிதம் கூட அல்ல; ஐம்பது சதவிகிதம் அமலாக்கம்! அதுவல்லவோ பாரத மகளிரைப் போற்றும் பாரதப் பண்பாடு.


பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

சென்னை விமான நிலையங்களில் சுங்கவரி கட்டுபவர்களுக்கு உதவியாகக் கத்தை கத்தையாகப் பணத்துடன் திரிபவர்கள் என்ன ஆனார்கள்?

இப்போதெல்லாம் இங்கு எல்லாம் கிடைக்கின்றன என்பதால் பலரும் அள்ளிக்கொண்டு வருவது இல்லை. வந்தாலும் நம் சுங்க இலாகா சலுகைகளை நிறையத் தந்து அனுப்பிவிடுகிறது. எனவே, இவர்கள் இப்போது கோயம்பேடு மார்க்கெட்டுகளுக்கு நகர்ந்துவிட்டார்கள். இலட்ச ரூபாய்க்கு மாதத்திற்கு 12000 ரூபாய் வட்டி (அடப்பாதகர்களா?) கோயம்பேட்டில் 24 மணி நேர வங்கிகளைத் திறந்து முறையாகக் கடன் கொடுத்தால் வியாபாரிகள் வளர்வார்க்ள. இல்லாவிட்டால் நொந்து போய்க் காலிசெய்து விடுவார்கள்.


சிவ.முத்துக்கருப்பன், கோயம்புத்தூர்.

தினமும் இரவில் படுக்கப் போகுமுன் வடிவேலுவின் காமெடிக் காட்சிகளைப் பார்க்காமல் உறங்குவதில்லை. என்னைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

வேண்டாம். நான் மனம் திறந்த அபிப்பிராயத்தைச் சொன்னால் வருந்துவீர்கள். நானும் எப்போதாவது பார்ப்பது உண்டு. வடிவேலுவின் காமெடிகள் பல சிறு பிள்ளைத்தனமாகவும், அபத்தக் களஞ்சியங்களாகவும், ஸ்டீரியோ நடிப்பு இரகமாகவும் இருக்கின்றன. எனக்கு அபூர்வமாகத்தான் சிரிப்பு வருகிறது. வடிவேலுவின் காமெடிக் காட்சிகளைப் பார்த்தால் எனக்குத் தூக்கம் வர மறுக்கிறது. ஒரு நல்ல கலைஞர் இப்படி வீணடிக்கப்படுகிறாரே என்கிற கவலையில்!


எஸ்.மணி, விருதுநகர்.

கம்யூனிஸ்டுகள் உங்கள் பார்வையில்?

உள் விரிசல்களை அதிகரித்துக் கொண்டு உலக மயமாக்கலைப் பேசுபவர்கள்.


பி.சங்கரன், கோயம்புத்தூர்.

இன்றைய அரசியலில் பதவி சுகத்தை யார் அனுபவிக்கிறார்கள்?

நிற்க முடிந்த இளைஞர்கள் எல்லாம் நின்றுகொண்டு இருக்கிறார்கள். உட்கார முடியாத முதியவர்கள்தாம் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.


வி.சுதாகரன், மதுரை.

இன்றைய பயிர் நிலங்கள்?

அவை நெற்களங்களல்ல! போர்க்களங்கள்! இந்தப் போர்க்களங்களில் பல உழவர்கள் மாண்டு போகிறார்கள்.


ஏ.ஆர்.எஸ், வேலூர்.

வாரக் கடைசியில் மறைவிடங்களில் சாப்ட்வேர் என்ஜினியர்கள் குத்தாட்டம் போடுவது பற்றி?

சாப்ட்வேர்கள் வெறும் அண்டர்வேர்களோடு இருப்பது எனக்கு அநாகரிகமாயப்படுகிறது. இந்தக் குத்தாட்டங்களால் அவர்கள் தங்கள் உடையை மட்டும் இழக்கவில்லை; கூடவே உடைமைகளையும் இழக்கிறார்கள். அதாகப்பட்டது நம் பாரம்பரியம், நம் பண்பாடு!


கே.சாமி, அம்பத்தூர்.

குடும்பத் தலைவனுக்கு எப்போது மதிப்பு?

சம்பளத் தினத்தில் மட்டும் இருபத்தோரு குண்டுகள் முழங்க வரவேற்பு இருக்கும். மற்ற தினங்களில் இந்த குண்டுகளின் எண்ணிக்கை கூடும். ஆனால் அவை வரவேற்பாக இரா; என்கவுன்டர்களாக இருக்கும்.


அ.கண்ணன், சூளைமேடு.

தோனிக்கு ஓய்வு அளித்தது நியாயமா?

தோனியே ஓய்வு கேட்டார் என்கிறார்கள். கராச்சியில் பேட்டி அளித்த தோனி, கிரிக்கெட் வீரர்கள் மீது அதிகமான ஆட்டச் சுமைகள் திணிக்கப்படுகின்றன என்று பேசியது நினைவிற்கு வருகிறதா? மருத்துவர்கள் வருமானத்திற்காக இல்லாவிட்டாலும் நோயாளிகளின் நன்மைக்காகவும் நலனுக்காகவும் எப்படி உழைக்கிறார்கள். இந்த மனநிலையுடன் தேச நலனுக்காகத் தோனி ஆடியிருக்க வேண்டும். அவசரப்பட்ட அரை வேக்காடு முடிவு!


எம்.ஹபிபுல்லா, வேலூர்.

துபையில் கலவரத்தில் ஈடுபட்ட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி?

வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்கள் துபையில். என்ன, நம்மூர் என நினைத்தார்களா? எதிர்ப்பைக் காண்பிக்க, அதிருப்தியை வெளிப்படுத்த, குறைகளை வெட்ட வெளிச்சமாக்க, அரசின் கவனத்தை ஈர்க்க எத்துணையோ வழிகள் இருக்க, வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தி நாட்டின் கெளரவத்திற்கு இழுக்குத் தேடித் தந்துவிட்டார்கள். சிலரது வன்முறையால் எத்துணையோ பேர் திருப்பியனுப்பப்பட இருக்கிறார்கள். பாவம்!


எம்.உதயன், சென்னை.

கொடுத்த கடனை வசூலிக்க சில தனியார் வங்கிகள் குண்டர்களை வைத்துள்ளது மாறியிருக்கிறதா?

இன்னும் முழுமையாக இல்லை. இந்த வங்கிகள் தண்டத்தில் போகாமல் இருக்க, இந்தக் குண்டர்கள் தேவைப்படுகிறார்கள். கொடுக்கும்போது ரோஜா நடுவே வைத்துக் கொடுத்துவிட்டு, அதை வாங்கும் போது முட்களால் அடிப்பது வேதனையான விஷயம்.


செந்தமிழ்செல்வன், ஈரோடு.

உளியின் ஓசை படம் எப்படி?

நாயகன் வினித் பொருத்தமானவரில்லை. கலைஞரும் காலத்திற்கு ஒவ்வாத வசனகர்த்தாவாக ஆகிவிட்டார். திரையுலகம் எந்த ஒரு படைப்பாளிக்கும் ஒரு காலகட்டத்தை நிர்ணயிக்கிறது. அதைத் தாண்டி எவரும் ஒளிவிடாமல் பார்த்துக் கொள்வது விந்தைதான்!


டி.ஜெகதீசன், காஞ்சிபுரம்.

அமைச்சர் பூங்கோதை மீது நடவடிக்கையெடுத்த கலைஞர், டி.ஆர்.பாலு மீது நடவடிக்கை எடுக்காததேன்?

கப்பலே கவிழ்ந்தாலும் டி.ஆர்.பாலு என்கிற கப்பல் மட்டும் தரை தட்டாது. கப்பல் போக்குவரத்து என்பது ஒரு பெரிய போக்குவரத்து! நாட்டில் அந்தப் போக்குவரத்து நின்றால், அதையொட்டிய பல போக்குவரத்துகளும் அடியோடு முடங்கிப் போகும்.


கோ.பூமிநாதன், விருத்தாச்சலம்.

காடுவெட்டி குருவைக் கைது செய்தது பழிவாங்கும் முயற்சிதானே?

ஒரு சிறுத்தை வலிய வந்து கூண்டுக்குள் விழுகிறது விடுவார்களா? குணசேகரன் என்பவர், தாக்கப்பட்ட விஷயத்தில் முதல் தகவல் அறிக்கை காவல்துறைக்கு வலுவான ஆதாரமாகிவிட்டது. காடுவெட்டியார் பேச்சோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். காதைக் கிழிய வைத்திருக்க வேண்டாம்!


ஏ.சுமதி, மதுரை.

வழக்கறிஞர் தொழிலில் உள்ளவர்கள் தாம் சிவில் நீதிபதிகளாக வேண்டும் என்கிற வழக்கறிஞர்களின் கோரிக்கை நியாயம்தானே?

நியாயம்தான். இதற்காகப் பெரும் போராட்டம் ஏதும் நடத்த வேண்டாம். நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டாம். இதனால் நீதித்துறைக்கு ஏற்படும் பாதிப்பைவிட இவர்களது கட்சிக்காரர்களுக்கு ஏற்படும் இழப்பே கடுமையானது. சில மாணவர்களைப் போல வழக்கறிஞர்களும் வேலை நிறுத்தத்திற்கு அடிக்கடி காரணம் தேடி நீதிமன்றத்தைப் புறக்கணிப்பது அழகாக இல்லை!


எம்.குணசேகர், பழனி.

குசேலன் படம் வெற்றியைப் பெறுமா?

மலையாளத்தின் ‘கதை பறையும்போள்’ என்ற கதையின்படி நடிக நண்பருக்கு (சீனு) முக்கியத்துவம் குறைவு. ஆனால் தமிழ் இயக்குநர் வாசு ஏக உல்டா செய்து, இதை ரஜினி படமாக ஆக்கியிருக்கிறார். இச்சேர்ப்புகள் கதையோடு ஒட்டினால் படம் எடுபடும். இல்லாவிட்டால் கடினம். படநாயகன் பசுபதியை அநியாயமாய் ஓரங்கட்டியதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.

11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply